தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள்
தொல்காப்பியக் காலத்திலும், சங்க காலத்திலும் நாடகம் ஆடலும் பாடலும் இணைந்து விளங்கியது. ஆடவரும் பெண்டிரும் சேர்ந்து குழுவினராகச் சென்று நாடெங்கும் ஆடியும் பாடியும் வந்தனர். ஓரிடத்திலும் நிலையாகத் தங்கி வாழாமல் ஊர் ஊராகச் சென்றனர். கூத்தாடியவர்களை பிங்கலந்தை (824) நாடகர், கிருத்தர், நடர், கண்ணுளர், கோடியர், வயிரியர், கூத்தர் எனப் பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகிறது.
அக்கால நாடகங்கள் இசைப் பாடல்களால் ஆனமையால், நாடகக் கலைஞர்களுக்குப் பாணர்கள் எனப்பட்ட இசைக் கலைஞர்களும் துணையாக அமைந்திருந்தனர். பல்லியம், முழவு, எல்லரி, ஆகுளி, பதலை, குழல், குறும்பறை, தும்பு, சிறுபறை, சீறியாழ், தட்டை, தண்ணுமை, துடி, பன்றிப்பறை, பாண்டில், பேரியாழ் போன்ற பல்வேறு இசைக்கருவிகளையும் அவர்கள் கையாண்டு வந்தனர். நிறைந்த இசைப் பாடல்களைக் கொண்ட நீண்ட நாடகங்களே அக்காலத்தில் நிகழ்த்தப்பட்டன.
ஆடல் பாடலில் வல்லவராய் விளங்கிய பெண்கள் விறலியர் ஆவர். பெரும்பாலும் கூத்தர் அல்லது பாணர் தம் மனைவியரே இக்கலைகளில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மன்னர்கள், வள்ளல்கள் போன்றோரின் வெற்றிச் சிறப்பினை விறல்படப் பாடி ஆடினமையால் விறலியர் எனப்பட்டனர். விறலியாற்றுப்படைப் பாடல்கள் இவர்களின் பயணங்களையும் அனுபவங்களையும் வெளிப்படுத்துகின்றன. நாடகக் கலைஞர்கள் அனைவரையும் அக்கால மக்கள் விருந்தோம்பி உபசரித்தனர். நாடகக் கூத்துகளை நிகழ்த்தி, அவர்கள் ஊரை விட்டுச் சென்றபோது அவ்வூர் மக்கள் அவர்களது பிரிவு கருதி வருந்தினர்.
சங்க மருவிய கால நாடகக் கலை:
கி.பி.முதல் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரையிலுள்ள காலமான சங்க மருவிய காலத்தில் தோன்றிய மிகச் சிறந்த இலக்கியம் சிலப்பதிகாரமாகும். இது நாடகக் கலை பற்றிய செய்திகளை நாம் நன்கறிய உதவும் கலைக்களஞ்சியமாகக் காட்சியளிக்கிறது. சிலப்பதிகாரத்தில் காணப்படும் வேத்தியல், பொதுவியல் ஆகிய இருவகைக் கூத்துகளைப் பற்றிய குறிப்புகளும், மாதவி ஆடிய பதினோராடல் பற்றிய செய்திகளும், இந்நூலுக்கு உரையியற்றிய அடியாருக்கு நல்லார் தரும் விளக்கங்களும் அக்கால கூத்துக்கலையைப் பற்றி அறியப் பெரிதும் உதவுகின்றன.
வேத்தியல் கூத்து உயர்ந்த கற்பனையையும் சிந்தனையையும் கொண்டு கற்றோருக்குச் சுவையூட்டுவதாக நுட்பமான உணர்வுகளை கலைநயமாகப் படைத்துக் காட்டினமையால் சாந்திக் கூத்து எனப்பட்டது. நேர்மாறாகப் பொதுவியல் கூத்து எல்லா மக்களும் எளிதில் உணர்ந்து சுவைக்குமாறு மக்களை வியப்பில் ஆழ்த்தும் வேடிக்கைச் செயல்களைக் கொண்டதாகையால் விநோதக் கூத்து என்றழைக்கப்பட்டது. வேத்தியல் கூத்தாகிய சாந்திக் கூத்தின் ஒரு பிரிவே நாடகம் எனப்படும்.
"நாட்டியம் பிறந்தது நாடகம் நாடகத்து ஆட்டமும் ஆளத்து அலைவழி ஆகும்" என்கிறது கூத்தநூல் (சுவை நூல்:111). சிலப்பதிகாரத்தில் குரவைக் கூத்து, கலிநடம் எனும் கழைக்கூத்து, குடக்கூத்து, கரணக் கூத்து, தோற்பாவைக் கூத்து, நகைக்கூத்து, வரிக்கூத்து, சாக்கைக் கூத்து ஆகிய பல்வேறு கூத்துகள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இத்துடன் மாதவி ஆடிய பதினோராடல்கள் பற்றியும் விளக்கமாகக் கூறப்படுகிறது.
கூத்துகள் நிகழ்த்தப்பெற்ற அரங்குகளைப் பற்றிய விரிவான விளக்கங்களையும் வருணனைகளையும் சிலப்பதிகாரத்தில் நாம் காணலாம். இந்த அரங்கத்தில் நாடக மாந்தர் உட்புகவும், வெளிசெல்லவும் இரண்டு வாயில்கள் இருந்தன. இவற்றோடு கூத்தர் மறைந்து செல்லும் இடமும், அவர்கள் தங்கியிருக்கக் குடிஞைப் பள்ளியும், எதிரே மன்னர் சுற்றத்தோடிருக்க அவையங்கமும் ஏனைய மக்கள் தங்கும் பகுதியும் இருந்தன என்பார் அடியாருக்கு நல்லார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள், கூத்து, நாடகக், பற்றிய, நாடகம், நாடக, பல்வேறு, அக்கால, தமிழ், சிலப்பதிகாரத்தில், கூத்தர், மக்கள், வேத்தியல், சங்க, கட்டுரைகள், கலைக், வரலாறு, மாதவி, ஆடிய, இருந்தன, ஆகிய, சாந்திக், கூத்துகள், அடியாருக்கு, நல்லார், இசைப், கலைகள், arts, drama, காலத்திலும், வந்தனர், நாம், மருவிய, விறலியர், பொதுவியல்