தியாக பூமி - 4.22. ராஜி யோசனை
சென்னைப்பட்டணம் 'கொல்'லென்றிருந்தது. உமா ராணியின் புருஷன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்திருக்கிறானாம் என்றும், அவன் உமாராணியின் பேரில் தாம்பத்திய உரிமைக்கு வழக்குத் தொடுக்கப் போகிறானாம் என்றும் செய்தி பரவிற்று. எங்கே பார்த்தாலும் ஜனங்கள் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். உமாராணியின் பூர்வ ஜீவியத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஏற்கெனவே ரொம்பப் பேருக்கு ஆவல் இருந்தது. அவளுடைய வாழ்க்கையில் ஏதோ மர்மம் இருக்கிறதென்று எல்லாருமே நினைத்தார்கள். அது என்னவாயிருக்கலாமென்று பலர் பலவிதமாய் ஊகம் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது உண்மை வெளியாவதற்கு ஹேது உண்டாகவே, நகரில் பிரமாதமான பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
கடைசியில், ஒரு நாள், பத்திரிகைகளில், கேஸ் தாக்கலாகிவிட்டது என்ற விவரம் வெளியாயிற்று. அந்தச் செய்தியைப் பெரிய தலைப்புக்களுடன் முக்கியமான இடத்தில் பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன:
கலியுக அதிசயம்!
திடீரென்று வந்தவர் தாம்பத்ய உரிமை கோருகிறார்!
உமாராணியின் மேல் வழக்கு!
திடீரென்று வந்தவர் தாம்பத்ய உரிமை கோருகிறார்!
உமாராணியின் மேல் வழக்கு!
என்னும் இது போன்ற தலைப்புகள் பத்திரிகைகளின் இடத்தை அடைத்தன. 'போஸ்டர்' விளம்பரங்களிலும் இந்தக் கேஸ் விவரந்தான் காணப்பட்டது.
மறுநாள் காலையில், ஆபத்சகாயமய்யரின் பாரியை, கையில் ஒரு தமிழ்ப் பத்திரிகையுடன் அவருடைய ஆபீஸ் அறைக்கு வந்து சேர்ந்தாள்.
"ஏன்னா? இதென்ன அவமானம்? உங்க உமாராணி மேலே ஏதோ கேஸாமே?" என்றாள்.
"அதிலே உனக்கு என்ன வந்தது அவமானம்?" என்று வக்கீல் கேட்டார்.
"நீங்க அங்கே போயிண்டு வந்திண்டு இருக்கேளேன்னுதான்; இல்லாட்டா, ஊரிலே எந்த நாய் எப்படிப் போனா எனக்கென்ன? ஆமாம்; என்னமோ தாம்பத்திய உரிமைக் கேஸுன்னு போட்டிருக்கே, அப்படின்னா என்ன?"
"அப்படின்னா, 'Suit for Restitution of Conjugal Rights' என்று அர்த்தம்."
"போருமே பரிகாசம்! இப்படியெல்லாம் நீங்க கிருதக்காப் பேசறதைக் கேட்டாத்தான், எனக்கு எங்கேயாவது ஓடிப் போயிடலாம்னு தோணறது."
"நீ இப்பச் சொல்றயோல்லியோ? அந்த மாதிரி நிஜமாகவே ஒரு மனுஷனுக்கு அதிர்ஷ்டம் வந்து அவன் பெண்டாட்டி அவனை விட்டு ஓடிப்போயிடறாள்னு வச்சுக்கோ. அந்த மடையன் அது தனக்கு அதிர்ஷ்டம்னு தெரிஞ்சுக்காமே, அவளைத் தன்னோடு வந்து இருக்கச் செய்யணும்னு கோர்ட்டிலே கேஸ் போட்டான்னா, அதுக்குத்தான் தாம்பத்திய் உரிமை வழக்குன்னு சொல்றது."
"இதென்ன வெட்கக்கேடு? இப்படிக்கூட ஒரு கேஸ் போடறதுண்டா, என்ன?"
"பின்னே சட்டம், கோர்ட்டு எல்லாம் என்னத்துக்காக இருக்குன்னு நினைச்சுண்டிருக்கே? வக்கீல் ஆம்படையாளாயிருந்துண்டு இன்னும் இது தெரிஞ்சுக்காமே இருக்கயே?"
தேடல் தொடர்பான தகவல்கள்:
தியாக பூமி - 4.22. ராஜி யோசனை, கேஸ், ராஜி, உமாராணியின், என்ன, வந்து, யோசனை, தியாக, பூமி, வக்கீல், அப்படின்னா, தெரிஞ்சுக்காமே, அந்த, அவமானம், நீங்க, கொண்டிருந்தார்கள், கல்கியின், அமரர், என்றும், அவன், உரிமை, தாம்பத்திய, இதென்ன