குறுந்தொகை - 251. முல்லை - தோழி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்காலம் வந்த பொழுது தலைவி வருந்த, "இது கார்காலமன்று; இப்பொழுது பெய்வது காலம் அல்லாத காலத்துப் பெய்யும் மழை" என்று தோழி வற்புறுத்திக் கூறி ஆற்று வித்தது.)
மடவ வாழி மஞ்ஞை மாயினம் கால மாரி பெய்தென அதனெதிர் ஆலலு மாலின பிடவும் பூத்தன காரன் றிகுளை தீர்கநின் படரே கழிந்த மாரிக் கொழிந்த பழநீர் |
5 |
புதுநீர் கொளீஇய வுகுத்தரும் நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே. |
|
- இடைக்காடனார். |
தோழி! சென்ற கார்காலத்தில் பெய்யாது எஞ்சி இருந்த பழைய நீரை புதிய நீரைக் கொள்ளும் பொருட்டு சொரிகின்ற அயன்மையை உடைய மேகத்தினது ஒலிக்கின்ற ஓசையைக் கேட்டு மயில்களாகிய கரிய கூட்டங்கள் பருவத்துக்குரிய மழை பெய்தது என்று தவறாக எண்ணி அம் மழைக்கு எதிரே ஆடுதலைச் செய்தன; பிடாவும் மலர்ந்தன; அவை அறியாமையை உடையன; இது கார்காலம் அன்று; ஆதலின்; நின் துன்பத்தை விடுவாயாக.
முடிபு: இகுளை, கேட்டு மஞ்ஞையினம் ஆலின; பிடவும் பூத்தன;மடவ; காரன்று; நின் படர் தீர்க.
கருத்து: இது கார்காலம் அன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 251. முல்லை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கார்காலம், கூற்று, குறுந்தொகை, முல்லை, கேட்டு, அன்று, நின், பூத்தன, சென்ற, எட்டுத்தொகை, சங்க, பிடவும்