சத்ய சோதனை - பக்கம் 308
இந்த எதேச்சாதிகாரத்தின் கொடுமையை நான் நன்றாக அனுபவித்திருக்கிறேன். இலாகாவின் பிரதம அதிகாரியை வந்து பார்க்குமாறு முதலில் எனக்குக் கட்டளை வந்தது. அந்த அதிகாரி இலங்கையிலிருந்து வந்தவர். பிரதம அதிகாரியின் ‘கட்டளை வந்தது’ என்று நான் சொல்லுவது, விஷயத்தை நான் மிகைப்படுத்திக் கூறுவதாகத் தோன்றி விடக்கூடும். எனவே இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எழுத்து மூலமான உத்தரவு எதுவும் எனக்கு வரவில்லை. ஆசியாக்காரர்களின் அதிகாரிகளை இந்தியத் தலைவர்கள் அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது. அப்படிச் சந்தித்தவர்களில் ஒருவர் காலஞ்சென்ற சேத் தயாப் ஹாஜிகான் முகமது. அந்தக் காரியாலயத்தின் பிரதம அதிகாரி, நான் யார்? நான் எதற்காக அங்கே வந்திருக்கிறேன்? என்று அவரைக் கேட்டார். “அவர் எங்கள் ஆலோசகர். நாங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் வந்திருக்கிறார்” என்றார், தயாப் சேத்.
“அப்படியானால், நாங்கள் இங்கே எதற்காக இருக்கிறோம்? உங்களைப் பாதுகாப்பதற்கென்றே நாங்கள் நியமிக்கப் பட்டிருக்கவில்லையா? இங்கிருக்கும் நிலைமையைப் பற்றிக் காந்திக்கு என்ன தெரியும்?” என்று கேட்டார், எதேச்சாதிகாரி.
இக்குற்றச் சாட்டுக்குத் தயாப் சேத் தம்மால் இயன்ற வரையில் பதில் சொன்னார். அது, பின்வருமாறு: “நீங்கள் இருக்கிறீர்கள். உண்மைதான். ஆனால் காந்தி எங்கள் மனிதர். அவருக்கு எங்கள் மொழி தெரியும். எங்களைப் புரிந்து கொண்டிருக்கிறார். எப்படியும் நீங்கள் அதிகாரிகள் தானே?”
என்னைத் தம் முன்னால் கொண்டு வருமாறு துரை, தயாப் சேத்துக்கு உத்தரவு போட்டார். தயாப் சேத் முதலியவர்களுடன் நான் துரையிடம் போனேன். எங்களை உட்காரச் சொல்லவில்லை. நாங்கள் எல்லோரும் நின்றுகொண்டே இருந்தோம்.
“இங்கே நீர் வந்தது எதற்காக”? என்று துரை என்னைப் பார்த்துக் கேட்டார்.
“எனது சகோதர இந்தியர், தங்களுக்கு ஆலோசனை கூறி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் நான் வந்தேன்”
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 308, நான், புத்தகங்கள், தயாப், நாங்கள், சேத், சத்ய, பிரதம, சோதனை, எங்கள், கேட்டார், பக்கம், கேட்டுக்கொண்டதன், துரை, தெரியும், பேரில், எதற்காக, வந்தது, எதுவும், சிறந்த, அந்த, வந்து, அதிகாரி, இந்தியர், உத்தரவு