முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.030.திருப்புகலி
1.030.திருப்புகலி
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
316 |
விதியாய் விளைவாய் விளைவின்
பயனாகிக் கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும் பதியா வதுபங் கயநின் றலரத்தேன் பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே. |
1.030.1 |
மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என விதித்த விதியாகவும், அதன்காரணமாக வந்த மரணமாய், அவர் இறை வழிபாடு செய்ததன் காரணமாகத்தானே விதியின் பயனாய் வெளிப்பட்டுச் சினந்துவந்த கூற்றுவனை உதைத்தருளிய சிவபிரான் எழுந்தருளிய தலம், தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளும், தேன்கூடுகள் நிறைந்த பொழில்களும் சூழ்ந்த புகலிநகராகும்.
317 |
ஒன்னார் புரமூன்று மெரித் தவொருவன் மின்னா ரிடையா ளொடுங்கூ டியவேடந் தன்னா லுறைவா வதுதண் கடல்சூழ்ந்த பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே. |
1.030.2 |
பகைவராய் மாறிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த சிவபிரான் மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையோடு கூடிய திருவுருவத்தோடு எழுந்தருளிய இடம், குளிர்ந்த கடல் ஒருபுறம் சூழ, பொன் போன்ற நெல்மணிகள் நிறைந்த வயல்களை உடைய புகலிநகராகும்.
318 |
வலியின் மதிசெஞ் சடைவைத் தமணாளன் புலியின் னதள்கொண் டரையார்த் தபுனிதன் மலியும் பதிமா மறையோர் நிறைந்தீண்டிப் பொலியும் புனற்பூம் புகலிந் நகர்தானே. |
1.030.3 |
கலைகளாகிய வலிமை குறைந்த பிறை மதியைச் செஞ்சடைமீது வைத்துள்ள மணாளனும், புலியின் தோலை இடையிற் கட்டிய புனிதனும் ஆகிய சிவபெருமான் விரும்பும் பதி மேம்பட்ட வேதியர் நிறைந்து செறிந்து பொலியும் நீர்வளம் சான்ற அழகிய புகலிநகராகும்.
319 |
கயலார் தடங்கண் ணியொடும்
மெருதேறி அயலார் கடையிற் பலிகொண் டவழகன் இயலா லுறையும் மிடமெண் டிசையோர்க்கும் புயலார் கடற்பூம் புகலிந் நகர்தானே. |
1.030.4 |
கயல்மீன் போன்ற பெரிய கண்களை உடைய உமையம்மையோடும் விடைமீது ஏறி, அயலார் இல்லங்களில் பலி கொண்டருளும் அழகனாகிய சிவபிரான் எண்திசையிலுள்ளாரும் செவிசாய்த்து இடி ஓசையைக் கேட்கும் கார் மேகங்கள் தங்கும் கடலை அடுத்துள்ள அழகிய புகலிநகராகும்.
320 |
காதார் கனபொற் குழைதோ டதிலங்கத் தாதார் மலர்தண் சடையே றமுடித்து நாதா னுறையும் மிடமா வதுநாளும் போதார் பொழிற்பூம் புகலிந் நகர்தானே. |
1.030.5 |
காதுகளில் அணிந்துள்ள கனவிய பொன்னால் இயன்ற குழை, தோடு ஆகியன இலங்க மகரந்தம் மருவிய மலர்களைத் தண்ணிய சடையின்கண் பொருந்தச்சூடி, எல்லா உயிர்கட்கும் நாதனாக விளங்கும் சிவபிரான் உறையுமிடம் நாள்தோறும் புதிய பூக்கள் நிறைந்து விளங்கும் பொழில்கள் சூழ்ந்த புகலிநகராகும்.
321 |
வலமார் படைமான் மழுவேந் தியமைந்தன் கலமார் கடனஞ் சமுதுண் டகருத்தன் குலமார் பதிகொன் றைகள்பொன் சொரியத்தேன் புலமார் வயற்பூம் புகலிந் நகர்தானே. |
1.030.6 |
வெற்றி பொருந்திய சூலப்படை, மான் மழு, ஆகியவற்றை ஏந்திய வலிமையுடையோனும், மரக்கலங்கள் உலாவும் கடலிடைத் தோன்றிய நஞ்சினை அமுதாக உண்டவனும் ஆகிய சிவபிரான், அடியார் குழாத்தோடு உறையும் பதி, கொன்றை மலர்கள் பொன் போன்ற இதழ்களையும் மகரந்தங்களையும் சொரிய, தேன் நிலத்தில் பாயும் வயல்களை உடைய புகலி நகராகும்.
322 |
கறுத்தான் கனலான் மதின்மூன் றையும்வேவச் செறுத்தான் றிகழுங் கடனஞ் சமுதாக அறுத்தா னயன்றன் சிரமைந் திலுமொன்றைப் பொறுத்தா னிடம்பூம் புகலிந் நகர்தானே. |
1.030.7 |
மும்மதில்களும் கனலால் வெந்தழியுமாறு சினந்தவனும், கடலிடை விளங்கித் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டு கண்டத்தில் தரித்தவனும், பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றை அறுத்து அதனைக் கையில் தாங்கிய சிவபிரான் எழுந்தருளிய இடம் அழகிய புகலி நகராகும்.
323 |
தொழிலான் மிகுதொண் டர்கள்தோத்
திரஞ்சொல்ல எழிலார் வரையா லன்றரக் கனைச்செற்ற கழலா னுறையும் மிடங்கண் டல்கண்மிண்டிப் பொழிலான் மலிபூம் புகலிந் நகர்தானே. |
1.030.8 |
தாம் செய்யும் பணிகளால் மேம்பட்ட தொண்டர்கள் தோத்திரம் சொல்லிப் போற்ற, அழகிய கயிலைமலையால் முன்னொரு காலத்தில் இராவணனைச் செற்ற திருவடிகளை உடைய சிவபிரான் உறையும் இடம், தாழைமரங்கள் செறிந்து விளங்கும் பொழில்கள் சூழ்ந்த புகலி நகராகும்.
324 |
மாண்டார் சுடலைப் பொடிபூ சிமயானத் தீண்டா நடமா டியவேந் தல்தன்மேனி நீண்டா னிருவர்க் கெரியா யரவாரம் பூண்டா னகர்பூம் புகலிந் நகர்தானே. |
1.030.9 |
இறந்தவர்களை எரிக்கும் சுடலையில் விளையும் சாம்பலை உடலிற் பூசிக் கொண்டு, அம்மயானத்திலேயே தங்கி நடனமாடும் தலைவரும், திருமால் பிரமர் பொருட்டுத் தம் திருமேனியை அழலுருவாக்கி ஓங்கி நின்றவரும் பாம்பை மாலையாகத் தரித்தவருமான சிவபிரானது நகர் அழகிய புகலிப் பதியாகும்.
325 |
உடையார் துகில்போர்த் துழல்வார்
சமண்கையர் அடையா தனசொல் லுவரா தர்களோத்தைக் கிடையா தவன்றன் னகர்நன் மலிபூகம் புடையார் தருபூம் புகலிந் நகர்தானே. |
1.030.10 |
கீழ் உடையோடு மெல்லிய ஆடையைப் போர்த்துத் திரியும் புத்தரும், சமணர்களும் ஆகிய கீழ்மக்கள் பொருந்தாதவற்றைக் கூறுவார்கள். அக்கீழோரின் ஓத்திற்கு அகப்படாதவன் சிவபிரான். அப்பெருமானது நன்னகர், நன்கு செறிந்த பாக்கு மரச்சோலைகள் சூழ்ந்த புகலிநகராகும்.
326 |
இரைக்கும் புனல்செஞ் சடைவைத்
தவெம்மான்றன் புரைக்கும் பொழிற்பூம் புகலிந் நகர்தன்மேல் உரைக்குந் தமிழ்ஞான சம்பந் தனொண்மாலை வரைக்குந் தொழில்வல் லவர்நல் லவர்தாமே. |
1.030.11 |
ஆரவாரிக்கும் கங்கை நீரைத் தமது சிவந்த சடைமீது வைத்த எம் தலைவனாகிய சிவபிரானின், உயர்ந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய புகலிப் பதியைக் குறித்துத் தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த அழகிய இப்பதிகமாலையைத் தமதாக்கி ஓதும் தொழில் வல்லவர் நல்லவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.030.திருப்புகலி , புகலிந், நகர்தானே, சிவபிரான், அழகிய, புகலிநகராகும், உடைய, சூழ்ந்த, திருப்புகலி, திருமுறை, விளங்கும், ஆகிய, புகலி, இடம், எழுந்தருளிய, நகராகும், பொழிற்பூம், அயலார், னுறையும், உறையும், அமுதாக, புகலிப், கடனஞ், பொழில்கள், தோன்றிய, சடைவைத், மலர்கள், நிறைந்த, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், வயற்பூம், பொன், மேம்பட்ட, நிறைந்து, பொலியும், புலியின், வயல்களை, செறிந்து