சிறுபாணாற்றுப் படை - சங்க காலம்
இது ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய 269 அடிகள் கொண்ட அகவற்பாட்டு. சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது. பெரும்பாணாற்றுப்படையை விட அளவால் சிறியது என்பதால் பெற்ற பெயர் இது என்றலும் பொருந்தும்.
இதில் சீறியாழின் உருவ அமைப்பு அழகாக, உவமைகளுடன் விளக்கப்பட்டுள்ளது. நல்லியக்கோடன் நாட்டு வளமும், மக்கள் வாழ்வுச் சிறப்பும், விருந்தோம்பும் பண்பும் காட்டப்பட்டுள்ளன. கடையெழு வள்ளல்களின் வரலாறுகள் சுருக்கமாகக் கூறப்பட்டிருத்தலும், மூவேந்தர் நாடுகள் வருணிக்கப்பட்டிருத்தலும் இந்நூலின் வரலாற்றுத் தன்மைக்குச் சான்றாகும்.
நல்லியக் கோடன், கடையெழு வள்ளல்கள் எழுவரும் தாங்கிய ஈகையாகிய செவ்விய நுகத்தைத் தான் ஒருவனே தாங்கியதாகப் புலவர் புகழ்வார். பாணனுடைய வறுமை நிலை நெஞ்சை உருக்கும் வகையில் விளக்கப்படுகிறது.
ஆமூர், வேலூர், கிடங்கில் என்னும் ஊர்களின் சிறப்பை இப்பாட்டில் காணலாம். விறலியின் மேனியழகினை அழகிய உவமைகளால் புலவர் பாராட்டுவது கற்பாரைக் கவருகிறது. மதுரையைத் “தமிழ்நிலை பெற்ற தாங்கரும் மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” என்று பாராட்டுவார் புலவர்.
பாணரின் அடுக்களையில் நாய்க்குட்டி ஈன்றுள்ளதையும், கண்ணும் திறவாத அதன் குட்டிகள் பாலில்லாத வறுமுலையைப் பற்றி இழுத்ததனால் துன்பம் தாளாது தாய் நாய் குரைத்தலையும் புலவர்,
திறவாக் கண்ண சாய்செவிக் குருளை கறவாப் பான்முலை கவர்தல் நோனாது புனிற்று நாய்குரைக்கும் புல்லென் அட்டில் |
(குருளை = குட்டி ; நோனாது = பொறுக்காமல்; புனிற்று = அண்மையில் குட்டியீன்ற; புல்லென் = பொலிவு அற்ற; அட்டில் = அடுக்களை)
என்று கூறுவார். பாணர் குடும்பப் பெண் குப்பையில் முளைத்த வேளைக் கீரையைக் கொய்து கொண்டு வந்து, நீரை உலையாக ஏற்றி அதில் அதை வேகவைத்து, அதனைப் பிறர் காணாது கதவை அடைத்துத் தன் சுற்றத்தோடு உண்ணும் அவலத்தை, புலவர் அழகாகப் படம் பிடித்துள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபாணாற்றுப் படை - Sirupanatrupadai - சங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - புலவர், சிறுபாணாற்றுப், காலம், சங்க, நூல்கள், தமிழ்நாட்டுத், இலக்கிய, தகவல்கள், தமிழ், குருளை, sirupanatrupadai, கடையெழு, நோனாது, புனிற்று, | , அட்டில், புல்லென், பெற்ற, நல்லியக், list, literatures, tamil, period, sangam, information, tamilnadu, நாட்டு