முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.111.திருக்கடைமுடி
1.111.திருக்கடைமுடி
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கடைமுடியீசுவரர்.
தேவியார் - அபிராமியம்பிகை.
1196 |
அருத்தனை யறவனை யமுதனைநீர் விருத்தனைப் பாலனை வினவுதிரேல் ஒருத்தனை யல்லதிங் குலகமேத்தும் கருத்தவன் வளநகர் கடைமுடியே. |
1.111.1 |
வேதப் பொருளாய் விளங்குபவனும், அறவடிவினனும், அமுதம்போல இனியவனும், மூத்தவனும், இளையோனும், உலக மக்கள் பலராலும் இவ்வொருவனையன்றித் துணையில்லை என்று கருதி வழிபடும் முடிந்த பொருளாயுள்ளவனும், ஆகிய பெருமான் எவ்விடத்தான் என நீர் வினவுவீராயின் அவன் எழுந்தருளிய வளநகர் கடைமுடி என்னும் தலமாகும். சென்று வழிபடுவீராக.
1197 |
திரைபொரு திருமுடி திங்கள்விம்மும் அரைபொரு புலியத ளடிகளிடம் திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர் கரைபொரு வளநகர் கடைமுடியே. |
1.111.2 |
ஒளியால் விம்மித் தோன்றும் பிறைமதி, அலைகள் ஒன்றோடு ஒன்று மோதும் கங்கை ஆகியவற்றை உடைய திருமுடியை உடையவரும், இடையில் புலித்தோலைப் பொருந்த அணிந்தவருமாகிய அடிகள் எழுந்தருளிய இடம், அலைகளோடு நுரைகள் பொருந்திய தௌந்த சுனைநீர் கரைகளில் வந்து மோதும் வளநகராகிய கடை முடியாகும்.
1198 |
ஆலிள மதியினொ டரவுகங்கை கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி ஏலநன் மலரொடு விரைகமழும் காலன வளநகர் கடைமுடியே. |
1.111.3 |
கல்லால மர நீழலில் இளமதி அரவு கங்கை ஆகியன சூடிய சடைமுடியுடனும், அழகிய திருவெண்ணீற்றுடனும், நறுமலர் ஆகியனவற்றால் மணம் பொருத்தமாகக் கமழும் திருவடிகளை உடையவனாக விளங்கும் இறைவனைத் தொழுது இறைஞ்சுதற்குரிய வளநகராக விளங்குவது கடைமுடியாகும்.
1199 |
கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார் மையணி மிடறுடை மறையவனூர் பையணி யரவொடு மான்மழுவாள் கையணி பவனிடங் கடைமுடியே. |
1.111.4 |
கொய்யப் பெற்ற அழகிய மணம் கமழும் கொன்றை மலர்மாலை அணிந்தவனாய் விடம் பொருந்திய கண்டத்தை உடையவனாய், படம் பொருந்திய பாம்பையும், மான் மழு வாள் ஆகியவற்றையும் கையின்கண் அணிந்தவனாய் விளங்கும் மறை முதல்வனது ஊர் கடைமுடியாகும்.
1200 |
மறையவ னுலகவன் மாயமவன் பிறையவன் புனலவ னனலுமவன் இறையவ னெனவுல கேத்துங்கண்டம் கறையவன் வளநகர் கடைமுடியே. |
1.111.5 |
வேதங்களை அருளியவனும், அனைத்துலகங்களும் ஆகியவனும், மாயை வடிவினனும், சடைமுடியில் பிறை கங்கை ஆகியவற்றை அணிந்தவனும், கையில் அனல் ஏந்தியவனும் உலக மக்கள் இறைவன் எனப் போற்றும் நீல கண்டனுமான சிவபிரானது வளநகர் கடைமுடியாகும்.
1201 |
படவர வேரல்குற் பல்வளைக்கை மடவர லாளையொர் பாகம்வைத்துக் குடதிசை மதியது சூடுசென்னிக் கடவுள்தன் வளநகர் கடைமுடியே. |
1.111.6 |
அரவின் படம் போன்ற அழகிய அல்குலையும் பலவகையினவான வளையல்களை அணிந்த கைகளையும் உடைய உமை யம்மையை ஒரு பாகமாக வைத்து, மேற்குத் திசையில் தோன்றும் பிறை மதியைச் சூடிய சடைமுடியினனாய் விளங்கும் கடவுளின் வளநகர் கடைமுடியாகும்.
1202 |
பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல் அடிபுல்கு பைங்கழ லடிகளிடம் கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர் கடிபுல்கு வளநகர் கடைமுடியே. |
1.111.7 |
திருநீறு அணிந்த மார்பின்கண் முறுக்கேறிய பூணூலை அணிந்தவராய், திருவடிகளில் பொருந்திய அழகிய கழல்களை உடையவராய் விளங்கும் அடிகள் இடம் கொடிகளில் பூத்த மலர்களோடு குளிர்ந்து சுனை நீரின் மணம் கமழும் வளநகராகிய கடை முடியாகும்.
1203 |
நோதல்செய் தரக்கனை நோக்கழியச் சாதல்செய் தவனடி சரணெனலும் ஆதர வருள்செய்த வடிகளவர் காதல்செய் வளநகர் கடைமுடியே. |
1.111.8 |
இராவணனைத் துன்புறுமாறு செய்து, அவன் மீது முதலில் கருணை நோக்கம் செய்யாமல் வலிமை காட்டிப்பின் அவன் திருவடியே சரண் எனக் கூறிய அளவில் அவனுக்கு ஆதரவு காட்டி அருள்செய்த அடிகளாகிய சிவபிரானார் விரும்பும் வளநகர் கடைமுடியாகும்.
1204 |
அடிமுடி காண்கில ரோரிருவர் புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச் சடையிடைப் புனல்வைத்த சதுரனிடம் கடைமுடியதனயல் காவிரியே. |
1.111.9 |
அடிமுடி காணாதவராகிய திருமால் பிரமர் அருகிற்சென்று அருள்புரிக எனப் போற்றி செய்து வழிபடுமாறு, சடைமிசையே கங்கையை அணிந்த சதுரப்பாடுடைய சிவபிரானது இடமாக விளங்குவது காவிரியின் அயலிலே உள்ள கடைமுடியாகும்.
1205 |
மண்ணுதல் பறித்தலு மாயமிவை எண்ணிய காலவை யின்பமல்ல ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த கண்ணுதல் வளநகர் கடைமுடியே. |
1.111.10 |
நீரிற் பல கால் மூழ்கலும் மயிர் பறித்தலும் ஆகிய புத்த சமண விரத ஒழுக்கங்கள் பொய்யானவை; ஆராயுமிடத்து இவை இன்பம் தாரா. ஒளி பொருந்திய நுதலினளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ள கண்ணுதலோனின் வளநகர் கடைமுடியாகும்.
1206 |
பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர் சென்றடை கடைமுடிச் சிவனடியை நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன இன்றமி ழிவைசொல வின்பமாமே. |
1.111.11 |
பொன்துகள் திகழும் காவிரியாற்றின் அலைகளின் நீர் முறையாகச் சென்று அடையும் கடைமுடியில் விளங்கும் சிவபிரான் திருவடிப் பெருமைகளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன இனிய தமிழாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபட இன்பம் ஆகும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.111.திருக்கடைமுடி , வளநகர், கடைமுடியே, கடைமுடியாகும், பொருந்திய, விளங்கும், அழகிய, அவன், கங்கை, கமழும், அணிந்த, திருக்கடைமுடி, மணம், திருமுறை, விளங்குவது, பிறை, செய்து, அடிமுடி, இன்பம், சிவபிரானது, எனப், படம், சூடிய, அணிந்தவனாய், இடம், ஆகிய, நீர், எழுந்தருளிய, மக்கள், திருச்சிற்றம்பலம், தேவாரப், பதிகங்கள், சென்று, தோன்றும், வளநகராகிய, முடியாகும், அடிகள், உடைய, மோதும், ஆகியவற்றை, மலரொடு