குறுந்தொகை - 13. குறிஞ்சி - தலைவி கூற்று
(பாங்கியிற் கூட்டத்தின் பின் பிரிவாற்றாமல் வருந்திய தன் வேறுபாடுகளை உணர்ந்து கவன்ற தோழியை நோக்கி, ‘‘தலைவரது பிரிவினால்எனது உள்ளம் நோய் கொண்டது; கண்களும் அழகிழந்து பசலையை அடைந்தன’’ என்று தலைவி கூறி ஆற்றாமைக்குக் காரணத்தைப் புலப்படுத்தியது.)
மாசறக் கழீஇய யானை போலப் பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற் பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன் நோய்தந் தனனே தோழி பயலை ஆர்ந்தன குவளையங் கண்ணே. |
5 |
- கபிலர். |
தோழி! மேலே உள்ள புழுதி முற்ற நீங்கும்படி பாகனால் கழுவப்பட்ட யானையைப் போல பெரிய மழையை ஏற்றுத் தூய்மையுற்ற பெரிய சருச்சரையை உடைய துறு கல்லானது பசுமையை உடைய ஓரிடத்தில் தங்குகின்ற மலை நாட்டை உடைய தலைவன் காம நோயைத் தந்தான்; அதனால் முன்பு குவளை மலரைப் போன்று இருந்த என்னுடைய அழகிய கண்கள் இப்பொழுது பசலை நிறம் நிரம்பப் பெற்றன.
முடிபு: தோழி, நாடன் நோய் தந்தனன்; அதனால் என் கண்கள் பசலையார்ந்தன.
கருத்து: தலைவன் பிரிவினால் வேறுபாடுகள் உண்டாயின.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 13. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, உடைய, கூற்று, தலைவன், கண்கள், அதனால், நோய், எட்டுத்தொகை, சங்க, நாடன், பெரிய