புலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள்
இங்கிலாந்துக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஈழத்தில் கற்ற, ஆங்கில உயர்கல்வி பயின்றவர்களது கனவுத் தாயகமாக இங்கிலாந்து நிலவியிருக்கிறது. குறிப்பாக யாழ்ப்பாண சமூகத்தின் வாழ்வில் லண்டன் நோக்கிய பயணம்-பெயர்வு நிரந்தரமாகவே ஊடாடி வந்திருக்கிறது. இந்த லண்டன் பெயர்வின் மைய நாயகர்களாக இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற, உயர் கல்லூரிகளில் ஆங்கிலக் கல்வி பயின்ற, மருத்துவர்கள் பொறியியலாளர்கள், கணக்காளர்கள் போன்ற தொழில்துறை சார்ந்தவர்களே அமைந்தனர். தொடர்ந்து எழுபதுகளில் இப்படியான தொழில்துறைக் கல்வியை நோக்கியும் லண்டன் பெயர்ந்தனர்.
1980 க்குப் பின் இங்கிலாந்து நோக்கிப் பெயர்ந்த தமிழர்கள், பெருமளவில் முற்றிலும் புதிய சமூக அடித்தளத்தையும், வாழ்வுபற்றிய வேறு கண்ணோட்டங்களையும் கொண்டவர்களாக அமைந்தனர். ஈழத்தின் போராட்டத்தோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவர்களாகவோ, பாதிக்கப்பட்டவர்களாகவோ அமைந்தனர். தாய்மொழிக் கல்வியின் (தமிழ் மூலம்) விளைச்சல்கள் இவர்கள். எனவே தமிழர் சமூகத்தோடும், தமிழர் கலாசாரத்தோடும் பின்னிப் பிணைந்தவர்களாகத் திகழ்ந்தனர். தமிழர்களின் அடையாளம் குறித்தும், தமிழ் இனத்தின் எதிர்காலம் குறித்தும் இவர்களது ஆதங்கங்கள், அல்லது கேள்விகள் ஆழமான அர்த்தம் கொண்டவை. புலம்பெயர் கலாசார வாழ்வின் அடித்தளமாக - மூச்சாக இவர்களே விளங்கினர். இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் இலங்கைத் தமிழர் என்ற இன அடையாளத்தைப் பதித்த ஓர் இனக் குழுமமாக இவர்களே அமைந்தனர். இவர்களின் வருகையைத் தொடர்ந்தே பல்வேறு கலாசார நடவடிக்கைகள் இடம்பெறத் தொடங்கின. முன்னைய குழுவினர் பலரும் கூட, இதனைத் தொடர்ந்தே இந்நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஆர்வம் காட்டவும் தொடங்கினர்.
3. ஐரோப்பிய - லண்டன் புலம்பெயர் கலாசார வெளிப்பாடுகள்
3.1 எழுத்து சார்ந்த வெளிப்பாடுகள் :
80 க்குப் பிற்பட்ட கலாசார வாழ்வில் மிக ஆரம்பத்தில், எழுத்து சார்ந்த கலை வெளிப்பாடுகள் ஜேர்மனியிலேயே பரவலாக அரும்பின. இதனையொத்த வெளிப்பாடுகள் பாரிசிலும் நிகழ்ந்திருக்கின்றன.
இலங்கை பற்றிய செய்திகளை அறிந்துகொள்ளும் ஆவல் இச்சஞ்சிகைகளின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது. இன்றும் ஐரோப்பாவில் வெளியாகும் வாரப்பத்திரிகைகள் இந்த அடிப்படைத் தேவையையே நிறைவுசெய்யும் நோக்கில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனைவிட புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் எதிர்நோக்கும் இனவாதம், கலாசார முரண்பாடுகள் போன்றவற்றையும் இவை விபரித்தன; எதிர்கொண்டன. இச்சஞ்சிகைகளின் ஆக்கதாரர்களின் சந்திப்பாக முகிழ்ந்த இலக்கியச் சந்திப்பு நிகழ்வு இன்று தனது பத்தாண்டு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. ஆனால் நாடக இயக்கம் புலம்பெயர் வாழ்வில் தீவிர கலாசார செயற்பாடாக பரிணமிப்பதற்கு சிலகாலம் பிடித்தது. இலக்கியத் தளத்தில் பரவலாக சற்று தீவிர முனைப்புத் தெரிந்த அதே சமயத்தில் தீவிர நாடக இயக்கம் ஏன் முனைப்பான போக்காக இல்லாமல் போயிற்று என்ற கேள்வி நம் ஆய்வுக்குரியது.
3.2 ஐரோப்பிய நாடக வெளிப்பாடுகள் :
ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க் போன்ற நாடுகளில் எல்லாம் தீவிர நாடகம் அறிந்த, பயின்ற ஆர்வலர்கள் இருந்தபோதும் அமைப்பு ரீதியாக தீவிர நாடக இயக்கம் வலுவாக வேரூன்ற முடியவில்லை. நாடகம் என்ற வடிவம் வேண்டி நிற்கும் குணாம்சங்களே நாடக இயக்கத்தினை நிர்ணயிப்பதாக அமைகிறது. அடிப்படையாக இங்கு வலியுறுத்த வேண்டியது நாடகம் ஒரு கூட்டுக்கலை என்பதாகும்.
புலம்பெயர் நாடுகளில் அனேகமான சஞ்சிகை முயற்சிகள் அனைத்துமே கூடுதலாக ஒரு தனி ஆர்வலரின் கடின உழைப்பிலேயே செயற்பட்டிருக்கிறது. அந்தத் தனிநபர் தடைகளுக்கும், கஷ்டங்களுக்கும் மத்தியில் தனது சஞ்சிகையைக் கொண்டுவர முனைகிறார். அவரது தீவிர உழைப்பிலும், செயற்பாட்டிலுமே இவற்றின் ஆயுள் தங்கியிருக்கிறது. இந்த தனி ஆர்வலர்கள் களைத்துப்போகும்போது இச் சஞ்சிகைகளும் நின்றுபோய் விடுகின்றன. ஆனால் தீவிர நாடக முயற்சி அப்படியானதல்ல.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, புலம்பெயர், தீவிர, கலாசார, வெளிப்பாடுகள், நாடகம், லண்டன், அமைந்தனர், தமிழர், நாடுகளில், பயின்ற, வாழ்வில், இயக்கம், வளர்ச்சியும், அரங்கு, பிரச்சினைகளும், நாடகக், கட்டுரைகள், கலைக், எழுத்து, சார்ந்த, பரவலாக, தனது, ஆர்வலர்கள், அடிப்படையாக, இச்சஞ்சிகைகளின், க்குப், இலங்கைத், கலைகள், arts, drama, இங்கிலாந்து, தமிழர்கள், தொடர்ந்தே, இவர்களே, குறித்தும், தமிழ், ஐரோப்பிய