புலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள்
தமிழ் அவைக்காற்றுக் கழக அனுபவங்களின் பின்னணியில் ஒரு பரிசீலனை
க.பாலேந்திரா
1. நோக்கம் :
"புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் அரங்கக் கலைகள் - ஒரு மதிப்பீடு" என்ற ஆய்வரங்கிற்காக எழுதப்பட்ட, நாடகம் குறித்த எனது அனுபத்தினைப் பிரதிபலிக்கும் ஒரு கட்டுரை இது. ஈழத் தமிழர் புலப்பெயர்வை கோடிட்டுக்காட்டி, ஐரோப்பிய இலக்கிய வெளிப்பாடுகளுடன் ஒப்பீட்டளவில் நாடக அரங்க அனுபவம்; குறிப்பாக லண்டனில் மையம் கொண்டுள்ள தமிழ் அவைக்காற்று கலைக்கழக நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்வைத்து, புலம்பெயர் நாடக அரங்கின் வளர்ச்சியை விபரிக்க இக்கட்டுரை முயல்கிறது. லண்டனில் புலம் பெயர் சூழலில் நாடக அரங்கு எதிர்நோக்கும் சில முக்கிய பிரச்சினைகளையும், தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் அனுபவ வாயிலாக இக்கட்டுரை சுட்டுகிறது. மனித முரண்பாடுகளின் பன்முகப்பட்ட பரிமாணங்களை வெளிப்படுத்தும் நவீன நாடகங்கள், தமிழர் வாழும் பல புகலிட நாடுகளில் பரவலான அங்கீகாரத்திற்கு இலக்காகும் போது சிறு குழு சார்ந்த நாடக அரங்காக அன்றி பரந்த பிரதான போக்கினை நிர்ணயிக்கும் இயக்கமாகவும் அங்கீகாரம் பெறமுடியும். ஈழத்தின் கடந்தகால அனுபவம் இது.
2. ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு - பின்னணி
1980 களை அடுத்த காலப்பகுதியில், விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்கும், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் ஈழத்தமிழர் பெருமளவில் புலம் பெயர்ந்தனர்.
ஈழத்தமிழர்களுடைய கலாசார வாழ்க்கையில் இந்த புலப்பெயர்வு நிகழ்வு தனித்த ஆய்வுக்குரிய விடயமாக இன்று வளர்ந்திருக்கிறது.
"காலனித்துவ காலத்தில் இருந்து இலங்கைத் தமிழர்கள் மேற்கொண்டிருந்த வரலாற்று ரீதியான புலம்பெயர்வு மத்திய வர்க்கத் தமிழர்கள் மத்தியில் புலம்பெயரும் மனப்பாங்கினை உருவாக்கி, தமிழர்களின் கலாசார அபிலாசைகளில் அதனை வேரூன்றச் செய்துள்ளது. இந்த அபிலாசைகள் ஸ்தாபனரீதியான புகலிடப் பெயர்வுக்கூடாக நிறைவெய்தின". (1)
"1983 ஜுலையில் இருந்து மேற்கு நோக்கிய பெருமளவிலான புலப்பெயர்வானது யாழ்ப்பாணத்தின் சமூக அசைவாக்கத்தினை கணிசமாக துரிதமுறச் செய்திருந்தது. ஒரு சராசரி வயதான நபரின் அல்லது பல்கலைக் கழகக் கல்வியை முடித்துக் கொண்ட ஒருவரின் ஆதர்ச இலக்காக வெளிநாடு நோக்கிப் புலம் பெயர்வதொன்றே அமைந்தது. 1983 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றவர்கள் 2 லட்சம் பேர் அல்லது யாழ்ப்பாணக் குடிசனத்தொகையின் 25 வீதம் என்று சில ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது".(2)
ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு பற்றிய புள்ளிவிபர ரீதியிலான பின்வரும் குறிப்பு சமூகவியற் பார்வையிலும் நம் கவனத்தைக் கோருகிறது.
"வடக்கின் குடிசனத்தொகை 1987இல் 1.7 மில்லியனில் இருந்து இன்று 7 லட்சமாக, கிட்டத்தட்ட அரைவாசியாகக் குறைந்து விட்டது. 50,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது காணாமல் போயுள்ளனர். இப்பிரதேசத்தில் இருந்து வெளியேறியவர்களில் 3 லட்சம் தமிழர்கள், மேற்கு நோக்கியும், 2 லட்சம் தமிழர்கள் இந்தியாவுக்கும், 3.5 லட்சம் தமிழர்கள் நாடெங்கிலும் உள்ள அகதி முகாம்களில் அல்லது தமது உறவினர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்". (3)
ஈழத்தமிழர்களின் இப்புலம்பெயர் வாழ்வில் அவர்களது எதிர்காலம் குறித்த பிரச்சினைகளோடு கலாசார வாழ்வு, கூடிய அக்கறையையும், ஆய்வையும் வேண்டி நிற்கிறது. இந்தப் புலம்பெயர் கலாசார வாழ்வின் ஒரு முக்கிய வெளிப்பாடாக புலம்பெயர் இலக்கியம் ஸ்தாபிதம் கொண்டிருக்கிறது. "நவீன தமிழ் இலக்கியத்தின் புதிய பரிமாணமாயும், சர்வதேச ரீதியில் இன்று முனைப்புற்றிருக்கும் புலப்பெயர்வு கலாசாரத்தின் இன்றியமையாத கூறாகவும் தமிழர் புகலிட இலக்கியம் திகழ்கிறது"(4) என்று மு.நித்தியானந்தன் குறிப்பிடுகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, புலம்பெயர், இருந்து, தமிழர்கள், தமிழ், அல்லது, அரங்கு, கலாசார, லட்சம், புலம், வளர்ச்சியும், பிரச்சினைகளும், கட்டுரைகள், இன்று, ஈழத்தமிழர்களின், கலைக், கலைகள், தமிழர், நாடகக், புலப்பெயர்வு, இந்தியாவுக்கும், பேர், இலக்கியம், மேற்கு, புலம்பெயர்வு, அனுபவம், அவைக்காற்றுக், நாடகம், arts, drama, நாடுகளில், குறித்த, நவீன, முக்கிய, இக்கட்டுரை, லண்டனில், புகலிட