தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி - நாடகக் கலைக் கட்டுரைகள்
தமிழ் நாடக உலகம் "தமிழ் நாடகத் தலைமையாசிரியர்" என்று சங்கரதாஸ் சுவாமிகளையும், "தமிழ் நாடகத் தந்தை" என்று பம்மல் சம்பந்த முதலியாரையும் இதயத்தில் வைத்துப் போற்றி வருகிறது.
1916-ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடகவுலகில் ஒரு புரட்சியேற்பட்டது. பெரியவர்கள் நடித்து வந்த சில நாடக சபைகளில் ஒழுங்கும் கட்டுப்பாடும் சீர்குலைந்து மேடைகளிலேயே போட்டி போட்டுக் கொண்டு பாடவும் பேசவும் தொடங்கிவிட்டதால் ஆசிரியர் சங்கரதாஸ் சுவாமிகள் முழுதும் சிறுவர்களையே நடிகர்களாகக் கொண்ட நாடக சபையை ஆரம்பித்தார்.
இப்படி ஆரம்பிக்கப்பட்ட நாடக சபைகளில் தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா, பால மீனரஞ்சனி சங்கீத சபா, மதுரை ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனி, ஸ்ரீ பால ஷண்முகாநந்த சபா முதலியவை குறிப்பிடத்தக்கவை. இவர்கள் யாவரும் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களையும், சம்பந்த முதலியார் நாடகங்களையும் நடித்து வந்தனர்.
1918 ஆம் ஆண்டில் எனது 5 வயதுப் பருவத்தில் நான் சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவனாக நாடகத்துறையிலே ஈடுபட்டேன். இன்று எனக்கு வயது 43. ஏறக்குறைய 38 ஆண்டுகள் நாடக மேடையிலேயே என் காலம் கழிந்தது. இடையிடையே சந்தர்ப்பச் சூழ்நிலைகள் சினிமா உலகுக்கு என்னை இழுத்துக் கொண்டு போயிருக்கின்றன. என்றாலும் இன்னும் நாடக நடிகனாகவே நான் பணிபுரிந்து வருகிறேன். சென்ற 38 ஆண்டுகளாக நடிகனாகவும், நாடக ஆசிரியனாகவும், நாடகத் தயாரிப்பாளனாகவும், நாடகக் குழுவின் தலைவனாகவும் எனது நாடக வாழ்வு வளர்ந்து வந்திருக்கிறது.
மேடையின் இருபுறத்திலும் தீவட்டிகளை வைத்துக்கொண்டு நாடகம் நடத்திய அந்தக் காலத்தையும், அதன் பிறகு கியாஸ் லைட், பெட்றோமாக்ஸ் லைட் எல்லாம் வந்து கடைசியாகக் கண்ணைப் பறிக்கும் மின்சார வெளிச்சத்திலே நாடகங்களை நடிக்கும் இந்தக் காலத்தையும் எண்ணிப் பார்த்தால் அடேயப்பா! எத்தனை பெரிய மாற்றங்கள்! முன்பெல்லாம் நாடகங்களில் பாட்டுக்களே அதிகம். ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வதானாலும் நாடகப் பாத்திரங்கள் பாடிக்கொண்டுதான் சண்டை போடுவார்கள்! பாட்டுப் பாடாமல் எங்களுக்கு காதலே வராது! அழும் போதும் பாட்டு; சிரிக்கும்போதும் பாட்டு! வசனம் அபூர்வமாக எப்போதாவது வரும்.
வேறு சில நாடகங்களில் பார்த்திருக்கிறேன். ஒருவருக்கும் தெரியாமல் ஒளிந்து மறைந்து கொள்ளையடிக்க வரும் திருடன் கூடக் காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடிப்பாடி ஆர்ப்பாட்டத்தோடு வருவான். ஒரு நாடகத்தில் குறைந்த பட்சம் நூறு பாடல்கள் இருக்கும். நாடகம் இரவு 10 மணிக்குத் தொடங்கிச் சூரியன் உதிக்கும் வரை நடைபெறும்.
இப்போதெல்லாம் பாடல்களின் முக்கியத்துவம் குறைந்து, மூன்று நான்கு பாடல்களே பாடப்படுகின்றன. அதிகமாகப் போனால் மூன்றரை மணி நேரத்துக்கு மேல் எந்த நாடகமும் நடைபெறுவதில்லை. இந்தக் கால அளவை இரண்டரை மணி நேரமாகக் குறைக்கவும் முயன்று வருகிறோம்.
புராண இதிகாசக் கதைகளையும் நாடோடிக் கற்பனைக் கதைகளையுமே நாடகமாக்கி நடித்து வந்த தமிழ்நாடக உலகில் 1922-ம் ஆண்டிலிருந்து சமுதாய மறுமலர்ச்சி நாடகங்களும் நடைபெறத் தொடங்கின.
பால்ய விவாகம், பொருந்தாமணம், வரதட்சணைக் கொடுமை இவைபோன்ற சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்ட ஜே.ஆர்.ரங்கராஜ"வின் இராஜாம்பாள், இராஜேந்திரன், சந்திரகாந்தா, மோகன சுந்தரம், வடுவூர் துரைசாமி ஐயங்காரின் மேனகா முதலிய நாவல்களை எம்.கந்தசாமி முதலியார் என்னும் பெரியார் மேடை நாடகங்களாக்கி, பாய்ஸ் கம்பெனி பலவற்றில் ஆசிரியராயிருந்து நடிக்கச் செய்தார்.
பாரத நாட்டின் சுதந்தரப் போராட்டத்தில் தமிழ் நாடகமேடையும் பெரும் பங்கெடுத்துக் கொண்டது. கதரின் வெற்றி, தேச பக்தி, தேசீயக்கொடி முதலிய நாடகங்கள் ஆங்கிலேய சர்க்காரால் தடை செய்யப்பட்ட விடுதலை ஆர்வம் ஊட்டிய நாடகங்களாகும். நாகபுரிக் கொடி சத்யாக்கிரகம் நடந்தபோது, 'தேசியக் கொடி' என்ற தமிழ் நாடகம் நாடு முழுதும் மக்களிடையே சுதந்தர உணர்ச்சியைப் பரப்பியது. கதரின் வெற்றி, தேசீயக் கொடி ஆகிய நாடகங்களை எழுதியவர் தேசபக்தர் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் ஆவார். பம்பாய் மெயில், பதிபக்தி மற்றும் பல சமுதாய நாடகங்களையும் இவர் எழுதியிருக்கிறார். வெ.சாமிநாதசர்மா எழுதிய பாண புரத்து வீரன், சி.எ.ஐயாமுத்து எழுதிய இன்பசாகரன், எஸ்.டி.சுந்தரம் எழுதிய கவியின் கனவு இவையெல்லாம் சிறந்த தேசீய நாடகங்களாகப் போற்றற்குரியவை.
பேசும்படம் வந்தகாலத்தில் எல்லா நாடுகளிலும் ஏற்பட்டதுபோலத் தமிழ்நாட்டிலும் நாடகமேடை இறந்துவிடுமென எண்ணினார்கள். ஆனால், எனக்குத் தெரிந்த வரையில் நாடக மேடையை நல்ல முறையில் கையாண்டவர்கள் எவரும் அழிந்து விடவில்லை. சினிமா வளர்ச்சியால் நாடக மேடையும் புதிய நுணுக்கங்கள் பலவற்றைக் கையாண்டு போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சி பெற்றது என்றே சொல்ல வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, தமிழ், சங்கரதாஸ், நாடகம், வளர்ச்சி, நாடகக், நாடகங்களையும், கொண்டு, நாடகத், போட்டுக், நடித்து, சினிமா, எழுதிய, கட்டுரைகள், கொடி, கலைக், நாட்டில், சண்டை, இந்தக், லைட், நாடகங்களை, பாட்டு, நாடகங்களில், கதரின், காலத்தையும், வெற்றி, முதலிய, சுந்தரம், சமுதாய, வரும், முழுதும், ஆண்டில், வந்த, சம்பந்த, கலைகள், drama, arts, சபைகளில், போட்டி, முதலியார், எனது, சுவாமிகளின், கம்பெனி, கொண்ட, பாய்ஸ், நான்