முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.032.திருவிடைமருதூர்
1.032.திருவிடைமருதூர்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்.
தேவியார் - நலமுலைநாயகியம்மை.
338 |
ஓடே கலணுண் பதுமூ ரிடுபிச்சை காடே யிடமா வதுகல் லானிழற்கீழ் வாடா முலைமங் கையுந்தா னுமகிழ்ந் தீடா வுறைகின் றவிடை மருதீதோ. |
1.032.1 |
உண்ணும் பாத்திரம் பிரம கபாலமாகும். அவர் உண்ணும் உணவோ ஊர் மக்கள் இடும் பிச்சையாகும், அவர் வாழும் இடமோ இடுகாடாகும். அத்தகைய சிவபிரான் கல்லால மரநிழற்கீழ் நன்முலைநாயகியும் தானுமாய் மகிழ்ந்து பெருமையோடு விளங்கும் திருத்தலமாகிய இடைமருது இதுதானோ?
339 |
தடங்கொண்ட தொர்தாமரைப்பொன்முடிதன்மேல் குடங்கொண் டடியார் குளிர்நீர் சுமந்தாட்டப் படங்கொண் டதொர்பாம் பரையார்த்த பரமன் இடங்கொண் டிருந்தான் றனிடை மருதீதோ. |
1.032.2 |
தடாகங்களிற் பறித்த பெரிய தாமரை மலரைச் சூடிய அழகிய திருமுடியில், அடியவர் குடங்களைக் கொண்டு குளிர்ந்த நீரைமுகந்து சுமந்து வந்து அபிடேகிக்குமாறு, படம் எடுத்தாடும் நல்லபாம்பை இடையிலே கட்டிய பரமன் தான் விரும்பிய இடமாகக் கொண்டுறையும் இடைமருது இதுதானோ?
340 |
வெண்கோ வணங்கொண் டொரு வெண்டலையேந்தி அங்கோல் வளையா ளையொர்பா கமமர்ந்து பொங்கா வருகா விரிக்கோ லக்கரைமேல் எங்கோ னுறைகின் றவிடை மருதீதோ. |
1.032.3 |
வெண்மையான கோவணத்தை அணிந்து ஒப்பற்ற வெள்ளிய பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி அழகியதாயத் திரண்ட வளையல்களை அணிந்த உமாதேவியை ஒருபாகமாக விரும்பி ஏற்று, பொங்கிவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது எம் தலைவனாயுள்ள சிவபிரான் எழுந்தருளிய இடைமருதூர் இதுதானோ?
341 |
அந்தம் மறியா தவருங் கலமுந்திக் கந்தங் கமழ்கா விரிக்கோ லக்கரைமேல் வெந்த பொடிப்பூ சியவே தமுதல்வன் எந்தை யுறைகின்ற விடைமரு தீதோ. |
1.032.4 |
அரிய அணிகலன்களைக் கரையில் வீசி மணம் கமழ்ந்துவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது திருவெண்ணீறு அணிந்தவனாய், முடிவறியாத வேத முதல்வனாய் விளங்கும் எம் தந்தையாகிய சிவபிரான் உறைகின்ற இடைமருதூர் இதுதானோ?
342 |
வாசங் கமழ்மா மலர்ச்சோ லையில்வண்டே தேசம் புகுந்தீண் டியொர்செம் மையுடைத்தாய்ப் பூசம் புகுந்தா டிப்பொலிந் தழகாய ஈச னுறைகின் றவிடை மருதீதோ. |
1.032.5 |
மணம் கமழும் சிறந்த மலர்களை உடைய சோலைகளில் வண்டுகளைக் கொண்டதும், உலக மக்கள் பலரும் கூடிச் செம்மையாளராய்த் தைப்பூசத் திருநாளில் நீராடி வணங்குவதும், பொலிவும் அழகும் உடையவனாய் ஈசன் எழுந்தருளி விளங்குவதுமான இடைமருது என்னும் தலம் இதுதானோ?
343 |
வன்புற் றிளநா கமசைத் தழகாக என்பிற் பலமா லையும்பூண் டெருதேறி அன்பிற் பிரியா தவளோ டுமுடனாய் இன்புற் றிருந்தான் றனிடை மருதீதோ. |
1.032.6 |
வலிய புற்றுக்களில் வாழும் இளநாகங்களை இடையிலே அழகாகக் கட்டிக் கொண்டு, எலும்பால் இயன்ற மாலைகள் பலவற்றையும் அணிகலன்களாகப் பூண்டு, அன்பிற்பிரியாத உமையம்மையோடும் உடனாய் எருதேறிச் சிவபிரான் இன்புற்றுறையும் இடைமருது என்பது இதுதானோ?
344 |
தேக்குந் திமிலும் பலவுஞ் சுமந்துந்திப் போக்கிப் புறம்பூ சலடிப் பவருமால் ஆர்க்குந் திரைக்கா விரிக்கோ லக்கரைமேல் ஏற்க விருந்தான் றனிடை மருதீதோ. |
1.032.7 |
தேக்கு, வேங்கை, பலா ஆகிய மரங்களைச் சுமந்து வந்து இருகரைகளிலும், அம்மரங்களை எடுத்து வீசி, ஆரவாரித்து வரும் அலைகளையுடையதாய காவிரி நதியின் அழகிய கரைமீது சிவபெருமான் பொருந்த உறையும் இடைமருது என்னும் தலம் இதுதானோ?
345 |
பூவார் குழலா ரகில்கொண்
டுபுகைப்ப ஓவா தடியா ரடியுள் குளிர்ந்தேத்த ஆவா வரக்கன் றனையாற் றலழித்த ஏவார் சிலையான் றனிடை மருதீதோ. |
1.032.8 |
மலர் சூடிய கூந்தலை உடைய மங்கல மகளிர் அகில் தூபம் இட, அடியவர் இடையீடின்றித் திருவடிகளை மனம் குளிர்ந்து ஏத்த, கண்டவர் ஆஆ என இரங்குமாறு இராவணனது ஆற்றலை அழித்த, அம்பு பொருத்தற்கேற்ற மலைவில்லைக் கையில் கொண்ட, சிவபெருமானின் இடைமருது என்னும் தலம் இதுதானோ?
346 |
முற்றா ததொர்பான் மதிசூ டுமுதல்வன் நற்றா மரையா னொடுமால் நயந்தேத்தப் பொற்றோ ளியுந்தா னும்பொலிந் தழகாக எற்றே யுறைகின் றவிடை மருதீதோ. |
1.032.9 |
முற்றாத பால் போன்ற இளம்பிறையை முடிமிசைச் சூடிய முதல்வனாய், நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், திருமாலும் விரும்பித் தொழ, உமையம்மையும் தானுமாய்ச் சிவபிரான் அழகாகப் பொலிந்து உறைகின்ற இடைமருது என்னும் தலம் இதுதானோ?
347 |
சிறுதே ரருஞ்சில் சமணும் புறங்கூற நெறியே பலபத் தர்கள்கை தொழுதேத்த வெறியா வருகா விரிக்கோ லக்கரைமேல் எறியார் மழுவா ளனிடை மருதீதோ. |
1.032.10 |
சிறுமதியாளராகிய தேரர்களும், சிற்றறிவினராகிய சமணர்களும், புறங்கூறித் திரிய, சிவபக்தர்கள் பலர் முறையாலே கைகளால் தொழுது துதிக்கப் பகைவரைக் கொன்றொழிக்கும் மழுவை ஏந்திய சிவபிரான் எழுந்தருளிய, மணம் கமழ்ந்துவரும் காவிரிநதியின் அழகிய கரைமேல் உள்ள இடைமருது என்னும் தலம் இதுதானோ?
348 |
கண்ணார் கமழ்கா ழியுண்ஞா னசம்பந்தன் எண்ணார் புகழெந் தையிடை மருதின்மேல் பண்ணோ டிசைபா டியபத் தும்வல்லார்கள் விண்ணோ ருலகத் தினில்வீற் றிருப்பாரே. |
1.032.11 |
இடமகன்றதும் மணம் கமழ்வதுமான சீகாழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் எண்ணத்தில் நிறைந்துள்ள புகழை உடைய எம்பெருமானுடைய இடைமருது மீது பண்ணோடியன்ற இசையால் பாடிய பத்துப் பாடல்களையும் வல்லவர்கள் விண்ணோர் உலகில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.032.திருவிடைமருதூர் , இதுதானோ, மருதீதோ, இடைமருது, சிவபிரான், என்னும், அழகிய, தலம், றனிடை, லக்கரைமேல், விரிக்கோ, மணம், றவிடை, திருமுறை, சூடிய, திருவிடைமருதூர், நதியின், கரைமீது, உடைய, காவிரி, எழுந்தருளிய, இடைமருதூர், உறையும், உறைகின்ற, தழகாக, முதல்வனாய், கமழ்ந்துவரும், வீசி, கையில், கமழ்கா, சுமந்து, பிரம, அவர், மக்கள், உண்ணும், திருச்சிற்றம்பலம், தேவாரப், பதிகங்கள், வாழும், விளங்கும், வந்து, இடையிலே, வருகா, கொண்டு, அடியவர், பரமன், தாமரை, னுறைகின்