வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 232
அரச பதவியை ஏற்றுக் கொள்ள நான் மறுத்திருக்கிறேன். ஏனெனில் ஸ்தானவீஷ்வரத்து அரசன் பிரபாகரவர்த்தனனின் புத்திரன், கன்னியகுப்ஜாதி பதி, பரம பட்டாரகன் -, ராஜாதிராஜன், ராஜ்யவர்த்தனின் தம்பியாகி நான், அரச போகத்தைப் பார்த்து மட்டுமல்ல, அனுபவித்தும் அது பயனற்றது என்று கருதினேன். தமையன் கொல்லப்பட்ட பிறகு எவ்வளவோ காலம் நான்
சிம்மாசனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தேன். தமையன் கொலைக்குப் பழிவாங்க வேண்டுமென்ற க்ஷத்திரிய உணர்ச்சி, என் இதயத்திலே தீவிரமாக இடம் பெறாவிட்டால், நான் இந்தக் கன்னிய குப்ஜ சிம்மாஸனத்திலே அமர்ந்திருக்கவே மாட்டேன். இந்த ராஜ்யம், என் சகோதரி ராஜ்யஸ்ரீயின் கணவர் வீட்டாருக்கு - மௌக்கரி குலத்தினருக்குக் கிடைத்திருக்கும். என் தமையனுக்கு முன்னால், குப்தர்களின் அந்த நாட்டை ஆண்டு வந்தவர்கள் மௌக்கரி குலத்தினரே. எனது பிற்காலத்தவர்கள் ஹர்ஷவர்த்தனன் சுயநல நோக்கோடு தன் தலையின் கிரீடத்தை வைத்துக் கொள்ளவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இவைகளையெல்லாம் சொல்கிறேன். எனது தர்பாரிலே நிறைந்திருந்த முகஸ்துதிக்காரர்களின் செயலை நினைத்து நான் வருந்துகிறேன். அரசர்கள் இந்த முகஸ்துதிக்காரர்களின் பிடியிலிருந்து எப்பொழுதும் தப்பித்துக் கொள்ள முடிவதில்லை அவர்கள் என்னைச் சமுத்திர குப்தனாகவும் சந்திரகுப்த விக்கிரமாதித்தியனைப் போலும் உலகம் கருதும்படி செய்து விட்டார்கள். அவர்களின் இந்தச் செயல், எனக்கு நன்மையைச் செய்யவில்லை; தீமையையே உண்டாக்கியது.
நல்லொழுக்கத்தைக் காப்பாற்றுவதற்காகவும் எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதற்காகவும் நான் இந்த ராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொண்டேன். தானங்களிலெல்லாம் மிகப் பெரிய தானம் கல்விதானம் என்றே நான் கருதினேன். ஆகவே, குப்தர்கள் காலத்திலே வளர்ந்து வந்த ‘நாலந்தா’ சர்வ கலாசாலையை இன்னும் வளர்த்து, எல்லா வசதிகளையும் உடையதாகச் செய்தேன். என் காலத்தில் எங்கே வெளிநாடுகளிலிருந்தும், நம் நாட்டிலிருந்தும் வந்துள்ள பத்தாயிரம் மாணவர்களும் ஆசிரியர்களும்
வசதியுடன் தங்கிப் படிப்பதற்கு வேண்டிய எல்லாச் சௌகரியங்களும் இருந்தன. அறிஞர்களுக்கு மரியாதை செலுத்துவது எனக்கு மிகவும் பிரியமான செயல். சீனாவிலிருந்து வந்த அறிஞர், பிக்ஷு வான்சிங்கை, மனமுவந்து வரவேற்றுக் கௌரவித்தேன். பாணகவியின் அற்புதமான கவிதா சக்தியைப் பார்த்து நான் அவனைக் காமுகப் பாதையிலிருந்து திருப்பி, நல்வழியிலே கொண்டு வர முயற்சி செய்தேன். ஆனால், அதில் முழு வெற்றியும் பெற முடியவில்லை. அவன் காளிதாஸனின் வழிகளையே பின்பற்றி, வெறும் முகஸ்துதிக் கவிஞனாகவே ஆகிவிட்டான். ஆனால் மகத நாட்டின் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் மங்கிக் கிடந்த அவனைக் கொண்டு வந்து உலகத்தின் முன்னிலையில் நிறுத்திய பெருமுயற்சிக்கு எனது கல்வி ஆசையே காரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 232, நான், கொள்ள, புத்தகங்கள், பக்கம், எனது, ஏற்றுக், வால்காவிலிருந்து, கங்கை, வந்த, எல்லா, செய்தேன், கொண்டு, அவனைக், எனக்கு, தமையன், பார்த்து, சிறந்த, கருதினேன், மௌக்கரி, முகஸ்துதிக்காரர்களின், செயல்