குறுந்தொகை - 267. பாலை - தலைவன் கூற்று
(‘முன்னோரைப் பின்பற்றி நாமும் பொருள் தேடச் செல்வேம்' என்று எண்ணிய தலைவன் பிறகு வாழ்நாளது சிறுமையையும், இளமையினது அருமையையும் கருதிச் செலவு தவிர்ந்தது.)
இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம் ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின் காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன வாலெயி றூறிய வசையில் தீநீர்க் கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய |
5 |
ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும் உறன்முறை மரபிற் கூற்றத் தறனில் கோணற் கறிந்திசி னோரே. |
|
- காலெறி கடிகையார். |
நெஞ்சே நாள்தோறும் முறையாக அடைதலாகிய மரபை உடைய கூற்றுவனது கண்ணோட்டம் இல்லாத கொலைத் தொழிலை நன்றாக அறிந்தோர் பெரிய இடத்தை உடைய பூமியின்கண் தொக்க பயனை உடைய பெரிய செல்வம் ஒருங்கே பொருந்துவதாயினும் கரும்பின் அடிப்பகுதியில் வெட்டிய துண்டத்தை உண்டாற் போன்ற சுவையை உடைய வெள்ளிய பல்லினிடத்தே ஊறிய குற்றம் இல்லாத இனிய நீரையும் திரட்சி அமைந்த குறிய வளையையும் உடைய இளைய தலைவி நீங்கி இருப்ப. முயற்சியின் பொருட்டு தாம் மட்டும் தனித்துப் பிரிந்து செல்லார்.
முடிபு: அறிந்திசினோர் வளம் இயைவதாயினும் குறுமகள் ஒழியப் பிரியார்.
கருத்து: நான் தலைவியைப் பிரியேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 267. பாலை - தலைவன் கூற்று, உடைய, இலக்கியங்கள், தலைவன், கூற்று, குறுந்தொகை, பாலை, இல்லாத, பெரிய, பிரியார், கரும்பின், எட்டுத்தொகை, சங்க, காலெறி