குறுந்தொகை - 32. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தோழியினிடம் தன் குறைகூறி அவள் உடம்படாமையை அறிந்த தலைவன், “யான் தலைவியின் பிரிவை ஆற்றேன்; அவளை அடையும் பொருட்டு மடலேறினால் அவளுக்குப் பழி உண்டாகும்; வாளாவிருப்பின் வாழ்தலும் பழி; ஆதலின் இவை நேரா வண்ணம் நீ குறைநேர்வாயாக” என்று அவளுக்குக் கூறியது).
காலையும் பகலும் கையறு மாலையும் ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப் பொழுதிடை தெரியிற் பொய்யே காமம் மாவென மடலோடு மறுகில் தோன்றித் தெற்றெனத் தூற்றலும் பழியே |
5 |
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே. | |
- அள்ளூர் நன்முல்லையார். |
காலைப்பொழுதும் உச்சிப் பொழுதும் பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப் பொழுதும் ஊரினர் துயில்கின்ற இடையிரவும் விடியற்காலமும் என்ற இச்சிறு பொழுதுகள் இடையே தோற்று மாயின் அத்தகையோருடைய காமம் உண்மை அன்று; பிரிவு வருமாயின் அப்போது குதிரையெனக் கொண்டு பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தை ஊர்ந்து தெருவில் வெளிப்பட்டு யாவரும் இன்னாளால் இவன் இச் செயல் செய்தானென்று தெளியும்படி தலைவி செய்த துயரைப் பலர் அறியச் செய்தலும் பழிக்குக் காரணமாகும்; அது செய்யாது உயிரோடு வாழ்ந்திருத்தலும் பழிக்குக் காரணமாகும்.
முடிபு: பொழுது இடைதெரியின், காமம் பொய்; பிரிவு தலைவரின் தூற்றலும் பழியே; வாழ்தலும் பழியே.
கருத்து: தலைவியைப் பிரியின் உயிர் வாழேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 32. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், பழியே, தலைவன், குறிஞ்சி, காமம், வாழ்தலும், குறுந்தொகை, கூற்று, செய்த, பழிக்குக், காரணமாகும், பிரிவு, பொழுதும், தூற்றலும், சங்க, எட்டுத்தொகை