வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 89
அங்கிரா
இடம் : காந்தாரம் (தட்ச சீலம்)
ஜாதி : இந்திய ஆரியர்
காலம் : கி.மு. 1800
“இந்தப் பஞ்சாடையால் ஒரு பிரயோசனமுமில்லை. குளிரைத்தடுக்கவுமில்லை. மழையைத் தாங்கவுமில்லை” என்று தன்னுடைய நனைந்திருந்த மேல் அங்கியைக் களைந்துவிட்டு, கம்பளப் போர்வையை உடம்பின் மீது போர்த்துக் கொண்டே ஒரு யுவன் கூறினான்.
“ஆனால், வெயிற் காலத்திற்கு இந்த ஆடை ரொம்பச் சௌகரியமாயிருக்கிறதே!” தன்னுடைய மேல் அங்கியைக் கழற்றிக் கதவின் மேல் உலரப் போட்டுக் கொண்டே மற்றொரு வாலிபன் கூறினான்.
இருட்டுவதற்கு இன்னும் அதிக நேரம் இருந்தது. ஆயினும் இந்த வழிப்போக்கர்கள் தங்கும் அகதிச் சாலையில் நெருப்பைச் சுற்றி, கூட்டம் கூடிவிட்டது. காற்றை விரும்பிய அந்த இரு வாலிபர்களும் குளிர் காயும் நெருப்பை விட்டு ஒதுங்கி, கம்பளிப் போர்வைகளைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
முதல் வாலிபன்:-“நாம் இன்னும் பத்து மைல் தூரம் இன்று போயிருக்க முடியும். நாளைக் காலையிலேயே காந்தாரத்தை அடைந்து விடலாம். ஆனால் இந்த மழைக்கும் காற்றிற்கும் என்ன செய்வது?”
இரண்டாவது வாலிபன்:- “இந்த மழையும் காற்றும் நமக்குச் சிரமத்தைத் தான் கொடுக்கின்றன. ஆனால் மழை வருஷிக்கா விட்டாலோ, நம்முடைய விவசாயிகள் இந்திரனை நோக்கிப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்; மந்தைகளும் முகம்வாடிக் கத்த ஆரம்பித்து விடுகின்றன.”
முத-வா:- “அது உண்மைதான். ஆனால் மழையை வெறுப்பவர்கள் வழிப்போக்கர்களாகிய நாம்தான். ஆயினும் யாரும் நிரந்தரமாக வழிப் போக்கர்களாய் இருப்பதில்லையே!” என்று கூறிய அவன் மற்றவனுடைய கழுத்திற்குப் பின்புறம் இருந்த பெரிய காயத்தின் வடுவைப் பார்த்து, “நண்ப! உன்னுடைய பெயர் என்ன?” என்றான்.
“பால மத்ரன். உன்னுடைய பெயர்?”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 89, புத்தகங்கள், மேல், பக்கம், வாலிபன், கங்கை, வால்காவிலிருந்து, என்ன, உன்னுடைய, பெயர், ஆயினும், ஆரம்பித்து, கொண்டே, சிறந்த, தன்னுடைய, அங்கியைக், கூறினான், இன்னும்