தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி - நாடகக் கலைக் கட்டுரைகள்
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் நாடக மேடையின் புதிய சகாப்தம் தொடங்கியது. இதுதான் உரைநடை நாடக மேடைக்கு வந்த காலம். இந்தச் சமயத்தில் ஷேக்ஸ்பியர், காளிதாசர், பவபூதி முதலியோரின் ஆங்கில, சமஸ்கிருத நாடகங்களைத் தழுவியும், மொழி பெயர்த்தும் பல பெரியார்கள் நாடகங்கள் எழுதியிருக்கின்றனர். ஆனால், அவை பெரும்பாலும் மேடையில் நடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் மேடையில் நாடகங்களை நடித்தவர்கள் பாடல்களைத் தவிர வசனங்களையெல்லாம் தங்கள் திறமைக்கேற்றவாறு கற்பனையாகவே பேசி வந்ததாகத் தெரிகிறது.
1891 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாடக உலகில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. தூ.தா.சங்கரதாஸ் சுவாமிகள் என்னும் பெரியார் நாடக உலகில் நுழைந்தார். அவர் பழைய நாடகங்களை ஒழுங்குபடுத்தி, புதிய நாடகங்கள் பலவற்றை எழுதித் தாமே நடித்தும், ஆசிரியராயிருந்தும், தமிழ் நாடகக் கலைக்கு மகத்தான சேவை புரிந்தார்.
சங்கரதாஸ் சுவாமிகள் சுமார் 40 நாடகங்கள் எழுதியிருக்கிறார். பெரும்பாலும் புராண இதிகாச நாடகங்கள். ரோமியோ ஜூலியத், சிம்பலைன், ஒதெல்லோ ஆகிய ஷேக்ஸ்பியர் நாடகங்களையும் இவர் எழுதி நடித்திருக்கிறார். இப்பெரியார் 1922-ல் தமது 55-வது வயதில் பூதவுடல் நீத்தார்.
இவர் காலத்தையொட்டி 'அரிச்சந்திரா' நாடகத்தை எழுதிய அப்பாவு பிள்ளை, 'இராமாயணம்' நாடகத்தை எழுதி சிவஷண்முகம் பிள்ளை, 'கிருஷ்ணலீலா' நாடகத்தை எழுதிய முத்துசாமிக் கவிராயர், 'மகாபாரதம்' நாடகத்தை எழுதிய வீராசாமி வாத்தியார், மற்றும் சந்தான கிருஷ்ண நாயுடு, சங்கரலிங்கக் கவிராயர், பாஸ்கரதாஸ் முதலிய நாடகாசிரியர்கள் பலர் நாடகமேடையை வளர்த்திருக்கிறார்கள்.
75 ஆண்டுகளுக்கு முந்திய இந்த இடைக் காலத்தில் தமிழ் நாட்டில் நூற்றுக்கணக்கான நாடகசபைகள் தோன்றி மறைந்திருக்கின்றன. திறந்தவெளிகளில் தெருக்கூத்து மேடைகளில் இருந்து வந்த நாடகத்தை, திரை, காட்சி முதலிய அமைப்புகளோடு முதன் முதலாகக் கூரைபோட்ட கொட்டகைகளில் நடித்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த நவாப் கோவிந்தசாமி ராவ் என்று சொல்லப்படுகிறது. இவரைப் பின்பற்றியே மற்றவர்களும் நாடகசபைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.
பழமையான கம்பெனிகளில் கல்யாண ராமையர் கம்பெனி, ராமுடு ஐயர் கம்பெனி, இராவண கோவிந்தசாமி நாயுடு கம்பெனி, வள்ளி வைத்தியநாதய்யர் கம்பெனி, 'அல்லி' பரமேஸ்வரய்யர் கம்பெனி, கே.எஸ். அனந்த நாராயண ஐயரின் ஆரியகான சபா, கே.பி.சுந்தராம்பாளைத் தோற்றுவித்த பி.எஸ்.வேல்நாயரின் ஷண்முகானந்த சபா, எஸ்.ஜி.கிட்டப்பாவைத் தோற்றுவித்த சி.கன்னய்யா கம்பெனி, மனமோகன அரங்கசாமி நாயுடு கம்பெனி, ஜி.எஸ்.முனிசாமி நாயுடு கம்பெனி, வேலூர் நாராயண சாமி பிள்ளை கம்பெனி, மதார் சாயபு கம்பெனி, கோல்டன் கம்பெனி இவையெல்லாம் சிறப்பாக நாடகக்கலை வளர்த்த கம்பெனிகள். இவற்றைத் தவிர, பெண்கள் தலைமை தாங்கி நடத்திய பாலாமணி கம்பெனி, பாலாம்பாள் கம்பெனி, ராஜாம்பாள் கம்பெனி, அரங்கநாயகி கம்பெனி முதலிய நாடக சபைகளும் இருந்து வந்திருக்கின்றன.
இப்போது நான் குறிப்பிட்ட நாடகசபைகளுக்கெல்லாம் பெரும்பாலும் சங்கரதாஸ் சுவாமிகளே ஆசிரியராயிருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1891-ல் தான் அமெச்சூர் சபைகளும் தோன்றின. நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் சென்னையில் சுகுண விலாச சபையை நிறுவினார். இதைத் தொடர்ந்து கும்பகோணம் வாணி விலாச சபை, எப்.ஜி.நடேசய்யரின் ரசிக ரஞ்சனி சபை, தஞ்சை சுதர்சன சபை, குமரகான சபை, செக்ரட்டேரியட் பார்ட்டி முதலிய பல அமெச்சூர் சபைகள் நாடெங்கும் தோன்றின.
பம்மல் சம்பந்த முதலியாரவர்கள் நாடகத்தைத் தொழிலாகக் கொள்ளாமல் கலை வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்டு நாடகக் கலைக்கு ஓர் உயர்வான ஸ்தானத்தைத் தேடித்தந்தார்.
பம்மல் சம்பந்த முதலியார் ஷேக்ஸ்பியர், காளிதாசன் ஆகியோரின் நாடகங்களை மொழிபெயர்த்ததோடு கற்பனையாகவும் சுமார் எண்பது நாடகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். இவருடைய நாடகங்கள் யாவும் அமெச்சூர், தொழில்முறை சபைகள் இரு சாராராலும் மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள். 'மனோஹரா' என்ற இவரது கற்பனை நாடகம் சென்ற 65 ஆண்டுகளாகத் தமிழ் நாடக மேடையில் அமரத்துவம் பெற்ற நாடகமாக விளங்கி வருகிறது.
இவரது சுகுணவிலாச சபையில் காலஞ்சென்ற ஆர்.கே.சண்முகம் செட்டியார், எஸ்.சத்தியமூர்த்தி, இன்று நம்மிடையே வாழும் காசி பல்கலைக்கழகத் துணைவேந்தர் சர்.சி.பி.இராமசாமி ஐயர் முதலிய பெரியோர்களெல்லாம் நடிகர்களாக மேடையில் தோன்றியிருக்கிறார்கள் என்பதை இங்குப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி - நாடகக் கலைக் கட்டுரைகள், கம்பெனி, நாடக, தமிழ், நாடகங்கள், நாடகத்தை, முதலிய, மேடையில், நாடகக், நாயுடு, நாட்டில், நாடகங்களை, அமெச்சூர், பிள்ளை, எழுதிய, சங்கரதாஸ், பெரும்பாலும், கலைக், கட்டுரைகள், சுமார், சம்பந்த, ஷேக்ஸ்பியர், பம்மல், வளர்ச்சி, சபைகள், இவரது, விலாச, தோற்றுவித்த, சபைகளும், தோன்றின, முதலியார், கோவிந்தசாமி, நாராயண, ஐயர், கலைக்கு, ஆண்டுகளுக்கு, வந்த, நாடகம், கலைகள், drama, arts, தவிர, உலகில், எழுதி, கவிராயர், இவர், எழுதியிருக்கிறார், சுவாமிகள், இருந்து