முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.037.திருப்பனையூர்
1.037.திருப்பனையூர்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சவுந்தரேசர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
393 |
அரவச் சடைமேன் மதிமத்தம் விரவிப் பொலிகின் றவனூராம் நிரவிப் பலதொண் டர்கள்நாளும் பரவிப் பொலியும் பனையூரே. |
1.037.1 |
சடைமுடிமேல் அரவம், மதி, ஊமத்தம் மலர் ஆகியன கலந்து விளங்குமாறு அணிந்த சிவபெருமானது தலம் தொண்டர்கள் பலரும் கலந்து நாள்தோறும் வணங்கி மகிழ்வுறும் திருப்பனையூராகும்.
394 |
எண்ணொன் றிநினைந் தவர்தம்பால் உண்ணின் றுமகிழ்ந் தவனூராம் கண்ணின் றெழுசோ லையில்வண்டு பண்ணின் றொலிசெய் பனையூரே. |
1.037.2 |
மனம் ஒன்றி நினைந்த அடியார்களின் உள்ளத்துள்ளே இருந்து அவர்தம் வழிபாட்டை ஏற்று மகிழ்கின்ற சிவபெருமானது தலம், தேன் பொருந்திய மலர்களோடு உயர்ந்துள்ள சோலைகளில் வண்டுகள் பண்ணொன்றிய ஒலி செய்யும் பனையூராகும்.
395 |
அலரும் மெறிசெஞ் சடைதன்மேல் மலரும் பிறையொன் றுடையானூர் சிலரென் றுமிருந் தடிபேணப் பலரும் பரவும் பனையூரே. |
1.037.3 |
விளங்கும் எரிபோலச் சிவந்த சடைமுடிமீது வளரும் பிறையொன்றை உடைய சிவபெருமானது ஊர், அடியவர்களில் சிலர் என்றும் இருந்து திருவடிகளைப் பரவிப் பூசனை செய்து போற்றவும், பலர் பலகாலும் வந்து பரவ விளங்கும் திருப்பனையூராகும்.
396 |
இடியார் கடனஞ் சமுதுண்டு பொடியா டியமே னியினானூர் அடியார் தொழமன் னவரேத்தப் படியார் பணியும் பனையூரே. |
1.037.4 |
கரைகளை மோதுதல் செய்யும் கடலிடைத் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டு, மேனி மீது திருநீற்றுப் பொடியை நிரம்பப் பூசிய சிவபெருமானது ஊர், அடியவர்கள் தொழ, மன்னவர்கள் ஏத்த உலகில் வாழும் பிற மக்கள் பணியும் திருப்பனையூராகும்.
397 |
அறையார் கழன்மே லரவாட இறையார் பலிதேர்ந் தவனூராம் பொறையார் மிகுசீர் விழமல்கப் பறையா ரொலிசெய் பனையூரே. |
1.037.5 |
ஒலிக்கின்ற வீரக்கழல் மேல் அரவு ஆட முன்கைகளில் பலியேற்றுத் திரியும் பிட்சாடனராகிய சிவபெருமானது ஊர், மண்ணுலகில் சிறந்த புகழை உடைய திருவிழாக்கள் நிறையப் பறைகளின் ஒலி இடைவிடாது பயிலும் திருப்பனையூராகும்.
398 |
அணியார் தொழவல் லவரேத்த மணியார் மிடறொன் றுடையானூர் தணியார் மலர்கொண் டிருபோதும் பணிவார் பயிலும் பனையூரே. |
1.037.6 |
தம்மைப் பூசனை செய்து தொழவல்ல அடியவர்கள் அண்மையில் இருப்பவராய், அருகிருந்து ஏத்துமாறு உள்ள நீலமணிபோலும் கண்டத்தை உடைய சிவபெருமானது ஊர், தன்னைப் பணியும் அடியவர் குளிர்ந்த மலர்களைக் கொண்டு இருபோதும் தூவி வழிபடும் இடமான திருப்பனையூராகும்.
399 |
அடையா தவர்மூ வெயில்சீறும் விடையான் விறலார் கரியின்றோல் உடையா னவனெண் பலபூதப் படையா னவனூர் பனையூரே. |
1.037.7 |
தன்னை வணங்காத பகைவர்களான அசுரர்களின் மூன்று அரண்களையும் அழித்த விடையூர்தியனும், வலிய யானையை உரித்து அதன் தோலை மேல் ஆடையாகக் கொண்டவனும் எண்ணற்ற பல பூதப் படைகளை உடையவனுமான சிவபெருமானது ஊர் திருப்பனையூராகும்.
400 |
இலகும் முடிபத் துடையானை அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல் உலகில் லுயிர்நீர் நிலமற்றும் பலகண் டவனூர் பனையூரே. |
1.037.8 |
விளங்கும் முடி பத்தை உடைய இராவணனை அடர்த்து அவன்படும் அல்லல் கண்டு அவனுக்கு அருள் செய்த எம் அண்ணலும், உலகின்கண் உயிர்கட்கு நீர் நிலம் முதலான பலவற்றையும் படைத்தளித்தவனும் ஆகிய சிவபெருமானது ஊர் திருப்பனையூர்.
401 |
வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள் சிரமுன் னடிதா ழவணங்கும் பிரமன் னொடுமா லறியாத பரமன் னுறையும் பனையூரே. |
1.037.9 |
சிவபெருமானிடம் வரங்களைப்பெறுதலை எண்ணி மகிழ்வோடு புறப்பட்டு வரும் அடியவர்களே, அப்பெருமான் திருமுன் தலை தாழ்த்தி வணங்குங்கள்; எளிதில் நல்வரம் பெறலாம். பிரமனும் திருமாலும் அறியாத அப்பரமன் உறையும் ஊர் திருப்பனையூராகும்.
402 |
அழிவல் லமண ரொடுதேரர் மொழிவல் லனசொல் லியபோதும் இழிவில் லதொர்செம் மையினானூர் பழியில் லவர்சேர் பனையூரே. |
1.037.10 |
அழிதலில் வல்ல அமணர்களும் பௌத்தர்களும் வாய்த்திறனால் புறங்கூறிய போதும் குறைவுறாத செம்மையாளனாகிய சிவபெருமானது ஊர் பழியற்றவர் சேரும் திருப்பனையூராகும்.
403 |
பாரார் விடையான் பனையூர்மேல் சீரார் தமிழ்ஞா னசம்பந்தன் ஆரா தசொன்மா லைகள்பத்தும் ஊரூர் நினைவா ருயர்வாரே. |
1.037.11 |
மண்ணுலகிற் பொருந்தி வாழ்தற்கு ஏற்ற விடை ஊர்தியைக் கொண்ட சிவபெருமானது திருப்பனையூரின் மேல் புகழால் மிக்க தமிழ் ஞானசம்பந்தன் மென்மேலும் விருப்பத்தைத்தருவனவாகப் போற்றிப் பாடிய சொன்மாலைகளான இப்பத்துப் பாடல்களையும் ஒவ்வோரூரிலும் இருந்துகொண்டு நினைவார் உயர்வெய்துவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.037.திருப்பனையூர் , சிவபெருமானது, பனையூரே, திருப்பனையூராகும், திருப்பனையூர், உடைய, பணியும், விளங்கும், மேல், திருமுறை, பூசனை, அடியவர்கள், விடையான், பயிலும், உலகில், செய்து, தவனூராம், பரவிப், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், கலந்து, தலம், செய்யும், இருந்து, பலரும், றுடையானூர்