உடுமலை முத்துசாமிக்கவிராயர் - நடிகன் - நாடகக் கலைக் கட்டுரைகள்
சுந்தரராவ் அவர்கள் பிரசித்தி பெற்ற நவாப் கோவிந்தசாமி ராவ் அவர்களுக்குக் கதாநாயகியாக நடித்தவர். அவர் கவிராயரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார். 'விபீஷண சரணாகதி, 'போஜராஜன், 'பீஷ்மர் சபதம், 'ஞான சவுந்தரி' முதலிய நாடகங்கள் ஜகன்மோகன நாடகக் குழுவுக்காக கவிராயரால் எழுதப்பெற்றன. 'தயாநிதி,' 'கண்ணாயிரம்' அகிய இரு சமுதாய நாடகங்களையும் இவர் எழுதியிருக்கிறார். பிரெஞ்சு நாடகப் புலவர் மோலியரின் 'லோபி' நாடகத்தையும் இவர் தமிழில் எழுதியிருக்கிறார். இந்நாடகங்கள் அனைத்தும் அக்கால முறைப்படி பாடல்களாகவே எழுதப் பெற்றன.
நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் 'மனோகரா,' 'தாசிப்பெண்,' 'சகுந்தலா' ஆகிய நாடகங்களுக்குக் கவிராயர் பாடல்கள் சிலவற்றை எழுதியிருக்கிறார்.
பரமக்குடி அரங்கசாமி அய்யங்கார் அவர்களுக்காக இவரெழுதிய நாடகம் 'சம்பூர்ண இராமாயணம்', இந்நாடகம் அச்சில் வந்துள்ளது.
நாடகத்தைத் தவிர மற்றும் பல நூல்களைக் கவிராயர் ஆக்கித் தந்திருக்கிறார். அவற்றில் 'வடிவேலர் சதகம்' என்னும் நூல் மிகச் சிறந்தது. நூறு பாடல்கள் கொண்டது. இதில் பத்துப் பாடல்கள் சங்கர தாஸ் சுவாமிகள் இயற்றியவை என்பது குறிப்பிடத்தக்கது. கவிராயர் எழுதிய 'திருவான்மியூர் கீத சேகரம்,' 'ஏனாதி மாலிகாபரணம்', 'பாசுரசேகரம்,' 'முத்துச்சாமி சபதம்' 'உசிதகவிதாமஞ்சரி', 'மனோரத விநோதம்,' 'இன்பவல்லிக் கும்மி' ஆகிய நூல்களும் அச்சில் வந்துள்ளன.
திண்டுக்கல்லையடுத்த கன்னிவாடி ஜமீனில் இவர் பல ஆண்டுகள் சமஸ்தான வித்துவானாக இருந்து வந்தார். பல புலவர்கள் கூடிய பேரவையிலே கவிராயர் அவர்களின் புலமை இன்பத்தை வியந்து 'சரபகவி' என்னும் பட்டம் வழங்கப்பெற்றுள்ளது.
கவிராயருக்கு நூற்றுக்கணக்கான மாணாக்கர்கள் உண்டு. அவர்களிலே தலைசிறந்தவர்கள் கே. வி. சந்தானகிருஷ்ண நாயுடு, சங்கரலிங்கக் கவிராயர், உடுமலை நாராயணக் கவி ஆகியோராவர்.
பிரபல நடிகர்களாகவும், சகோதரர்களாகவும் விளங்கிய கே. எஸ். செல்லப்பா ஐயர், அனந்த நாராயணய்யர் ஆகியோர் நடித்துவந்த ஆரிய கான சபாவில் இவர் சில ஆண்டுகள் நாடகாசிரியராகப் பணியாற்றினார். நாடகங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் இவர் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடிக் கொடுத்திருக்கிறார். ஓரடி, சந்தம், வண்ணம் ஆகிய வகைகளிலே கவிராயர் பாடியுள்ள பாடல்களை இப்போதும் பழம்பெரும் நடிகர்கள் சிலர் பாடிப் பாடி மகிழ்வதை நான் கேட்டிருக்கிறேன்.
கன்னிவாடி ஜமீந்தார் அப்பய்ய நாயக்கர் இவருக்கு மானியங்கள் வழங்கியுள்ளது. இவர் பாடிய பாடல் ஒன்றின் மூலம் நமக்குத் தெரிகிறது.
நானியம்பும் பாடலுக்கு,
ஞாபக மெந்நாளும் நிற்க,
மானியம் பூத்தந்த மகராஜன்,
வானியஞ் சேர்,
ஆத்தானக், கன்னிநகர்,
அப்பைய சாமி யென்னைக்
காத்தான், எனக்காத்தான் காண்
இது அப்பைய நாயக்கரின் மேல் பாடியுள்ள பாடல்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடுமலை முத்துசாமிக்கவிராயர் - நடிகன் - நாடகக் கலைக் கட்டுரைகள், இவர், கவிராயர், உடுமலை, நாடகக், பாடல்கள், ஆகிய, எழுதியிருக்கிறார், கலைக், முத்துசாமிக்கவிராயர், கட்டுரைகள், நடிகன், ஆண்டுகள், கன்னிவாடி, நூற்றுக்கணக்கான, பாடியுள்ள, அப்பைய, பாடல், என்னும், அச்சில், நாடகப், சபதம், அவர்களின், நாடகம், கலைகள், arts, drama