குறுந்தொகை - 252. குறிஞ்சி - தலைவி கூற்று
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனை ஏற்றுக் கொண்ட தலைவியை நோக்கி, "நீ சிறிதும் மாறுபாடின்றித் தலைவனை ஏற்றது என்?" என்ற தோழிக்கு,"அவன் பழியஞ்சுபவன்; ஆதலின் அவன் பழியை எடுத்துரையாது உடம்பட்டேன்" என்று தலைவி கூறியது.)
நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த கொடிய னாகிய குன்றுகெழு நாடன் வருவதோர் காலை யின்முகந் திரியாது கடவுட் கற்பி னவனெதிர் பேணி மடவை மன்ற நீயெனக் கடவுபு |
5 |
துனியல் வாழி தோழி சான்றோர் புகழு முன்னர் நாணுப பழியாங் கொல்பவோ காணுங் காலே. |
|
- கிடங்கிற் குலபதி நக்கண்ணனார். |
தோழி! நெடுமையையும் திரட்சியையும் உடைய தோள்களில் உள்ள வளைகளை நெகிழச் செய்த கொடுமையை உடையவனாகிய குன்றுகள் பொருந்திய நாட்டை உடைய தலைவன் பரத்தையர் வீட்டினின்று வருங்காலத்தில் இனிய முகம் வேறுபடாமல் தெய்வத் தன்மையை உடைய கற்பினால் அவனை எதிர்முகமாகச் சென்று உபசரித்து நீ! நிச்சயமாக அறிவில்லாயாயினை என்று வினாவி வருத்தமுறாதே; அறிவானமைந்த பெரியோர் தம்மைப் புகழ்வதற்கு முன்னரும் நாணுவர்; அத்தகையோர் ஆராயு மிடத்து பழிச் சொல்லை யாம் கூற எங்ஙனம் பொறுப்பர்?
முடிபு: தோழி, மடவை நீயெனக் கடவுபு துனியல்; சான்றோர் புகழு முன்னர் நாணுப; பழி யாங்கு ஒல்ப?
கருத்து: தலைவன் பழிக்கு அஞ்சும் இயல்பினனாதலின் நான் அவனை ஏற்றுக் கொண்டேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 252. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, குறிஞ்சி, தோழி, உடைய, குறுந்தொகை, புகழு, சான்றோர், முன்னர், அவனை, நாணுப, தலைவன், நீயெனக், சங்க, எட்டுத்தொகை, ஏற்றுக், அவன், கடவுபு, மடவை, துனியல்