பாடல் 499 - சிதம்பரம் - திருப்புகழ்
ராகம் -...; தாளம்
-
|
தனதந்தத் தனனா தனதன தனதந்தத் தனனா தனதன தனதந்தத் தனனா தனதன ...... தனதான |
|
சகசம்பக் குடைசூழ் சிவிகைமெல் மதவின்பத் துடனே பலபணி தனிதம்பட் டுடையோ டிகல்முர ...... சொலிவீணை தவளந்தப் புடனே கிடுகிடு நடைதம்பட் டமிடோல் பலவொலி சதளம்பொற் றடிகா ரருமிவை ...... புடைசூழ வெகுகும்பத் துடனே பலபடை கரகஞ்சுற் றிடவே வரஇசை வெகுசம்பத் துடனே யழகுட ...... னிதமேவும் விருமஞ்சித் திரமா மிதுநொடி மறையும்பொய்ப் பவுஷோ டுழல்வது விடவும்பர்க் கரிதா மிணையடி ...... தருவாயே திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுர்தஞ்செச் செகசே செககண ...... எனபேரித் திமிர்தங்கற் குவடோ டெழுகட லொலிகொண்டற் றுருவோ டலறிட திரள்சண்டத் தவுணோர் பொடிபட ...... விடும்வேலா அகரம்பச் சுருவோ டொளியுறை படிகம்பொற் செயலா ளரனரி அயனண்டர்க் கரியா ளுமையருள் ...... முருகோனே அமுர்தம்பொற் குவடோ டிணைமுலை மதிதுண்டப் புகழ்மான் மகளொடும் அருள்செம்பொற் புலியூர் மருவிய ...... பெருமாளே. |
உலகத்தோர் மெச்சும்படி விருதாகப் பிடிக்கும் குடை சூழும் பல்லக்கின் மேல் மகிழ்ச்சி மிக்க இன்பத்துடனே, பல வேறு ஆபரணங்களுடன் பட்டாடையோடு, மேக கர்ச்சனை போன்ற முரசு வாத்தியம், ஒலி செய்யும் வீணை, வெண் சங்கு, தப்பட்டைப் பறையுடன், கிடுகிடு என்னும் பறையுடன் மக்கள் ஊர்வலம் வரும் ஓசை, தம்பட்டம் என்ற ஒரு வகையான பறை, டோல் என்னும் வாத்தியம் இவை பலவற்றின் ஒலி எழ, மக்கள் கூட்டம், பொன்னாலாகிய தடியை ஏந்திய சேவகர்கள் இவை எல்லாம் பக்கங்களில் சூழ்ந்து வர, நிறைந்த பூரண கும்பங்களுடன் பலவிதமான படைகளும் கரகங்களும் சுற்றியும் வர, கீத வாத்தியங்கள், மிக்க செல்வத்துடனும் அழகுடனும் தினந்தோறும் பொருந்தி வரும் (இந்த ஆடம்பரங்கள்) வெறும் மயக்கமாகும். வெறும் கோலமாம் இது ஒரு நொடிப் பொழுதில் மறைந்து போகும். இத்தகைய பொய்யான ஆடம்பர வாழ்வுடன் அலைச்சல் படுவதை விடுவதற்கு, தேவர்களுக்கும் காண்பதற்கு அரிதான திருவடிகளைத் தந்து அருளுக. திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுர்தஞ்செச் செகசே செககண என்று பேரி வாத்தியங்கள் பேரொலி செய்ய, மலைத் திரட்சிகளும் ஏழு கடல்களும் ஒலி எழுப்பி குலைந்து போய் அச்சத்துடன் அலற, கூட்டமாய் கொடுமையுடன் வந்த அசுரர்கள் பொடிபட்டு அழிய வேலாயுதத்தைச் செலுத்தியவனே, அகர எழுத்தைப் போல் முதல்வியாய், பச்சை நிறத்தினளாய், ஒளி பொருந்திய படிகத்தையும் பொன்னையும் போன்றவளாய், (உலகை ஈன்று போகம் அளிக்கும் அருமைச்) செயலினளாய், சிவபெருமானுக்கும், திருமாலுக்கும், பிரமனுக்கும், தேவர்களுக்கும் கிட்டாத அருமை வாய்ந்தவளாயும் உள்ள பார்வதி அருளிய முருகனே, அமுதம் பொதிந்த அழகிய மலை போன்ற இரு மார்பகங்களையும், சந்திரனைப் போன்ற முகத்தையும் கொண்டவளும், புகழ் பெற்ற மான் ஈன்ற மகளுமாகிய வள்ளியுடன் அருள் பாலிக்கும் பொன் அம்பலம் உள்ள சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* விளக்கக் குறிப்புகள்:தனிதம் (இங்கு அன்வயப் படுத்தப்பட்டது) = மேக கர்ச்சனை, தவளம் = மக்கள் கூட்டம்,கிடுகிடு = ஒரு பறை, விருமம் = பிரமை, உரு = அச்சம், சண்டம் = கூட்டம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 499 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - திகுதோ, திகுதந்தித், திகுதிகு, துடனே, கூட்டம், மக்கள், தனனா, தனதன, தனதந்தத், கிடுகிடு, வரும், தேவர்களுக்கும், என்னும், உள்ள, வெறும், வாத்தியங்கள், பெருமாளே, செககண, செகசே, திகுர்தஞ்செச், குவடோ, மிக்க, வாத்தியம், கர்ச்சனை, பறையுடன்