முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.033.திரு அன்பிலாலந்துறை
1.033.திரு அன்பிலாலந்துறை
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. அன்பில் என வழங்கப்பெறும்.
சுவாமிபெயர் - சத்திவாகீசர்.
தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
349 |
கணைநீ டெரிமா லரவம் வரைவில்லா இணையா வெயின்மூன் றுமெரித் தவிறைவர் பிணைமா மயிலுங் குயில்சேர் மடவன்னம் அணையும் பொழிலன் பிலாலந் துறையாரே. |
1.033.1 |
நீண்டு எரிகின்ற தீயையும் திருமாலையும் அம்பாகக் கொண்டு பூட்டி வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கட்டிய மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் எரித்த இறைவர், தத்தம் பெடைகளோடுகூடிய பெரிய மயில்களும், குயில்களும் சேர்ந்து வாழும் அன்னங்களும் உறையும் பொழில் சூழ்ந்த அன்பிலாலந்துறையார் ஆவார்.
350 |
சடையார் சதுரன் முதிரா மதிசூடி விடையார் கொடியொன் றுடையெந் தைவிமலன் கிடையா ரொலியோத் தரவத் திசைகிள்ளை அடையார் பொழிலன் பிலாலந் துறையாரே. |
1.033.2 |
சடைமுடிகளோடு கூடிய சதுரப்பாடு உடையவராய் இளம்பிறையை முடிமிசைச் சூடி இடபக்கொடி ஒன்றை உடைய எந்தையாராகிய விமலர், வேதம் பயிலும் இளஞ்சிறார்கள் கூடியிருந்து ஓதும் வேத ஒலியைக் கேட்டு அவ்வோசையாலேயே அவற்றை இசைக்கின்ற கிளிகள் அடைதல் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட அன்பிலாலந்துறை இறைவராவார்.
351 |
ஊரும் மரவஞ் சடைமே லுறவைத்துப் பாரும் பலிகொண் டொலிபா டும்பரமர் நீருண் கயலும் வயல்வா ளைவராலோ டாரும் புனலன் பிலாலந் துறையாரே. |
1.033.3 |
ஊர்ந்து செல்லும் பாம்பைச் சடைமுடிமேல் பொருந்த அணிந்து உலகம் முழுதும் சென்று பலியேற்று, இசை பாடி மகிழும் பரமராகிய பெருமானார், நீரின்வழி உணவுண்ணும் கயல் மீன்களை வயல்களிடத்துள்ள வாளை வரால் ஆகிய மீன்கள் உண்ணும் புனல்வளம் மிக்க அன்பிலாலந்துறையாராவார்.
352 |
பிறையும் மரவும் முறவைத் தமுடிமேல் நறையுண் டெழுவன் னியுமன் னுசடையார் மறையும் பலவே தியரோ தவொலிசென் றறையும் புனலன் பிலாலந் துறையாரே. |
1.033.4 |
பிறைமதி, பாம்பு ஆகியவற்றைப் பகை நீக்கி ஒருங்கே பொருந்த வைத்த முடிமீது, நறுமணத்துடன் தோன்றும் வன்னித் தளிர்களும் மன்னிய சடையினர், வேதியர் பலர் வேதங்களை ஓத அவ்வொலி பல இடங்களிலும் ஒலிக்கும் நீர்வளம்மிக்க அன்பிலாலந்துறை இறைவராவார்.
353 |
நீடும் புனற்கங் கையுந்தங்
கமுடிமேல் கூடும் மலையா ளொருபா கமமர்ந்தார் மாடும் முழவம் மதிரம் மடமாதர் ஆடும் பதியன் பிலாலந் துறையாரே. |
1.033.5 |
முடிமேல் பெருகிவரும் நீரை உடைய கங்கை நதியையும் தங்குமாறு அணிந்து, ஒருபாகமாகத் தம்மைத் தழுவிய மலைமகளைக் கொண்டுள்ள பெருமானார், பல இடங்களிலும் முழவுகள் ஒலிக்க, இளம் பெண்கள் பலர் நடனங்கள் புரியும் அன்பிலாலந்துறை இறைவராவார்.
354 |
நீறார் திருமே னியரூ னமிலார்பால் ஊறார் சுவையா கியவும் பர்பெருமான் வேறா ரகிலும் மிகுசந் தனமுந்தி ஆறார் வயலன் பிலாலந் துறையாரே. |
1.033.6 |
திருநீறு அணிந்த திருமேனியரும், குற்றம் அற்றவர்களின் உள்ளங்களில் பொருந்திய சுவையாக இனிப்பவருமாகிய தேவர் தலைவர், வேறாகப் பெயர்ந்து வரும் அகில் மரங்களையும் உயர்ந்த சந்தன மரங்களையும் அடித்துவரும் ஆற்று நீர் பாயும் வயல்களை உடைய அன்பிலாலந்துறை இறைவர் ஆவார்.
355 |
செடியார் தலையிற் பலிகொண்
டினிதுண்ட படியார் பரமன் பரமேட் டிதன்சீரைக் கடியார் மலரும் புனல்தூ விநின்றேத்தும் அடியார் தொழுமன் பிலாலந் துறையாரே. |
1.033.7 |
முடை நாற்றமுடைய தலையோட்டில் பலியேற்று அதனை இனிதாக உண்டருளும் தன்மையினைக் கொண்ட பரமனாகிய பரம்பொருள், மணம் பொருந்திய மலர்களையும் நீரையும் தூவி நின்று தன்புகழைத் துதிக்கும் அடியவர்களால் தொழப்படும் அன்பிலாலந்துறை இறைவராவார்.
356 |
விடத்தார் திகழும் மிடறன் னடமாடி படத்தா ரரவம் விரவுஞ் சடையாதி கொடித்தே ரிலங்கைக் குலக்கோன் வரையார அடர்த்தா ரருளன் பிலாலந் துறையாரே. |
1.033.8 |
ஆலகால விடக்கறை விளங்கும் கரிய கண்டத்தினரும், நடனமாடியும், படத்தோடு கூடிய அரவம் விரவும் சடையினை உடைய முதற்கடவுளும், கொடித் தேரைக் கொண்ட இலங்கையர் குலத் தலைவனாகிய இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்தவரும் ஆகிய சிவபிரான், அன்பர்கள் அருள் பெறுதற்குரிய இடமாக விளங்கும் அன்பில் ஆலந்துறை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளார்.
357 |
வணங்கிம் மலர்மே லயனுந் நெடுமாலும் பிணங்கி யறிகின் றிலர்மற் றும்பெருமை சுணங்கும் முகத்தம் முலையா ளொருபாகம் அணங்குந் நிகழன் பிலாலந் துறையாரே. |
1.033.9 |
தாமரை மலர்மேல் விளங்கும் அயனும் திருமாலும், சிவபிரானின் பெருமையை வணங்கி அறியாது, தம்முட் பிணங்கித் தேடி அறியாதவராயினர். அப்பெருமான், சுணங்கு பொருந்திய முகப்பினை உடைய அழகிய தனத்தவளாய உமையம்மையை ஒருபாகத்தே அணங்காகக் கொண்டுள்ள அன்பிலாலந்துறை இறைவராவார்.
358 |
தறியார் துகில்போர்த் துழல்வார்
சமண்கையர் நெறியா வுணரா நிலைக்கே டினர்நித்தல் வெறியார் மலர்கொண் டடிவீ ழுமவரை அறிவா ரவரன் பிலாலந் துறையாரே. |
1.033.10 |
தறிபோல ஆடையின்றி உள்ள சமணர்கள், நெய்த ஆடையினை உடலில் போர்த்து உழலும் புத்தர்கள், பரம்பொருளை முறையாக உணராததோடு, நிலையான கேடுகளுக்கு உரியவர்களாய் உள்ளனர். அவர்களைச் சாராது நாள்தோறும் மணமலர்களைச் சூட்டித் தம் திருவடிகளில் வீழ்ந்து தொழும் அடியவர்களை நன்கறிந்தருளும் பெருமானார் அன்பிலாலந்துறை இறைவராவார்.
359 |
அரவார் புனலன் பிலாலந் துறைதன்மேல் கரவா தவர்கா ழியுண்ஞா னசம்பந்தன் பரவார் தமிழ்பத் திசைபா டவல்லார்போய் விரவா குவர்வா னிடைவீ டௌதாமே. |
1.033.11 |
பாம்புகள் வாழும் நீர் வளம் உடைய அன்பில் ஆலந்துறை இறைவர்மேல் வஞ்சனையில்லாத மக்கள் வாழும் சீகாழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பரவிப்பாடிய இப்பத்துப் பாடல்களையும் இசையோடு பாட வல்லவர் மறுமையில் வானக இன்பங்களுக்கு உரியவர்கள் ஆவர். அவர்களுக்கு வீட்டின்பமும் எளிதாம்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.033.திரு அன்பிலாலந்துறை , பிலாலந், அன்பிலாலந்துறை, துறையாரே, உடைய, இறைவராவார், பொருந்திய, திருமுறை, அன்பில், பெருமானார், விளங்கும், வாழும், புனலன், திரு, இடங்களிலும், பலர், ஆகிய, கொண்டுள்ள, மரங்களையும், ஆலந்துறை, பொழிலன், கொண்ட, நீர், திருச்சிற்றம்பலம், பலியேற்று, பதிகங்கள், கூடிய, ஆவார், என்னும், தேவாரப், அணிந்து, பொருந்த, பலிகொண், இறைவர்