தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள்
நாடகம்:
நாடு+அகம், அதாவது நாட்டின் அகத்தைக் காட்டுவதுதான் நாடகம் ஆகும்.
பழங்காலத்தில் - பேரவைகள் நிறுவி, அங்கு அரங்கினில் கூத்தாட்டங்கள் நிகழ்த்தப்பட்டதையும், அவ்வாடல்களை மக்கள் பெருந்திரளாக கூடிப் பார்த்தனர் என்பதையும் "கூத்தாட்டவைக் குழாத்தற்றே" என்னும் திருக்குறள் புலப்படுத்துகிறது.
பெரிய நகரங்களில் செல்வந்தர்கள் நீண்ட சுடர்த் தூண்களால் கட்டப்பட்ட தமது அழகிய மாளிகையின் மேல் மாடத்தின் நிலா முற்றத்தில் தமது மகளிருடன் கூடியிருந்து, இன்னிசை முழக்கத்தினிடையே கூத்துகள் நிகழச் செய்து அகமகிழ்ந்து இரவுப் பொழுதைப் போக்கினர் என்னும் செய்தி பட்டினப்பாலையில் கூறப்படுகிறது.
வைதிகச் சமயக் கிளர்ச்சியினால் இசைப்பாட்டு பெரிதும் பிரசாரமெய்தியது. இசைப்பாடல்களால் நாட்டியம் சிறப்புற்றது. கோயில் முற்றமே நாட்டிய அரங்காய் அமைந்தது. முன்பெல்லாம் அரசனது விருப்பத்தையும் பொதுமக்கள் திரளாகக் கூடும் சந்தர்ப்பத்தையும் பொருத்து நாட்டியம் நடைபெற வேண்டியதாய் இருந்தது. கோயில்கள் தோன்றிய காலத்தில் விழா எடுத்து நாட்டியம் நடைபெறச் செய்து பொதுமக்கள் கவனத்தை கவர வேண்டியதாயிற்று. அரசன் முதல் ஆண்டி வரை இதனை அனுபவித்து மகிழ முடிந்தது. கோவிலில் இவ்விதம் நடந்ததென்பதைக் கல்வெட்டுகளால் அறிகிறோம்.
நாட்டியத்தால் விளைந்த இன்பம் சிற்றளவினதாய் இருந்தாலும், பாட்டும் அபிநயமும் நீடித்துச் செல்வனவாக இல்லாதிருந்ததாலும், மேலும் அதன் நுட்பமான கலைநயங்களை முற்றும் உணர்வது கடினமாக இருந்ததாலும், மக்கள் மனம் திருப்தியடையவில்லை. நீடித்து நிகழ்வதாய் எளிதில் இன்பம் பயப்பதாய், நாட்டியக் கலையோடு தொடர்புடையதாய் அமையும் கலையை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கினர். இந்த ஆவலின் பயனாக கதை தழுவி வரும் நாட்டியம் ஏற்பட்டது. சாந்திக்கூத்தின் வகையாகிய நாடகம், கதை தழுவி வரும் கூத்தாகும் என சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியாருக்கு நல்லார் விளக்கியிருப்பது இங்கே உணரத்தக்கது. இவ்விதம் நாட்டியம் என்ற பொருளினின்று கதையை நடித்துக் காட்டும் கூத்து எனும் பொருளுக்கு மாறி நாடகம் என்பது நிகழ்த்தப்பட்டது. (தற்கால நாடகத்தை இட்டு வந்த வழியில் முக்கியமான மைல் கல் என்று இதனைக் கொள்ளலாம்).
சங்ககால நாடகக் கலை:
கூத்து |
துணங்கைக் கூத்து போரில் வெற்றி பெற்ற மன்னர்களாலும், வீரர்களாலும் பெரிதும் ஆடப்பெற்றது. இது சமயச் சார்புடைய கூத்தாகவும் மக்களின் மனமகிழ் கூத்தாகவும் ஒரே காலத்தில் இருந்து வந்தது. வேலன் வெறியாட்டு, வேலனாடல் என்றும் அழைக்கப்பட்ட வெறியாடல் கூத்து முருகன் அல்லது கொற்றவை வழிபாட்டின்போது ஆடப்பெற்றது. தமிழகத்தின் தென்பகுதியிலும் கேரளத்திலும் இவ்வெறியாடல் கூத்து இன்றும் பேய் விரட்டும் சடங்காகக் காணப்பட்டு வருகிறது. ஆடவரும் பெண்டிரும் கலந்து கைகோர்த்து ஆடிய கூத்து வள்ளிக்கூத்தாகும். குரவைக் கூத்து தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பெரிதும் ஆடப்பெற்ற கூத்தாக சங்க இலக்கியங்களில் மிகுதியாக இடம்பெறுகிறது. ஆடவரும் பெண்டிரும் கலந்து கைகோர்த்து, முரசுகளை முழங்கி, பறைகளை அறைந்து, பாடல்களைப் பாடி ஆரவாரம் நிறைந்த கூத்தாக குரவை ஆடப்பட்டு வந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள், கூத்து, நாட்டியம், நாடகம், நாடகக், காலத்தில், சங்க, மக்கள், நாடக, வரலாறு, கலைக், கட்டுரைகள், தமிழ், ஆடப்பெற்றது, சமயச், குரவை, வெறியாடல், பெண்டிரும், கைகோர்த்து, கூத்தாக, கலந்து, ஆடவரும், வந்தது, தமிழகத்தின், கூத்தாகவும், விழா, என்னும், தமது, கலைகள், arts, drama, கூத்துகள், செய்து, தழுவி, இன்பம், இவ்விதம், பொதுமக்கள், வரும்