சத்ய சோதனை - பக்கம் 291
குறுகலான, வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோயிலுக்குப் போக வேண்டியிருந்தது. அங்கோ அமைதி என்பதே இல்லை. ஈக்கள் ஏகமாக மொய்த்தன. கடைக்காரர்களும் யாத்திரிகர்களும் போட்ட சப்தம் சகிக்க முடியாததாக இருந்தது. தியானத்திற்கும் தெய்வசிந்தனைக்கும் ஏற்ற சூழ்நிலை இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கத்தக்க அந்த இடத்தில் அது இல்லவே இல்லை. அந்தச் சூழ்நிலையை ஒருவர் தம் உள்ளத்தினுள்ளே தான் தேடிக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தைப் பற்றிய பிரக்ஞையின்றி, மெய்ம் மறந்தவர்களாகச் சகோதரிகள் தியானத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தேன். இதற்காகக் கோயில் நிர்வாகிகளை யாரும் பாராட்டி விடுவதற்கில்லை. கோயிலைச் சுற்றிலும் சுத்தமான, இனிய, சீரிய சூழ்நிலையை உள்ளும் புறமும் உண்டாக்கி, அது நிலைத்திருக்கச் செய்வது, நிர்வாகிகளின் பொறுப்பு. இதற்குப் பதிலாகக் கபடஸ்தர்களான கடைக்காரர்கள், மிட்டாய்களையும், புது நாகரிக விளையாட்டுப் பொம்மைகளையும் விற்கும் கடைத் தெருவையே நான் அங்கே கண்டேன்.
நான் கோயிலுக்குள் போனதும் வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது. உயர்ந்த சலவைக் கற்களாலான தரை. ஆனால், அழகு உணர்ச்சியே இல்லாத ஒரு பக்தர், சலவைக் கற்களை ஆங்காங்கே உடைத்து அவற்றில் ரூபாய் நாணயங்களைப் பதித்துவிட்டார். அந்த ரூபாய்கள் அழுக்குச் சேர்வதற்குச் சிறந்த இடங்கள் ஆகிவிட்டன.
ஞான வாவி (ஞானக் கிணறு)க்குப் பக்கத்தில் போனேன். அங்கே கடவுளைக் காணலாம் என்று தேடினேன். ஆனால், நான் காணவில்லை. ஆகையால், எனக்கு மனநிலை நன்றாயில்லை. ஞான வாவியைச் சுற்றிலும்கூட ஆபாசமாகவே இருப்பதைக் கண்டேன். தட்சிணை கொடுக்கவே எனக்கு விருப்பமில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 291, நான், புத்தகங்கள், எனக்கு, சத்ய, அங்கே, சோதனை, சிறந்த, பக்கம், அந்த, கண்டேன், சலவைக், இல்லை, சூழ்நிலையை, கோயிலுக்குப், இருந்தாலும், தட்சிணை, காணவில்லை, போனேன், ஆகையால்