மயில் விருத்தம் - 7 - மயில் விருத்தம்
பீம்பலாச் - கண்ட சாபு
தீரப் பயோததி (க)திக்கும் ஆகாயமும் ஜகதலமு நின்று சுழல திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்ஜிகை தீக் கொப்புளிக்க வெருளும் பாரப் பணாமுடி அனந்தன் முதல் அரவெலாம் பதைபதைத்தே நடுங்க படர்ச்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு பச்சை ப்ரவாள மயிலாம் ஆர ப்ரதாப புளகித மதன பாடீர அமிர்த்த கலசக் கொங்கையாள் ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லி பர மானந்த வல்லி சிறுவன் கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார குருதரு திருத்தணிகை வேள் கொடிய நிசிசரர் உதரம் எரிபுகுத விபுதர் பதி குடிபுகுத நடவு மயிலே (பச்சை ப்ரவாள மயிலாம் |
மிகவும் நன்றாக, சமுத்திரங்களும், எட்டுத் திசைகளும், மேல் வானமும், பூவுலகும், நின்ற நிலையில் சுழற்சி அடையவும், விளங்குகின்ற, ஆயிரம் பணாமுடிகளும் கீழே விழுந்து சிதறவும், கொடிய உச்சியின் மேல் உள்ள படங்கள் நெருப்பைக் கக்கவும், பயத்தை அடைந்த, கனத்தப் படக் கூட்டங்களை உடைய, ஆதிசேடன் முதலான சர்ப்பக் கூட்டங்கள், பட படவென்று அச்சமுற்று நடுங்கவும், எங்கும் பரந்துள்ள சக்ரவாளகிரி, தூள் தூளாகப் போகவும், பயணத்திற்கு ஏற்றபடி சவாரிக்கு வரும், பச்சை நிறத்தையும் பவள நிறத்தையும் உடைய தோகைகளைக் கொண்ட மயில் (அது யாருடையது என வினாவினால்) மிக்க கீர்த்தி உடையதாய், புளகாங்கிதம் கொண்டதாய் ஒளி மிகுந்ததாய், சந்தனப் பூச்சுக்கள் அணியப் பெற்றதாய், அமிர்தம் நிறைந்த குடத்தைப் போன்ற தன பாரங்களைக் கொண்டவள், தோகையை விரித்து ஆடும் மயிலைப் போன்றவள், பேரழகு உடையவள், பேரானந்தத்தில் திகழ்ந்து கொண்டிருப்பவள், இப்பேற்பட்ட பார்வதி தேவியின் திருக்குமரன், கோரமான முத்தலை சூலத்தை ஏந்தியவரும், முக்கண்ணரும் நிமிர் சடையானும், லோக குருவாகிய சிவபெருமான், தந்தருளிய, தணிகேசன், கொடிய செயல்களையே செய்து வந்த அசுரர்களின் வயிற்றில் எரி புகவும், தேவர்கள் அமராவதி நகரில் குடியேறவும், செலுத்திய மயிலே தான் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
7 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பச்சை, மயிலாம், கொடிய, ப்ரவாள, நிறத்தையும், உடைய, மயிலே, வல்லி, மேல்