பாடல் 1326 - திருவெழுகூற்றிருக்கை - திருப்புகழ்
ராகம் -
தர்பாரிகானடா
தாளம் - ஆதி
- எடுப்பு 3/4 இடம்
தாளம் - ஆதி
- எடுப்பு 3/4 இடம்
ஓருரு வாகிய தாரகப் பிரமத் தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை இருபிறப் பாளரி னொருவ னாயினை ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள் நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து மூவரும் போந்து இருதாள் வேண்ட ஒருசிறை விடுத்தனை ஒருநொடி யதனில் இருசிறை மயிலின் முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய மும்மதன் தனக்கு மூத்தோ னாகி நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள் அறுகு சூடிக் கிளையோ னாயினை ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து முக்கட் சுடரினை இருவினை மருந்துக் கொருகுரு வாயினை ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட் டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற ஏரகத் திறைவ னென இருந்தனையே. |
[குறிப்பு: இந்த சிறப்பான திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல் அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாட்டு.
1 1 2 1 1 2 3 2 1 1 2 3 4 3 2 1 1 2 3 4 5 4 3 2 1 1 2 3 4 5 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 இடையில் தேர் தட்டு . . . . . . . . . . . . . . . . . . . 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 5 4 3 2 1 1 2 3 4 5 4 3 2 1 1 2 3 4 3 2 1 1 2 3 2 1 1 2 1 1 |
சில தமிழ்ச் சொற்கள் இரு பொருள் படும்படி அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மூவாதாயினை என்ற சொல்லுக்கு இரு பொருள் .. (மூவா = மூன்று மற்றும் மூவா = வயதாகாமல் இளமையாக)].
தேர் படத்தைக் காண இங்கே சொடுக்கவும்
தேர் படத்தின் பிரதியை பதிவிரக்க இங்கே சொடுக்கவும் (302kb zip file)
ஒரு (1) பொருளாகிய பிரணவமாம் முழுமுதலின் (சிவனின் ஐந்து முகங்களோடு அதோமுகமும் சேர்ந்த) ஒரு (1) வகையான தோற்றத்தில், சக்தி சிவம் என்னும் இரண்டின் (2) லக்ஷணங்களும் அமைந்து, அதுவே ஓர் (1) உருவாகச் சேர்ந்து, சக்தி சிவம் என்ற இருவரிடமும் (2) தோன்றி, மூப்பே (3) இல்லாது என்றும் இளமையோடு விளங்குகிறாய். (உபநயனத்துக்கு முன்னும் பின்னும்) இரு (2) பிறப்புக்களை உள்ள அந்தணர் குலத்தில் ஒப்பற்ற ஒருவனாக (1) விளங்கிய திருஞானசம்பந்தராய் அவதரித்தாய். (ஓரா - இரு பொருள் - ஒன்று -1- மற்றும் தெரியாமல்) பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்த காரணமாக, (இருமை - இரு பொருள் - இரண்டு -2- மற்றும் கர்வம்) கர்வத்துடன் பிரம்மா முன்னாளில் (முன்னாள் = இரு பொருள் - மூன்று -3- மற்றும் முன்பொரு நாள்) நான்கு (4) முகங்களுடைய பிரமனின் குடுமியை கணநேரத்தில் (கைகளால் குட்டிக்) கலைத்து, அரி, அரன், இந்திரன் ஆகிய மூவரும் (3) உன்னை அடைந்து உன்னிரு (2) பாதங்களில் பணிந்து முறையிட்டு வேண்ட, பிரமனை நீ அடைத்த ஒரு (1) சிறையினின்றும் விடுவித்தாய். ஒரு (1) நொடிப்பொழுதில் இரண்டு (2) சிறகுகள் உடைய மயிலில் ஏறி, மூன்று (3) பக்கங்களிலும் நீர் உள்ள கடல்களை ஆடையாக உடுத்தியுள்ள, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நால் (4) வகையான நிலம் படைத்த இவ்வுலகமே அஞ்ச (5) (அஞ்ச என்றால் ஐந்து -5- என்றும் பயப்பட என்றும் இரு பொருள்), நீ உலகை வலம் வந்தாய். நான்கு (4) விதமான தந்தங்களை உடையதும் (ஐராவத யானைக்கு நான்கு தந்தங்கள்), மூன்று (3) வகையான மதம் பிடிக்கக் கூடியதும், இரண்டு (2) காதுகளையும், ஒரு (1) துதிக்கையையும் கொண்ட மலை போன்ற ஐராவதத்தை உடைய இந்திரனின் மகளாகிய தேவயானையை மணம் செய்து கொண்டனை. ஒரு (1) வகையான யானை வடிவிலே இள யானை, கிழ யானை என இரு (2) வடிவிலும் வரவல்லதும், கன்ன மதம், கை மதம், வாய் மதம் என்ற மும்மத (3) நீரும் பெருகி வந்த கிழ யானைக்கு மூத்த சகோதரனாக* விளங்கினாய். (நால்வாய் = இரு பொருள் - நான்கு -4- மற்றும் வாயினின்று) தொங்கும் துதிக்கை முகத்தோனும், ஐங்கரங்களை (5) (தோளிலிருந்து நான்கு கரங்களும், துதிக்கையும்) உடைய கடவுளும், அறுகம் [அறுகம் = இரு பொருள் - ஆறு -6- மற்றும் அறுகம் (புல்)] புல்லைச் சூடியவனுமான கணபதிக்கு இளைய சகோதரன் என விளங்குகிறாய். நமசிவாய என்ற பஞ்ச (5) அட்சரத்தின் மூலமாக நான்கு (4) வேதங்களாலும் இவரே இறைவன் என்று உணர்த்தப் பெறுபவரும், சூரிய, சந்திர, அக்கினி என்னும் முச்சுடரை (3) தம் கண்களாக உடையவரும், நல்வினை, தீவினை இரண்டிற்கும் (2) மருந்தாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானுக்கு ஒப்பற்ற ஒரு (1) குருநாதனாக அமைந்தாய். முன்பொரு (1) நாள் உமாதேவியின் இரு மார்பிலும் சுரந்த ஞானப்பாலைப் பருகி இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழிலும் வல்லவனாகி, நால்வகைக் கவியிலும்** அரசனாகி, பஞ்ச இந்திரியங்களின் உணர்ச்சிகட்கு அடிமைப்படாத உரிமையாளனாகி, ஆறு முகங்களை உடைய ஷண்முக மூர்த்தியே இவன்தான் என யாவரும் கூற இளமை ததும்பும் அழகோடு சீகாழிப்பதியில் திருஞானசம்பந்தனாகத் தோன்றினாய். கார்த்திகைப் பெண்களாகிய ஆறு நக்ஷத்திரங்களும் பெற்ற புதல்வனாகினாய். கற்பகம், மந்தாரம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம் என்ற ஐந்து தேவ விருட்சங்கள் இருக்கும் தேவலோகத்துக்குச் சக்ரவர்த்தியாக விளங்கினாய். நான்கு மறைகளைப் போன்று மிக ரகசியமானதும், மூன்று பிரிவுகளோடு சிவந்த கொண்டைகளை (சிகரங்களை) உடையதுமான அன்றில் பட்சி (கிரெளஞ்சம்) பெயர் கொண்ட மலையை இரண்டு கூறாகப் பிளக்குமாறு ஒப்பற்ற உன் வேலினைச் செலுத்தினாய். காவிரியின் வட பாகத்தில் விளங்கும் சுவாமிமலையில் இருக்கும் சரவணபவ என்னும் உன் ஷடாக்ஷர மந்திரத்தை ஓதும் அந்தணர்கள் உனது பாத கமலங்களைப் போற்ற, திருவேரகத்தின் இறைவன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளி இருக்கின்றாய்.
* முருகனுக்காக வள்ளியை பயமுறுத்த விநாயகர் கிழ யானையாகி மதம் பெருக வந்தார்.அப்படி வந்த யானை முருகனுக்குப் பின்பு தோன்றியதால், முருகன் இங்கு மூத்தவன் ஆகிறான்.
** தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1326 - திருவெழுகூற்றிருக்கை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பொருள், நான்கு, மூன்று, மதம், வகையான, தேர், இரண்டு, உடைய, யானை, அறுகம், ஐந்து, மூவா, என்னும், ஒப்பற்ற, என்றும், அஞ்ச, கொண்ட, முன்னாள், மூவரும், வேண்ட, யானைக்கு, வந்த, விளங்கினாய், இருக்கும், மிக்கது, இறைவன், பஞ்ச, னாயினை, ஆகிய, விடுத்தனை, தட்டு, போற்ற, சிவம், சக்தி, பின்பு, விளங்குகிறாய், உள்ள, நாள், முன்பொரு, தெரியாமல், நால்வாய், இங்கே