முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.026.திருப்புத்தூர்
1.026.திருப்புத்தூர்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புத்தூரீசர்.
தேவியார் - சிவகாமியம்மை.
272 |
வெங்கள் விம்மு வெறியார்
பொழிற்சோலை திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க் கங்கை தங்கு முடியா ரவர்போலும் எங்க ளுச்சி யுறையு மிறையாரே. |
1.026.1 |
விரும்பத்தக்க தேன் விம்மிச் சுரந்துள்ள, மணம் பொருந்திய சோலைகள் வானளாவ உயர்ந்து, அங்குத் தவழும் திங்களோடு பழகித் திளைக்கும் வளம் உடைய திருப்புத்தூரில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடைமுடியினராகிய பெருமானார் எங்கள் சிரங்களின்மேல் தங்கும் இறைவர் ஆவார்.
273 |
வேனல் விம்மு வெறியார்
பொழிற்சோலைத் தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர் ஊனமின்றி யுறைவா ரவர்போலும் ஏன முள்ளு மெயிறும் புனைவாரே. |
1.026.2 |
தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுப் பன்றி வடிவமெடுத்த திருமால் உலகை அழிக்கத் தொடங்கிய காலத்து,அதனை அடக்கி, அதன் பல்லையும் கொம்பையும் பறித்துத் தன் மார்பில் அணிந்தவர், வேனிற் காலத்தில் வெளிப்படும் மணம் நிறைந்துள்ள பொழில்களிலும் சோலைகளிலும் வாழும் வண்டுகள் தேனை உண்டு திளைத்து ஒலி செய்யும் திருப்புத்தூரில் குறையின்றி உறையும் பெருமானார் ஆவர்.
274 |
பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத் தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர் ஓங்கு கோயி லுறைவா ரவர்போலும் தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே. |
1.026.3 |
தம்மை அடைக்கலமாக அடைந்த திங்கள் தவழும் செந்நிறச் சடைமுடியினை உடைய இறைவர், நல்ல வரிகளை உடைய வண்டுகள் பாங்கரிலிருந்து இசைபாடத் தேன் நிறைந்த கொன்றை மலர்கள் முடிமிசைத் திளைத்து விளங்கத் திருப்புத்தூரில் ஓங்கி உயர்ந்த கோயிலில் எழுந்தருளிய பெருமானார் ஆவார். கொன்றை - திருப்புத்தூர் தல விருட்சம்.
275 |
நாற விண்ட நறுமா மலர்கவ்வித் தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர் ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும் ஏறு கொண்ட கொடியெம் மிறையாரே. |
1.026.4 |
ஆன் ஏற்றுக் கொடியைத் தனதாகக் கொண்ட எம் இறைவர், மணம் வீசுமாறு மலர்ந்த சிறந்த நறுமலர்களைத் தம் வாயால்கவ்வி வண்டுகள் தேனை உண்டு திளைக்கும் திருப்புத்தூரில் பலகாலம் தங்கிய வாழ்க்கையினை உடையவர் ஆவார்.
276 |
இசைவி ளங்கு மெழில்சூழ்ந் தியல்பாகத் திசைவி ளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர் பசைவி ளங்கப் படித்தா ரவர்போலும் வசைவி ளங்கும் வடிசேர் நுதலாரே. |
1.026.5 |
கங்கையாகிய பெண் விளங்கும் அழகிய சென்னியினராகிய இறைவர், புகழால் விளக்கம் பெற்றதும், இயல்பாக அழகு சூழ்ந்து விளங்குவதும், நாற்றிசைகளிலும் பொழில்கள் சூழ்ந்ததுமான திருப்புத்தூரில், தம்மை வழிபடுவார்க்கு அன்பு வளருமாறு பழகும் பெருமானார் ஆவார்.
277 |
வெண்ணி றத்த விரையோ டலருந்தித் தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர் ஒண்ணி றத்த வொளியா ரவர்போலும் வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே. |
1.026.6 |
வெண்மை நிறமுடைய விடை உருவம் எழுதிய கொடியை உடைய இறைவர், வெள்ளிய நிறமுடையனவாய் மணம் பொருந்திய மலர்களை அடித்துக் கொண்டு தௌந்த தன்மை உடையதாய்த் தண்ணீர் பாயும் திருப்புத்தூரில் எழுந்தருளிய ஒண்மை பொருந்திய ஒளியை உடைய பெருமானார் ஆவார்.
278 |
நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்கும் செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த் தையல் பாக மகிழ்ந்தா ரவர்போலும் மையு ணஞ்ச மருவு மிடற்றாரே. |
1.026.7 |
கருமை பொருந்திய நஞ்சு மருவும் மிடற்றினராய் இறைவர், நெய்தல், ஆம்பல் செங்கழுநீர் ஆகிய மலர்கள் வயல்கள் எங்கும் மலர்ந்து நிறைந்து விளங்கும் திருப்புத்தூரில் எழுந்தருளிய உமையொரு பாகம் மகிழ்ந்த சிவனாராவார்.
279 |
கருக்க மெல்லாங் கமழும்
பொழிற்சோலைத் திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர் இருக்க வல்ல விறைவ ரவர்போலும் அரக்க னொல்க விரலா லடர்த்தாரே. |
1.026.8 |
இராவணனாகிய அரக்கனைக் கால்விரலால் தளர அடர்த்தவராகிய பெருமானார், மேகங்களிலும் பரவிக் கமழும் மனமுடைய பொழில்களாலும் சோலைகளாலும் சூழப்பெற்றதும், செல்வம் நிறைந்ததும், செம்மையாளர் வாழ்வதும், திருவிழாக்கள் பல நிகழ்வதுமாய திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்க வல்லவராய இறைவராவார்.
280 |
மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப் பெருகி வாழும் பெருமா னவன்போலும் பிரமன் மாலு மறியாப் பெரியோனே. |
1.026.9 |
பிரமனும் திருமாலும் அறியமுடியாத பெரியோனாகிய இறைவன், எங்கும் பொருந்தியனவாய் வளரும் இளமயில்கள் தெருக்கள் தோறும் உலவிக் களிக்கும் திருப்புத்தூரில் பெருமை பெருகியவனாய் வாழும் பெருமானாவான்.
281 |
கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல் தேறல் வேண்டா தௌமின் றிருப்புத்தூர் ஆறு நான்கு மமர்ந்தா ரவர்போலும் ஏறு கொண்ட கொடியெம் மிறையாரே. |
1.026.10 |
மேல் ஆடையைப் போர்த்துத் திரிதலைத் தொழிலாகக் கொண்ட பௌத்தர் சமணர் ஆகியவருடைய உரைகளை நம்பாதீர்கள். ஆனேறு எழுதிய கொடியினை உடையவராய்த் திருப்புத்தூரில் நான்கு வேதங்களாகவும், ஆறு அங்கங்களாகவும் விளங்கும் பெருமானாராகிய அவரைத் தௌமின்.
282 |
நல்ல கேள்வி ஞான சம்பந்தன் செல்வர் சேட ருறையுந் திருப்புத்தூர்ச் சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும் அல்லல் தீரு மவல மடையாவே. |
1.026.11 |
நன்மை தரும் வேதங்களை உணர்ந்த ஞானசம்பந்தன், செல்வரும் உயர்ந்தவருமான சிவபெருமான் உறையும் திருப்புத்தூரை அடைந்து வழிபட்டுச் சொல்லிய பத்துப் பாடல்களையும் வல்லவர்கட்குத் துன்பங்கள் நீங்கும். எக்காலத்தும் அவலம் அவர்களை அடையா.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.026.திருப்புத்தூர் , திருப்புத்தூர், திருப்புத்தூரில், ரவர்போலும், பெருமானார், இறைவர், உடைய, ஆவார், திளைக்குந், மணம், றத்த, எழுந்தருளிய, பொருந்திய, கொண்ட, திருமுறை, கொன்றை, நல்ல, வண்டுகள், வாழும், விளங்கும், மிறையாரே, தேறல், வளரும், மலர்கள், கொடியெம், தௌமின், நான்கு, கமழும், தம்மை, வெண்ணி, எழுதிய, எங்கும், ளங்கும், பொழிற்சோலைத், வெறியார், கங்கை, விம்மு, திருச்சிற்றம்பலம், தேவாரப், பதிகங்கள், தேன், தவழும், திளைத்து, உறையும், உண்டு, தேனை, திளைக்கும், தங்கிய, திங்கள்