நற்றிணை - 382. நெய்தல்
கானல் மாலைக் கழி நீர் மல்க, நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த, ஆனாது அலைக்கும் கடலே; மீன் அருந்தி, புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி, |
5 |
ஆர் உயிர் அழிவதுஆயினும்- நேரிழை!- கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்பு நீர்த் தண்ணம் துறைவன் நாண, நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே. |
நேர்மையான கலன்களையுடைய தோழீ! பரவுதல் கொண்ட கடல்நீரின் தண்ணிய துறைக்குத் தலைவராகிய நங்காதலர்; களவொழுக்கம் மேற்கொண்டு பலகாலும் இங்கு வருதலால் அவரும் நாணமெய்தி இனி இவ்விடத்தை நோக்காதபடி நமக்குப் பகைவராயுள்ள ஏதிலாட்டியரும் சேரியம் பெண்டிரும் ஒருசேரத் தூற்றுகின்ற பழிச்சொல்லுத்தான் மிகுதியாக உண்டன்றே!; ஆதலின் மாலைப் பொழுதிலே கடற்கரைச் சோலை சூழ்ந்த கழியிடத்து நீர் (உவா) வெள்ளமாகிப் பெருக; நீல நிறத்தையுடைய நெய்தலின் நிரையாகிய இதழ்கள் குவிய; அமைந்திராது அலையெழுந்துலாவுங் கடலகத்து மீன்களைத் தின்னுகின்ற பறவையின் கூட்டம் கானலின் கண்ணேயிருக்கின்ற தம்தம் கூட்டினிடத்தே ஒருசேரச் சென்று புகுதா நிற்றலையுடைய மாலையம் பொழுதை நினையாராய்; நம்மைக் கைவிட்டு அகன்ற அவர் முன்பு தங்கியிருந்த விடத்து; நாம் இருந்து பிரிவுக்கு மிக வருந்திப் பெறுதற்கு அரிய வுயிர் அழிந்துபோவதாயிருப்பினும்; அந் நோய் புறத்தார்க்குப் புலனாகாதபடி மறைத்துக்கொள்ளுதல் வேண்டும்; ஆதலால் யான் புலம்பாது ஆற்றியிருப்பேன்காண்!; அது காரணமாக நீ வருந்தாதேகொள்!
ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாளாகி நின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினாட்குத் தலைமகள் சொல்லியது. - நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 382. நெய்தல், நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, இருந்து, நீர், சங்க, எட்டுத்தொகை