கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம் என்ற நூலில் முருகனே குருவாக இருந்து ஞானஉபேதசத்தை உபதேசிக்கப் பெற்ற முறையும், உபதேசம் பெறப்பட்ட நிலையும் மிகத் தெளிவாகக் காட்டப் பெற்றுள்ளன. இவ்வலங்காரம் அருணகிரிநாதர் பல வேளைகளில் பாடிய பாடல்களில் தொகுப்பு என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் உபதேசம் பெற்ற நிலையின் அடுத்து இது எழுதப் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெறும் நிலையில் இதனுள் பல பாடல்கள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக முருகன் சாவின் விளிம்பில் அருணகிரிநாதரைத் தடுத்து நிறுத்தியபோது அவர் கண்ட அருள் வடிவே அலங்காரமாகப் பாடப் பெற்றுள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
காப்பு
அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில் தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே. |
தன்னை நினைவுகூரும் மாத்திரத்திலேயே பக்தர்களுக்கு முக்தியினைத் தரவல்ல திருவண்ணாமலை கோயிலின் அழகிய கோபுரத்தின் வாயிலுக்கு வடக்குப் பக்கம் சென்று அக்கோபுரத்தின் வாயிலுக்குத் தெற்குப் பக்கத்தில் வீற்றிருக்கும் திருவிநாயகப் பெருமானை வழிபடுவதற்கு வருபவர்கள் "தட, பட" என்ற ஒலியுடன் தங்கள் தலைமீது போட்டுக்கொள்ளும் குட்டுடன் அவர்கள் படைக்கும் சர்க்கரை முதலிய உணவுப் பொருட்களையும் தம் துதிக்கையால் ஏற்றுக் கொள்பவரும் "இச்சை, கிரியை, ஞானம்" என்னும் மும்மதங்களையும் விசாலமான கும்பத்தலங்களையும் கொண்டிருப்பவருமான யானை முகத்தான் திருவிநாயகப் பெருமானின் இளையோனாகிய திருமுருகப் பெருமானின் தரிசனம் கண்டுகொண்டேன்.
நூல்
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. |
1 |
குமரப் பெருமானே, முக்தியைப் பெறுவதற்குரிய தவப்பயன் சிறிதேனும் இல்லாத அடியேன், அசுத்தப்படுத்தும் பிரபஞ்சம் என்னும் சேற்றினை விட்டு உய்யுமாறு உண்மையான வழியைக் காட்டியருளினீர்! அடர்ந்த சிவந்த சடையின் மீது கங்கை நதியையும் நாகப் பாம்பினையும் கொன்றை மலரையும் தும்பை மலரையும் சந்திரனது பிறையையும் சூடிக் கொண்டுள்ள சிவபெருமானின் குமாரனாகிய தேவரீர், திருமுருகப் பெருமானாக மட்டுமன்றி, கருணைக்கு உறைவிடமான கிருபாகரனாகவும் விளங்குகின்றீர்.
அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால் எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற் கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே. |
2 |
தீவினைகளை அழித்து இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் பேரின்ப வீட்டை முக்தியை வழங்க வல்ல கூர்மையான வேலினைத் தாங்கிய திருமுருகப் பெருமானைப் புகழும் திருப்புகழ்ப் பாடல்களை இன்றே மெய்யன்புடன் எழுத்துப் பிழைகள் சிறிது மின்றி கற்றுக் கொள்ளாமல் ஓதாமல் இருக்கின்றீர்களே.! நெருப்பு மூண்டு எரிவதைப் போல கண்களை உருட்டிப் பார்த்துப் புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் வீசுகின்ற பாசக் கயிற்றினால் கழுத்திலே சுருக்குப் போட்டு உங்கள் உயிரைப் பற்றி இழுக்கின்ற அந்த நாளிலா திருப்புகழ்ப் பாடல்களைக் கற்பது (ஓதுவது) இயலும்?.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - திருமுருகப், பெருமானின், மலரையும், எழுத்துப், திருப்புகழ்ப், என்னும், திருவிநாயகப், வாயிலுக்கு, உபதேசம், சென்று, குட்டுடன், சர்க்கரை, பெற்ற