குறுந்தொகை - 210. முல்லை - தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து சென்ற மீண்டுவந்த தலைவன், “யான்பிரிந்த காலத்தில் தலைவி துயருறாமல் நன்கு ஆற்றுவித்திருந்தாய்”என்று தோழியைப் புகழ, “என் செயல் ஒன்றுமின்று; காக்கை கரைந்தநன்னிமித்தத்தால் அவளை ஆற்றுவித்தேன்” என்று அவள் கூறியது.)
திண்டேர் நள்ளி கானத் தண்டர் பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு |
5 |
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே. | |
- காக்கை பாடினியார் நச்செள்ளையார். |
திண்ணிய தேரையுடையநள்ளி யென்னும் உபகாரியினது காட்டிலுள்ள இடையர்களுக்குரிய பல பசுக்கள் உண்டாக்கிய நெய்யோடு தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில் முற்றும் ஒருங்கே விளைந்த வெண்ணெல்லரிசியால் ஆக்கிய வெம்மையையுடையசோற்றை ஏழு பாத்திரங்களில்ஏந்திக் கொடுத்தாலும் என் தோழியாகியதலைவியினுடைய பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும்பொருட்டு விருந்தினர் வரும்படி கரைதலைச் செய்த காக்கைக்குரிய அப்பலியானது சிற்றளவினதே யாகும்.
முடிபு: சோறு ஏந்தினும் கரைந்த காக்கையது பலி சிறிது.
கருத்து: காக்கை கரைதலாகிய நின்வரவுக்குரிய நிமித்தங் காட்டி,யான் தலைவியை ஆற்றுவித்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 210. முல்லை - தோழி கூற்று, இலக்கியங்கள், முல்லை, காக்கை, குறுந்தொகை, தோழி, கூற்று, காக்கையது, செய்த, கரைந்த, சங்க, எட்டுத்தொகை, விளைந்த