சத்ய சோதனை - பக்கம் 494
காங்கிரஸின் பெயரால் எதையும் செய்ய வேண்டாம் என்று என் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்து விட்டேன். நாங்கள் விரும்பியதெல்லாம், வேலையையேயன்றிப் பெயரையல்ல; பொருளையேயல்லாமல் நிழலையல்ல. ஏனெனில், அரசாங்கத்திற்கும், அந்த அரசாங்கத்தை இஷ்டம்போல் ஆட்டி வந்தவர்களான தோட்ட முதலாளிகளுக்கும், காங்கிரஸ் என்ற பெயரே வேப்பங்காயாக, வெறுப்பாக இருந்தது. காங்கிரஸ் என்பதற்கு, வக்கீல்களின் தந்திரவாதங்கள்; சட்டத்தில் இருக்கும் இடுக்குகளைக் கொண்டு சட்டத்தைப் பின்பற்றாது இருப்பது; வெடி குண்டுக்கு மற்றொரு பெயர்; அராஜகக் குற்றம், தந்திரம், நய வஞ்சகம் - என்றெல்லாம் அவர்கள் பொருள் கற்பித்துக் கொண்டிருந்தனர். இந்த இரு தரப்பாரிடமிருந்தும் இந்தத் தப்பு அபிப்பிராயத்தைப் போக்க வேண்டும். ஆகவே, காங்கிரஸின் பெயரையே சொல்லுவதில்லை. காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தைப் பற்றி விவசாயிகளுக்குத் தெரிவிப்பதில்லை என்று நாங்கள் முடிவு செய்து கொண்டோம். காங்கிரஸின் பெயரைவிட அதன் கருத்தை அறிந்து அவர்கள் நடந்து கொண்டாலே போதும் என்று நாங்கள் எண்ணினோம்.
ஆகையால், காங்கிரஸின் சார்பாகப் பகிரங்கமாகவோ, ரகசியமாகவோ அங்கே வேலை செய்து, எங்கள் வருகைக்காக முன்னேற்பாடுகளைச் செய்து வைக்க அங்கே தூதர்கள் யாரும் அனுப்பப்படவில்லை. ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் போய்ப்பிரச்சாரம் செய்வதற்கு வேண்டிய சக்தியும் ராஜ்குமார் சுக்லாவுக்கு இல்லை. அதுவரையில் அம்மக்கள் இடையே எந்த விதமான ராஜீய வேலையும் நடந்தது கிடையாது. சம்பாரணுக்கு வெளியில் உலகம் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாதென்றாலும், ஆயுளெல்லாம் தங்களுக்கு நண்பனாக இருந்தவனைப்போல் அவர்கள் என்னை வரவேற்றார்கள். இவ்விதம் விவசாயிகளை நான் சந்தித்ததில், கடவுளையும், அகிம்சையையும், சத்தியத்தையும் நேருக்கு நேராக நான் தரிசித்தேன் என்று கூறுவது அப்படியே உண்மையேயன்றி எவ்விதத்திலும் மிகைப்படுத்திக் கூறுவது ஆகாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 494, காங்கிரஸின், புத்தகங்கள், காங்கிரஸ், செய்து, சத்ய, பக்கம், நாங்கள், சோதனை, அங்கே, நான், கூறுவது, கொண்டிருந்தனர், சிறந்த, பற்றி, பெயரால், முடிவு