முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.122.திருவிடைமருதூர் - திருவிராகம்
1.122.திருவிடைமருதூர் - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்.
தேவியார் - நலமுலைநாயகியம்மை.
1315 |
விரிதரு புலியுரி விரவிய வரையினர் திரிதரு மெயிலவை புனைகணை யினிலெய்த எரிதரு சடையின ரிடைமரு தடைவுனல் புரிதரு மனனவர் புகழ்மிக வுளதே. |
1.122.1 |
விரிந்த புலித்தோலை ஆடையாக உடுத்த இடையினரும், வானகத்தில் திரிந்து இடர் செய்த முப்புரங்களை ஆற்றல் பலவும் அமைந்த கணையால் எய்தழித்தவரும் எரிபோன்ற சிவந்த சடையினருமாகிய சிவபிரானார் உறையும் இடைமருதை அடைய எண்ணும் மனம் உடையவர்க்குப் புகழ் மிக உளதாகும்.
1316 |
மறிதிரை படுகடல் விடமடை மிடறினர் எறிதிரை கரைபொரு மிடைமரு தெனுமவர் செறிதிரை நரையொடு செலவில ருலகினில் பிறிதிரை பெறுமுடல் பெறுகுவ தரிதே. |
1.122.2 |
சுருண்டு விழும் அலைகள் உண்டாகும் கடலிடைத் தோன்றிய விடம் சேர்ந்த மிடற்றினர் உறைவதும், காவிரியாற்று அலைகள் கரைகளைப் பொருவதுமான இடைமருது என்னும் தலத்தின் பெயரைச் சொல்லுவோர் உடலிடை அலைபோலத் தோன்றும் தோலின் சுருக்கம், மயிரின் நரை ஆகியன நீங்குவர். மீண்டும் இவ்வுலகில் உணவு உண்ணும் உடலோடு கூடிய பிறவியை எய்தார்.
1317 |
சலசல சொரிபுனல் சடையினர்
மலைமகள் நிலவிய வுடலினர் நிறைமறை மொழியினர் இலரென விடுபலி யவரிடை மருதினை வலமிட வுடனலி விலதுள வினையே. |
1.122.3 |
சலசல என்னும் ஒலிக்குறிப்போடு சொரியும் கங்கை ஆற்றைச் சடைமிசை அணிந்தவரும், மலைமகளை ஒருபாகமாகக் கொண்ட உடலினரும், நிறைவான வேதங்களை மொழிபவரும், உணவின்மையால் பசியோடுள்ளார் என மகளிர் இடும் பலியை ஏற்பவருமான சிவபிரான் உறையும் இடைமருதை வலம்வருபவர்க்கு வினைகளால் ஆகும் உடல் நலிவு இல்லையாம்.
1318 |
விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர் இடைவிட லரியவ ரிடைமரு தெனுநகர் உடையவ ரடியிணை தொழுவதெம் முயர்வே. |
1.122.4 |
விடையூர்தியை உடையவரும், வெண்மையான தலையோட்டை உண்கலன் எனக் கொண்டு பலகாலும் வீடுகள்தோறும் சென்று பலி இடுக என விரைந்து செல்பவரும், ஒருமுறை அன்பு செய்யின் விடுதற்கு அரியவரும், இடைமருது என்னும் நகரை உடையவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுவதே எமக்கு உயர்வைத் தரும்.
1319 |
உரையரு முருவின ருணர்வரு வகையினர் அரைபொரு புலியத ளுடையின ரதன்மிசை இரைமரு மரவின ரிடைமரு தெனவுளம் உரைகள துடையவர் புகழ்மிக வுளதே. |
1.122.5 |
சொல்லுதற்கரிய அழகரும், உணர்வதற்கரிய தன்மையரும், இடையில் பொருந்திய புலித்தோல் ஆடையினரும் அதன்மேல் இரையை விழுங்கும் பாம்பைக் கச்சையாகக் கட்டியவரும் ஆகிய சிவபிரானது இடைமருதைப் பலகாலும் புகழ்ந்து போற்றுவார்க்கு மிகுதியான புகழ் உளதாகும்.
1320 |
ஒழுகிய புனன்மதி யரவமொ டுறைதரும் அழகிய முடியுடை யடிகள தறைகழல் எழிலின ருறையிடை மருதினை மலர்கொடு தொழுதல்செய் தெழுமவர் துயருற லிலரே. |
1.122.6 |
வழிந்தொழுகும் கங்கை நதி, இளம்பிறை, பாம்பு ஆகியன உறையும் அழகிய சடைமுடியை உடையவரும், ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்துள்ள அழகரும் ஆகிய அடிகளது இடைமருதை அடைந்து மலர் கொண்டு போற்றித் தொழுது எழுவார் துன்புறுதல் இலராவர்.
1321 |
கலைமலி விரலினர் கடியதொர்
மழுவொடும் நிலையினர் சலமக ளுலவிய சடையினர் மலைமகண் முலையிணை மருவிய வடிவினர் இலைமலி படையவ ரிடமிடை மருதே. |
1.122.7 |
வீணையை மீட்டி இன்னிசைக் கலையை எழுப்பும் விரலை உடையவரும், கொடிய மழுவாயுதத்தோடு விளங்கும் நிலையினரும், கங்கை உலாவும் சடைமுடியினரும் மலைமகளின் முலைத்தழும்பு பொருந்திய வடிவினரும், இலைவடிவான சூலத்தை ஏந்தியவருமாய சிவபிரானார் இடம் இடைமருதாகும்.
1322 |
செருவடை யிலவல செயல்செயத் திறலொடும் அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர இருவகை விரனிறி யவரிடை மருதது பரவுவ ரருவினை யொருவுதல் பெரிதே. |
1.122.8 |
போரில் முறையற்ற செயல்களைச் செய்யும் இராவணன் தன்னிடமும் அவ்வாறு திறலோடும் செய்தலைக் கண்டு அரிய கயிலைமலையின்கீழ் அகப்படுத்தி அவனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு சினம் கருணை ஆகிய இருவகைக் குறிப்போடு கால் விரலை ஊன்றியவராகிய சிவபிரானது இடைமருதைப் பரவுவார் அருவினைகள் பெரிதும் நீங்கும்.
1323 |
அரியொடு மலரவ னெனவிவ ரடிமுடி தெரிவகை யரியவர் திருவடி தொழுதெழ எரிதரு முருவர்த மிடைமரு தடைவுறல் புரிதரு மனனவர் புகழ்மிக வுளதே. |
1.122.9 |
திருமால் பிரமர்களாகிய இருவரும் அடிமுடி காணமுயன்றபோது அவர்கட்கு அரியவராய்த் தோன்றி அவர்கள் தம்மைத் தொழுது எழுந்தபோது அழலுருவாய்க் காட்சி தந்த சிவபிரானாரது இடைமருதினை அடைய விரும்புவார்க்குப் புகழ் மிக உளதாகும்.
1324 |
குடைமயி லினதழை மருவிய வுருவினர் உடைமரு துவரினர் பலசொல வுறவிலை அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர் இடைமரு தெனமன நினைவது மெழிலே. |
1.122.10 |
குடையையும் மயிற்பீலியையும் கையில் ஏந்திய வடிவினை உடைய சமணர்களும், மருதந்துவர் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தர்களும் பலவாறு கூற அவர்களோடு நமக்கு உறவில்லை என ஒதுக்கிச் செல்வங்கள் யாவும் தம்மை வந்தடைந்தவராய் விளங்கும் அடியவர்களால் தொழப் பெறும் திருவடிகளை உடைய சிவபிரானது இடைமருது என மனத்தால் நினைவது அழகைத் தரும்.
1325 |
பொருகட லடைதரு புகலியர் தமிழொடு விரகினன் விரிதரு பொழிலிடை மருதினைப் பரவிய வொருபது பயிலவல் லவரிடர் விரவிலர் வினையொடு வியனுல குறவே. |
1.122.11 |
கரையைப் பொரும் கடலை அணித்தாக உடைய புகலிப் பதியில் தோன்றியவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதில் விளங்கும் பெருமானைப் பரவிய இத்திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் பயில வல்லவர் வினைகளும் இடர்களும் இலராவர். அகன்ற வீட்டுலகம் அவர்கட்குச் சொந்தமாகும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.122.திருவிடைமருதூர் - திருவிராகம் , ஆகிய, உடையவரும், இடைமருது, உளதாகும், புகழ், இடைமருதை, திருமுறை, கங்கை, சிவபிரானது, உடைய, உறையும், விளங்கும், என்னும், திருவிடைமருதூர், புகழ்மிக, வுளதே, ரிடைமரு, திருவிராகம், பொருந்திய, இடைமருதைப், தரும், பலகாலும், அழகிய, அழகரும், இலராவர், நினைவது, தேவாரப், பரவிய, பதிகங்கள், விரலை, கொண்டு, மருவிய, தொழுது, சிவபிரான், புரிதரு, மிடைமரு, அலைகள், மனனவர், அடைய, உடுத்த, சிவபிரானார், எரிதரு, ஆகியன, விரிதரு, விரிந்த, மருதினை, யவரிடை, சலசல, சடையினர், திருச்சிற்றம்பலம்