நற்றிணை - 381. முல்லை
'அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்' எனப் பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்; கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல, நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை |
5 |
யாங்கனம் தாங்குவென் மற்றே?- ஓங்கு செலல் கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி, ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க, தேர் வீசு இருக்கை போல, மாரி இரீஇ மான்றன்றால் மழையே. |
10 |
தலையெடுத்து நடக்கும் உயர்ந்த விரைந்த நடையையுடைய களிற்றியானைப் படையும் விரைந்து செல்லும் குதிரைப் படையுமுடைய அஞ்சியென்பான் குளிர்ந்த உள்ளத்தால் ஆராய்ந்து நீண்டகாலம் தன்பெயர் விளங்கி நிற்குமாறு இரவலர்க்குத் தேர்களைப் பரிசு கொடுக்க இருக்கின்ற நாளோலக்கம் போல; மேகம் மழை பெய்யத் தொடங்கி மாறாது ஒரு தன்மையாய்ப் பெய்யாநின்றது; என் காதலர் வருவேமென்ற இப்பருவத்தில் அவர் வாராமையாலே தாங்குதற்கரிய துன்பத்தை நுகர்தலின் அறிகுறியாக இதுகாறும் யான் இறந்தொழியின் அவர்பால் அன்புடையேன் என்பது உண்மையாகும்; அவ்வாறு இறந்தொழியாமையின் அன்பிலேன் அல்லேனோ?; அவ்வண்ணம் அன்பில்லாதேனை அவர் அருளாராயினும் கரையை மோதியோடுகின்ற கான்யாற்றின் இடிகரையில் வேர்களெல்லாம் அலசப்பட்டுத் தோன்றிக் காற்றாலலையும் மாமரத்தின் அழகிய தளிர்போல; நடுங்குதல் நீங்காத நெஞ்சுடனே இத்துன்பத்தை எவ்வாறு தாங்கவல்லேன்?
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் பருவ வரவின்கண் சொல்லியது. - அவ்வையார் >
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 381. முல்லை, இலக்கியங்கள், முல்லை, நற்றிணை, அவர், எட்டுத்தொகை, சங்க