முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.027.திருப்புன்கூர்
1.027.திருப்புன்கூர்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவலோகநாதர்.
தேவியார் - சொக்கநாயகியம்மை.
283 |
முந்தி நின்ற வினைக ளவைபோகச் சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர் அந்த மில்லா வடிக ளவர்போலும் கந்த மல்கு கமழ்புன் சடையாரே. |
1.027.1 |
நெஞ்சே! பல பிறவிகளிலும் செய்தனவாய சஞ்சித, ஆகாமிய வினைகளுள் பக்குவப்பட்டுப் பிராரத்த வினையாய்ப் புசிப்பிற்கு முற்பட்டு நின்ற வினைகள் பலவும் நீங்க, திருப்புன்கூரில் ஆதி அந்தம் இல்லாத தலைவராய், மணம் நிறைந்து கமழும் செந்நிறச் சடைமுடி உடையவராய் எழுந்தருளிய சிவபிரானாரைச் சிந்தனை செய்வாயாக.
284 |
மூவ ராய முதல்வர் முறையாலே தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர் ஆவ ரென்னு மடிக ளவர்போலும் ஏவி னல்லா ரெயின்மூன் றெரித்தாரே. |
1.027.2 |
பகைமை பூண்டவராய அசுரர்களின் மூன்று அரண்களைக் கணையொன்றால் எரித்தழித்த இறைவர், பிரமன், மால், உருத்திரன் ஆகிய மூவராயும், அவர்களுக்கு முதல்வராயும், தேவர்கள் எல்லோரும் முறையாக வந்து வணங்குபவராயும் விளங்கும் திருப்புன்கூரில் எழுந்தருளிய அடிகள் ஆவர்.
285 |
பங்க யங்கண் மலரும் பழனத்துச் செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க் கங்கை தங்கு சடையா ரவர்போலும் எங்க ளுச்சி யுறையும் மிறையாரே. |
1.027.3 |
எங்கள் தலைகளின் மேல் தங்கி விளங்கும் இறைவர், தாமரை மலர்கள் மலரும் வயல்களில் சிவந்த கயல் மீன்கள் திளைத்து மகிழும் திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள கங்கை தங்கிய சடை முடியினராகிய சிவபெருமானாராவர்.
286 |
கரையு லாவு கதிர்மா மணிமுத்தம் திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர் உரையி னல்ல பெருமா னவர்போலும் விரையி னல்ல மலர்ச்சே வடியாரே. |
1.027.4 |
மணத்தால் மேம்பட்ட தாமரைமலர் போலும் சிவந்த திருவடிகளை உடைய இறைவர், ஒளி பொருந்திய சிறந்த மாணிக்கங்கள் கரைகளில் திகழ்வதும், முத்துக்கள் நீர்த் திரைகளில் உலாவுவதும் ஆகிய வளம்மிக்க வயல்கள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளிய புகழ்மிக்க நல்ல பெருமானாராவார்.
287 |
பவள வண்ணப் பரிசார் திருமேனி திகழும் வண்ண முறையுந் திருப்புன்கூர் அழக ரென்னு மடிக ளவர்போலும் புகழ நின்ற புரிபுன் சடையாரே. |
1.027.5 |
உலகோர் புகழ நிலை பெற்ற, முறுக்கிய சிவந்த சடை முடியை உடைய இறைவர், பவளம் போலும் தமது திருமேனியின் செவ்வண்ணம் திகழுமாறு திருப்புன்கூரில் உறையும் அழகர் என்னும் அடிகளாவார்.
288 |
தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல் திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப் பொருந்தி நின்ற வடிக ளவர்போலும் விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே. |
1.027.6 |
விரிந்து விளங்கும் சடைமுடியில் வெண்பிறை அணிந்த இறைவர், கண்களுக்குப் புலனாய் அழகோடு திகழும் செங்கழுநீர் மலர்ந்த வயல்களாலும், செந்நெற் கதிர்கள் அழகோடு நிறைந்து நிற்கும் வயல்களாலும் சூழப்பெற்ற திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள அடிகள் ஆவார்.
289 |
பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும் தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர் ஆர நின்ற வடிக ளவர்போலும் கூர நின்ற வெயின்மூன் றெரித்தாரே. |
1.027.7 |
கொடியனவாய்த் தோன்றி இடர் விளைத்து நின்ற முப்புரங்களையும் எரித்தழித்த இறைவர், மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் பரவித் தொழுதேத்துமாறு தேரோடும் திருவீதிகளை உடையதும், எந்நாளும் திருவிழாக்களால் சிறந்து திகழ்வதுமான திருப்புன்கூரில் பொருந்தி நின்ற அடிகளாவார்.
290 |
மலைய தனா ருடைய மதின்மூன்றும் சிலைய தனா வெரித்தார் திருப்புன்கூர்த் தலைவர் வல்ல வரக்கன் றருக்கினை மலைய தனா லடர்த்து மகிழ்ந்தாரே. |
1.027.8 |
வலிமை பொருந்திய இராவணன் செருக்கைப் போக்க, அவனைக் கயிலை மலையாலே அடர்த்துப்பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள் வழங்கிய இறைவர், தேவர்களோடு சண்டையிட்டு அவர்களை அழிக்கும் குணம் உடையவராய அசுரர்களின் முப்புரங்களை வில்லால் எரித்தழித்தவராகிய திருப்புன்கூர்த் தலைவர் ஆவார்.
291 |
நாடவல்ல மலரான் மாலுமாய்த் தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர் ஆட வல்ல வடிக ளவர்போலும் பாட லாடல் பயிலும் பரமரே. |
1.027.9 |
பாடல் ஆடல் ஆகிய இரண்டிலும் வல்லவராய் அவற்றைப் பழகும் மேலான இறைவர், எதனையும் ஆராய்ந்தறிதலில் வல்ல நான்முகனும், திருமாலும், தேடி அறிய இயலாதவராய் ஓங்கி நின்றவர். அப்பெருமான் திருப்புன்கூரில் உறையும் ஆடல்வல்ல அடிகள் ஆவார்.
292 |
குண்டு முற்றிக் கூறை யின்றியே பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல் வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க் கண்டு தொழுமின் கபாலி வேடமே. |
1.027.10 |
கீழாந்தன்மை மிகுந்து ஆடையின்றி வீதிகளில் வந்து பிச்சை கேட்டுப் பெற்று, அவ்வுணவை விழுங்கி வாழும் மயக்க அறிவினராகிய சமணர்கள் கூறும் சொற்களைக் கேளாதீர். தேனுண்ண வந்த வண்டுகள் பாடுமாறு மலர்கள் நிறைந்து விளங்கும் திருப்புன்கூர் சென்று அங்கு விளங்கும் கபாலியாகிய சிவபிரானின் வடிவத்தைக் கண்டு தொழுவீர்களாக.
293 |
மாட மல்கு மதில்சூழ் காழிமன் சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர் நாட வல்ல ஞான சம்பந்தன் பாடல் பத்தும் பரவி வாழ்மினே. |
1.027.11 |
மாடவீடுகளால் நிறையப் பெற்றதும் மதில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதிக்குத் தலைவனாய், எதையும் நாடி ஆராய்தலில் வல்ல ஞானசம்பந்தன், பெரியோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர் இறைவர்மீது பாடிய பாடல்கள் பத்தையும் பரவி வாழ்வீர்களாக.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.027.திருப்புன்கூர் , திருப்புன்கூர், நின்ற, இறைவர், திருப்புன்கூரில், ளவர்போலும், வல்ல, விளங்கும், வடிக, திருமுறை, ஆகிய, ஆவார், சிவந்த, எழுந்தருளிய, நிறைந்து, அடிகள், உறையும், அழகோடு, திகழும், பொருந்திய, பொருந்தி, லங்கு, புகழ, அடிகளாவார், மலைய, பாடல், கண்டு, வாழும், பரவி, ருறையுந், தலைவர், பரவித், உடைய, திருப்புன்கூர்த், வயல்களாலும், மலர்கள், சடையாரே, ரென்னு, மடிக, றெரித்தாரே, மல்கு, நெஞ்சே, தேவாரப், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், அசுரர்களின், எரித்தழித்த, லாவு, வயல்சூழ், னல்ல, எழுந்தருளியுள்ள, கங்கை, வந்து, மலரும், திருப்புன்கூர்க், போலும்