குறுந்தொகை - 269. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவி, "எந்தையும் யாயும் ஈண்டு இப்போது இலராதலின் தலைவன் என்னைக் காண்டற்கு இஃது எளியசெவ்வியென யாரேனும் அவன்பாற் சென்று சொல்லின் நன்றாம்" என்று தோழிக்குக் கூறியது.)
சேயாறு சென்று துனைபரி யசாவா துசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல வயச்சுறா எறிந்த புண்தணிந் தெந்தையும் நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய |
5 |
உப்புவிளை கழனிச் சென்றனள் இதனால் பனியிரும் மரப்பிற் சேர்ப்பற் கினிவரி னெளியள் என்னும் தூதே. |
|
- கல்லாடனார். |
தோழி! என் தந்தையும் வலியை உடைய சுறாமீன் வீசியதனால் உண்டான புண் ஆறி மீண்டும் மீன் வேட்டை ஆடும் பொருட்டு நீல நிறத்தை உடைய பெரிய கடலினிடத்துப் புகுந்தனன்; என் தாயும் உப்பை விற்று வெண்ணெல்லை வாங்கி வரும் பொருட்டு அவ்வுப்பு உண்டாகின்ற அளத்திற்குச் சென்றாள்; அதனால்! குளிர்ச்சியை உடைய பெரிய பரப்பாகிய கடற்கரையை உடைய தலைவனுக்கு இப்பொழுது இங்கேவந்தால் தலைவி எளிதில் கண்டு பெறுதற்குரியள் என்னும் தூது மொழியை நெடுந்தூரமாகிய வழியைக் கடந்துபோய் விரையும் நடையினால் வருந்தாமல் கூறி உசாத் துணையாவாரைப் பெற்றால் மிக நல்லதாகும்; இஃது என் விருப்பம்.
முடிபு: ‘எந்தையும் கடல் புக்கனன்; யாயும் சென்றனள்; அதனால் இனி வரின் எளியள்' என்னும் தூதினைச் சேர்ப்பற்குக் கூறி உசாவுநர்ப் பெறின் நன்றுமன்.
கருத்து: தலைவன் என்னோடு அளவளாவுதற்கேற்ற செவ்வி இது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 269. நெய்தல் - தலைவி கூற்று, தலைவி, உடைய, இலக்கியங்கள், யாயும், நெய்தல், கூற்று, குறுந்தொகை, தலைவன், என்னும், கூறி, பொருட்டு, பெரிய, அதனால், இஃது, சங்க, எட்டுத்தொகை, சென்று, புக்கனன், உப்பை, சென்றனள்