முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.058.திருக்கரவீரம்
1.058.திருக்கரவீரம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கரவீரேசுவரர்.
தேவியார் - பிரத்தியட்சமின்னாளம்மை.
623 |
அரியு நம்வினை யுள்ளன வாசற வரிகொண் மாமணி போற்கண்டம் கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம் பெரிய வன்கழல் பேணவே. |
1.058.1 |
வரிகள் அமைந்த சிறந்த நீலமணி போலக் கண்டம் கறுத்தவனாய், விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானாகிய இறைவன் திருவடிகளைத் துதித்தால் நம் வினைகளாக உள்ளன யாவும் முற்றிலும் கழியும்.
624 |
தங்கு மோவினை தாழ்சடை மேலவன் திங்க ளோடுடன் சூடிய கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம் சங்க ரன்கழல் சாரவே. |
1.058.2 |
தாழ்ந்து தொங்கும் சடைமுடிகளை உடைய உயர்ந்தோனாய் இளம்பிறையோடு கங்கையை உடனாகச் சூடிய, திருக் கரவீரத்தில் விளங்கும் சங்கரன் திருவடிகளை வழிபட்டால் நம்மைப் பற்றிய வினைகள் தங்கா.
625 |
ஏதம் வந்தடை யாவினி நல்லன பூதம் பல்படை யாக்கிய காத லான்றிக ழுங்கர வீரத்தெம் நாதன் பாத நணுகவே. |
1.058.3 |
நல்லனவாகிய பூத கணங்களைப் பல்வகைப் படைகளாக அமைத்துக் கொண்டுள்ள அன்பு வடிவினனும் விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளிய எம் நாதனுமான சிவபெருமான் திருவடிகளை அடைவோரைத் துன்பங்கள் வந்தடையமாட்டா.
626 |
பறையு நம்வினை யுள்ளன பாழ்பட மறையு மாமணி போற்கண்டம் கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம் இறைய வன்கழ லேத்தவே. |
1.058.4 |
நீலமணி போலக் கண்டத்தில் கறையுடையவனும், விளங்கும் திருக்கரவீரத்தில் உறையும் எம் இறைவனுமாகிய பெருமான் திருவடிகளை ஏத்த நம் வினைகள் நீங்கும். சஞ்சிதமாக உள்ளவும் மறையும்.
627 |
பண்ணி னார்மறை பாடல னாடலன் விண்ணி னார்மதி லெய்தமுக் கண்ணி னானுறை யுங்கர வீரத்தை நண்ணு வார்வினை நாசமே. |
1.058.5 |
சந்த இசையமைப்புடன் கூடிய வேதங்களைப் பாடியும் ஆடியும் மகிழ்பவரும், வானகத்தில் சஞ்சரித்த மும்மதில் களையும் எய்தழித்த மூன்றாம் கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய திருக்கரவீரத்தை அடைவார் வினைகள் நாசமாம்.
628 |
நிழலி னார்மதி சூடிய நீள்சடை அழலி னாரழ லேந்திய கழலி னாருறை யுங்கர வீரத்தைத் தொழவல் லார்க்கில்லை துக்கமே. |
1.058.6 |
ஒளி பொருந்திய பிறைமதியைச்சூடிய நீண்ட சடைமுடியினரும், அழலைக் கையில் ஏந்தியவரும் வீரக்கழலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய திருக்கரவீரத்தைத் தொழவல்லவர்கட்குத் துக்கம் இல்லை.
629 |
வண்டர் மும்மதின் மாய்தர வெய்தவன் அண்ட னாரழல் போலொளிர் கண்ட னாருறை யுங்கரவீ ரத்துத் தொண்டர் மேற்றுயர் தூரமே. |
1.058.7 |
தீயவர்களாகிய அசுரர்களின் முப்புரங்களும் அழிந்தொழியுமாறு கணை எய்தவரும், அனைத்து உலகங்களின் வடிவாக விளங்குபவரும், விடம் போல ஒளிவிடும் கண்டத்தை உடைய வரும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருக்கரவீரத்துத் தொண்டர்களைப் பற்றிய துயரங்கள் தூர விலகும். அழல் - தீப்போன்ற கொடிய விடம்.
630 |
புனலி லங்கையர் கோன்முடி பத்திறச் சினவ லாண்மை செகுத்தவன் கனல வன்னுறை கின்ற கரவீரம் எனவல் லார்க்கிட ரில்லையே. |
1.058.8 |
கடலால் சூழப்பட்ட இலங்கை மக்களின் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தும் நெரியுமாறு செய்து, கோபத்தோடு கூடிய அவனது ஆண்மையை அழித்தவனாய், எரிபோலும் உருவினன் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கரவீரம் என்று சொல்ல வல்லார்க்கு இடர் இல்லை.
631 |
வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த் தௌளத் தீத்திர ளாகிய கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை உள்ளத் தான்வினை யோயுமே. |
1.058.9 |
நீரில் தோன்றும் தாமரை மலர் மேல் உறையும் நான் முகனோடு திருமாலும் உண்மையைத் தௌயுமாறு ஒளிப் பிழம்பாகத் தோன்றி அவர்கள் அறியாவாறு கள்ளம் செய்தவனாகிய சிவபிரான் உறையும் திருக்கரவீரத்தை நினைந்து போற்ற வினைகள் நீங்கும்.
632 |
செடிய மண்ணொடு சீவரத் தாரவர் கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின் கடிய வன்னுறை கின்ற கரவீரத் தடிய வர்க்கில்லை யல்லலே. |
1.058.10 |
முடைநாற்றம் வீசும் அமணர்களோகாவியாடை அணிந்து திரியும் புத்தர்கள் ஆகியோர்தம் கொடிய வெம்மையான உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். அனைத்துலகையும் காத்தருள் கின்றவனாகிய சிவபிரான் உறைகின்ற திருக்கரவீரத்து அடியவர்க்கு அல்லல் இல்லை.
633 |
வீடி லான்விளங் குங்கர வீரத்தெம் சேடன் மேற்கசி வாற்றமிழ் நாடு ஞானசம் பந்தன சொல்லிவை பாடு வார்க்கில்லை பாவமே. |
1.058.11 |
அழிவில்லாதவனாக விளங்கும் திருக்கரவீரத்துப் பெரியோன் மேல் அன்புக்கசிவால் தமிழை விரும்பும் ஞானசம்பந்தன் சொல்லிய இத்திருப்பதிகப் பாடல்களாகிய இவற்றைப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.058.திருக்கரவீரம் , விளங்கும், வீரத்தெம், ழுங்கர, ஆகிய, எழுந்தருளிய, வினைகள், சிவபிரான், இல்லை, திருமுறை, சூடிய, திருக்கரவீரத்தில், யுங்கர, திருக்கரவீரம், திருவடிகளை, உறையும், கொடிய, மேல், வீரத்தை, கூடிய, தாமரை, திருக்கரவீரத்தை, விடம், வன்னுறை, கின்ற, னாருறை, கரவீரம், பற்றிய, யுள்ளன, மாமணி, நம்வினை, திருச்சிற்றம்பலம், தேவாரப், பதிகங்கள், போற்கண்டம், வன்றிக, சிவபெருமான், நீங்கும், உடைய, எழுந்தருளியுள்ள, நீலமணி, போலக், னார்மதி