கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர் நூல்கள்
அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த சக்தி மிகுந்த பதிகம் கந்தர் அனுபூதி ஆகும். 51 விருத்தப்பாக்களால் ஆனது. தனியே ஒரு காப்புச் செய்யுள் உள்ளது. சித்தாந்தக் கருத்துகள் நிறைந்த இந்நூல் ஒரு சிறந்த
பாராயண நூலாகும்.
காப்பு
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம். |
கல்லைப் போன்ற கடினமான உள்ளம், பக்தியினால் உருகும்படிக்கு, அடைக்கலமான அடியவர்களுக்கு அருள்புரியும் ஆறுமுகனுக்கு, எல்லா இலக்கண அம்சங்களும் பொருந்திய தமிழ் மாலை, சிறப்பாக அமையும் பொருட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அருளை நாடி துதிப்போம்.
நூல்
ஆடும் பணிவே லணிசே வலெனப் பாடும் பணிவே பணியா யருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் காடுந் தனியா னைசகோ தரனே. |
1 |
அக்ரமாக சான்றோர்களை அழிப்பதற்காக தேடுகின்ற, கஜமுகாசுரனை, போர் செய்து அழித்த, ஒப்பற்ற விநாயகப் பெருமானின், தம்பியே, பிரணவ நடனமாடும் மயில், உன்னுடைய ஞானா சக்தியாகிய வேலாயுதம், அடியார்களுக்கு முருகனின் அருளைத் தெரிவிக்கின்ற சேவல் (இவை மூன்றையும்) துதித்துப் பாடுகின்ற தொழிலையே என்னுடைய கடமையாக நீ அருள வேண்டும். ..
உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனு நீயலையோ எல்லாமற என்னை யிழந்த நலஞ் சொல்லாய் முருகா கரபூ பதியே. |
2 |
மங்காத உள்ளக் களிப்பும், துன்பமற்ற நிலையும், யோக சொரூபனும், நன்மை பயப்பவனும், அடியார்களிடம் இனிமையாகவே பேசி திருவிளையாடல் புரிபவனும், நீ தானே முருகா, உரை அவிழ உணர்வு அவிழ உயிர் அவிழ, நான் எனும் ஜீவ போதம் இழந்து அனுபவிக்கும் பேரின்ப நிலையை, மற்றவர்களுக்கு நீயே எடுத்துச் சொல்லவேண்டும். ..
வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளா வதுசண்முகனே. |
3 |
ஆறுமுகக் கடவுளே, நித்தய அழிவில்லாத பொருள் என்பது (எது?) ஆகாயமோ?, தண்ணீரோ?, நிலமோ?, நெருப்போ?, காற்றோ?, அறிவு தோன்றும் இடமோ?, ஓதப்படும் நான்கு வேதங்களோ?, நான் என்கிற தத்துவமோ?, மனமோ?, என்னை ஆட்கொண்ட இடம் தானோ? ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அனுபூதி - Kandhar Anuboothi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அவிழ, நான், தானோ, மனமோ, முருகா, பெருமானின், பணிவே, என்னை, விநாயகப்