சிங்கப்பூரில் தமிழ் நாடகம்.... தற்குறிகளின் கொலு - நாடகக் கலைக் கட்டுரைகள்
இந்திய கலைகள் மையத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். சர்மா 1954 முதல் 1987 வரை நகைச்சுவை, மர்ம நாடகங்களை எழுதித் தயாரித்தார். சாங்கி நலனபிவிருத்தி சபா உறுப்பினராகவும் பின் சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்தில் தமிழ்ப்பிரிவின் தலைவராகவும் இருந்த எம்.கே. நாராயணன் 1958 முதல் 1987 வரை பல சமூக நாடகங்களையும் மர்ம நாடகங்களையும் ஒலிபரப்பியும் மேடையேற்றியும் வந்தார். சிங்கப்பூரின் இந்த நாடக முன்னோடிகள் ஏறக்குறைய 50 ஆண்டு காலமாக சிங்கப்பூர் தமிழ் நாடகத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்தனர்.
எனினும் இவர்கள் உலகளாவிய நிகழ்கலை அரங்கியல் அணுகுமுறையோடு, ஞானத்தோடு, நிபுணத்துவத்தோடு தமிழ் நாடகத்தின் மரபையோ நவீன அரங்கையோ சிறிதும் புரிந்துகொள்ளமல் வெறும் உணர்ச்சிகரமான வசனப் பரிமாற்றத்தையும் காட்சி மாற்றத்தையும் திரைச்சீலைத் திறப்பையும் மூடலையும் கதாநாயகன், நாயகி, வில்லன், நகைச்சுவை, சுபம் என்பதே நாடகம் என்றெண்ணி மயங்கி இருந்தனர்.
தரம் இல்லையெனினும் இவர்களின் பங்களிப்புக்காக அளிக்கப்படும் மரியாதையை, இவர்கள் தரமான கலைஞருக்குக் கொடுக்கப்படும் கௌரவமாக எண்ணிக் கொள்கின்றனர். இவர்கள் சாதனைகளைப் பற்றிய ஓர் ஆழமான விமர்சனமே, அதில் கலை நவிற்சியோ அறிவுவெளிப்பாடோ இல்லை என்பதை வெளிப்படுத்தும். 1980ல் ஏற்பட்ட சிங்கப்பூர் ஆங்கில, மலாய், சீன நாடகங்களின் சமகால மாற்றங்களும் வளர்ச்சியும் தமிழ் நாடகக் குழுவினரை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை - இவர்களும் அதே கலாசார அமைப்புகள், அரசாங்கத்தின் நிதியைப் பெறுபவர்களாக இருந்தும், நிபுணத்துவம் பெறுவதற்கான ஊக்குவிப்புத் திட்டங்களும் பொருளாதார உதவியும் வழங்கப்பட்டிருந்தும், எவ்விதச் சொரணையும் இல்லாமல் எப்பொழுதும் போலவே குப்பை கொட்டிக் கொண்டிருந்தார்கள்.
நான்கு மொழிகளிலும் சிங்கப்பூர் நாடகங்கள் 1978 முதல் 1987 வரை ஷெல்வருடாந்திர நாடக விழா தொடரில் நிதி உதவி பெற்று வந்தன.
இந்த நாடக விழா நிறுத்தப்பட்ட பிறகு நான்கு தமிழ் அமெச்சூர் நாடகக் குழுக்களான, சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கம், இந்திய கலைகள் மையம், வெண்ணிலா கலை அரங்கம், தமிழவேள் நாடக மன்றம் ஆகியவை செயலிழந்து போயின. புதியவைகளைக் கற்று தங்களை மாற்றிக் கொள்வதற்குத் தேவையான அறிவு, சக்தி, அனுபவம், தொடர்பு, நிபுணத்துவம், எதிர்கால நோக்கு எதுவுமே இந்தக் குழுக்களிடம் இருக்கவில்லை. ஆனால் வானொலி, தொலைக்காட்சி, மேடைகளில் நடித்து வந்த சில இளையர்கள் ஒன்று சேர்ந்து 1988ல் "ரவீந்திரன் நாடகக் குழு" என்று ஒன்றை அமைத்தார்கள் - தமிழ் மெலோடிராமாவை தொடர்வதற்கு இக்குழு 1991ல் பதிவு செய்யப்பட்ட குழுவானது.
சிங்கப்பூரின் முதல் நவீன பரீட்சார்த்த நாடகம் ந.முத்துசாமியின் "நாற்காலிக்காரர்". எஸ்.தேன்மொழி இந்த நாடகத்தை 1989ல் நடைபெற்ற நாடக விழாவில் சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்தின் சார்பில் இயக்கி, அரங்கேற்றினார். நாடகத்தில் ஆர்வமுள்ள இளையர்களை சபா நாடகத்திலிருந்து வெளியே இழுப்பதற்காக, 1989 நாடக விழாவில் ந.முத்துசாமி அழைக்கப்பட்டிருந்தார். ந. முத்துசாமியின் கலை மேற்பார்வையில் நாடகம் தயாரிக்கப்பட்டது.
இந்த நாடகத்தில் கருப்பு-வெள்ளை வண்ணம் பூசப்பட்ட ஒரு நாற்காலியைத் தவிர வேறு எந்தப் பொருளுமே இல்லை என்பது நடிகர்களுக்கு வியப்பாக இருந்தது. உடல் அசைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட, இந்த அரசியல் அங்கதப்பாணி நாடகத்தை அவர்களால் புரிந்தகொள்ள முடியவில்லை. இது தமிழ் நாடகமா என்ற கேள்வியை எழுப்பியது. இதில் நடித்த ரவீந்திரன் நாடகக் குழுவினர் மீண்டும் சபாநடகத்துக்கே திரும்பி விட்டார்கள்.
1991 மார்ச்சில் இளையர் நாடக விழாவுக்காக மலேசிய நாடக எழுத்தாளர் Hatta Azad Khan எழுதிய "மாயாட்" என்னும் மலாய் நாடகத்தின் தழுவலான "பிணம்" (எழுத்து : இளங்கோவன்) நாடகத்தில் ரவீந்திரன் நாடகக் குழுவினரை இயக்கினார் தேன்மொழி. வட்ட அரங்கமான சப்ஸ்டேஷனில் நாடகம் நடிக்கப்பட்டது. வட்ட அரங்கத்தில் நடிகர்களை நடிக்கப் பழக்குவது சிரமாக இருந்தது. பார்வையாளர்களுக்கு பின்புறத்தைக் காட்டுவது அநாகரீகம் என்று அவர்கள் நினைத்திருந்தனர். மெலோடிராமா முறையில் உணர்ச்சியைக் கொட்டி கத்தி நடிக்கும் நடிப்பையும் கதை சொல்லும் பாணி வசனங்களையும் மட்டுமே அறிந்திருந்த அவர்களால், நாடகத்தின் உடல் வெளிப்பாடுகளையோ, தொழில் நுட்ப வெளிப்பாட்டையோ உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. 'நாற்காலிக்காரர்', 'பிணம்' இரண்டு நாடகங்களும் இளங்கோவனின் மேற்பார்வையிலேயே தயாரிக்கப்பட்டன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிங்கப்பூரில் தமிழ் நாடகம்.... தற்குறிகளின் கொலு - நாடகக் கலைக் கட்டுரைகள், தமிழ், நாடக, நாடகக், நாடகம், சிங்கப்பூர், கலைகள், நாடகத்தை, நாடகத்தின், ரவீந்திரன், நாடகத்தில், சிங்கப்பூரில், இவர்கள், கலைக், தற்குறிகளின், கொலு, கட்டுரைகள், இந்திய, விழாவில், தேன்மொழி, நாற்காலிக்காரர், முத்துசாமியின், இளையர், வட்ட, அவர்களால், உடல், பிணம், முடியவில்லை, நிபுணத்துவம், arts, drama, சிங்கப்பூரின், நாடகங்களையும், மர்ம, நவீன, இல்லை, நான்கு, நகைச்சுவை, குழுவினரை, மலாய், விழா