குறுந்தொகை - 31. மருதம் - தலைவி கூற்று
(அயலார் தலைவியை மணம் செய்யும் பொருட்டு முயன்ற காலத்தில் அதுகாறும் தலைவனைப் பற்றிய செய்தியை வெளியிடாத தலைவி, “நான் ஆடுகளத்தில் துணங்கையாடும் இயல்புடையேன்; என்னோடு நட்பு செய்து பிரிந்தமையால் என் கைவளைகளை நெகிழச் செய்த தலைவன் அத்துணங்கைக்குத் தலைக்கை தந்தான். அவன் இப்பொழுது எங்கே உள்ளானோ? பல இடங்களில் தேடியும் கண்டேனில்லை” என்று உண்மையைத் தோழிக்கு வெளிப்படுத்தியது).
மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்தக் கோனை யானுமோர் ஆடுகள மகளே என்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த |
5 |
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே. | |
- ஆதிமந்தியார். |
மாட்சிமை பொருந்திய தகுதியை உடையோனை வீரர் கூடியுள்ள சேரி விழாவின் கண்ணும் மகளிர் தம்முள் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்தின் கண்ணும் ஆகிய எவ்விடத்தும் கண்டேனில்லை; யானும் ஆடுகின்ற களத்திற்குரிய ஒரு மகளே; என் கையில் உள்ள சங்கை அறுத்துச் செய்து விளங்குகின்ற வளையல்களை நெகிழச் செய்த பெருமை பொருந்திய தலைவனும் ஆடுகின்ற களத்தில் உள்ள ஒருவனே.
முடிபு: மாண் தக்கோனைக் காணேன்; யானும் ஓர் ஆடுகள மகள்; குரிசிலும் ஓர் ஆடுகள மகன்.
கருத்து: என்னோடு துணங்கை ஆடிய தலைவன் ஒருவன் உளன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 31. மருதம் - தலைவி கூற்று, ஆடுகள, இலக்கியங்கள், தலைவி, கூற்று, யானும், ஆடுகின்ற, மருதம், குறுந்தொகை, காணேன், கண்ணும், உள்ள, பொருந்திய, மகளே, செய்த, என்னோடு, சங்க, எட்டுத்தொகை, செய்து, நெகிழச், மகளிர், தலைவன், துணங்கை