குறுந்தொகை - 51. நெய்தல் - தோழி கூற்று
(தலைவன் வரைந்து கொள்ளுதற்குரிய முயற்சிகளைச் செய்த காலத்து, அவன் விரைந்து வந்து மணந்தானல்லனென்று கவலையுற்ற தலைவிக்கு, “நானும் தாயும் தந்தையும் நின்னை அத்தலைவருக்கே மணம் செய்து கொடுக்க விரும்பியுள்ளோம். இந்த ஊரினரும் அம்பல் கூறும் வாயிலாக உங்கள் இருவரையும் சேர்த்துச் சொல்கின்றார்கள்” என்று தோழி கூறியது.)
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர் நூலறு முத்திற் காலொடு பாறித் துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை யானும் காதலென் யாயுநனி வெய்யள் எந்தையுங் கொடீஇயர் வேண்டும் |
5 |
அம்ப லூரும் அவனொடு மொழிமே. | |
- குன்றியனார். |
வளைவாகிய முள்ளை யுடைய கழிமுள்ளியினது மிக்க குளிர்ச்சியை உடைய கரிய மலர் நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல காற்றாற் சிதறி நீர்த்துறைகளுள்ள இடங்கள்தோறும் பரவுதற்கு இடமாகிய தூய மணலையுடைய கடற்கரைக்குத் தலைவனை யானும் விரும்புதலை உடையேன்; நம் தாயும் அவன்பால் மிக்க விருப்பத்தையுடையளாயிரா நின்றாள்; நம் தந்தையும் அவனுக்கே நின்னை மணஞ்செய்து கொடுக்க விரும்புவான்; பழிமொழியைச் சிலரறிய உரைக்கும் ஊரிலுள்ளாரும் அவனொடு நின்னைச் சேர்த்தே சொல்லுவர்.
முடிபு: சேர்ப்பனை யானும் காதலென்; யாயும் வெய்யள்; எந்தையும் கொடீஇயர் வேண்டும்; அம்பலூரும் அவனொடு மொழியும்.
கருத்து: நின்மணத்திற்குரிய முயற்சிகள் நடைபெறுகின்றன; நீ கவலற்க.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 51. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, யானும், நெய்தல், அவனொடு, கூற்று, குறுந்தொகை, வெய்யள், காதலென், கொடீஇயர், வேண்டும், மிக்க, நின்னை, சங்க, எட்டுத்தொகை, தாயும், தந்தையும், கொடுக்க, சேர்ப்பனை