சத்ய சோதனை - பக்கம் 259
எங்கள் படை 1,100 பேரையும் 40 தலைவர்களையும் கொண்டது. இவர்களில் சுமார் முந்நூறு பேர் சுயேச்சையான இந்தியர்; மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். டாக்டர் பூத்தும் எங்களுடன் இருந்தார். படையும் நன்றாக வேலை செய்து புகழ் பெற்றது. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்கு வெளியில்தான் எங்கள் வேலை என்று இருந்தும், செஞ்சிலுவைய் படையின் பாதுகாப்பு எங்களுக்கு இருந்தும், நெருக்கடியான சமயம் வந்தபோது, துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளும் போய்ச் சேவை செய்யும்படி எங்களுக்குக் கூறப்பட்டது. மேலே கூறப்பட்ட வரையறை, நாங்கள் விரும்பிப் பெற்றது அன்று. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள் நாங்கள் இருப்பதை அதிகாரிகள் விரும்பவில்லை. ஸ்பியன் காப் என்ற இடத்தில் பிரிட்டிஷ் படைகள் முறியடிக்கப்பட்டதும் அந்த நிலைமை மாறிவிட்டது. ஜெனரல் புல்லர் ஒரு செய்தி அனுப்பினார். ‘ஆபத்திற்கு உடன்பட நீங்கள் கடமைப்பட்டிராவிடினும், நீங்கள், அவ்விதம் செய்து, போர்க்களத்திலிருந்து காயம்பட்டவர்களைக் கொண்டு வருவீர்களானால் அரசாங்கம் நன்றியறிதல் உள்ளதாக இருக்கும்’ என்று அச்செய்தி கூறியது. இதற்கு நாங்கள் தயங்கவே இல்லை. இவ்விதம் ஸ்பியன் காப் யுத்தத்தின் பயனாக, நாங்கள் துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளாகவே வேலை செய்யலானோம். காயம்பட்டவர்களை, டோலியில் வைத்துத் தூக்கிக்கொண்டு, அந்த நாட்களில் நாங்கள் தினந்தோறும் இருபது, இருபத்தைந்து மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது. காயம் அடைந்தவர்களில் ஜெனரல் வுட்கேட் போன்ற போர்வீரர்களைத் தூக்கிச் சென்ற கௌரவமும் எங்களுக்கு கிடைத்தது.
ஆறு வாரங்கள் சேவை செய்த பிறகு, எங்கள் படை கலைக்கப் பட்டுவிட்டது. ஸ்பியன் காப்பிலும், வால்கிரான்ஸிலும் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு, லேடி ஸ்மித் என்ற இடத்தையும் மற்ற இடங்களையும் அவசர நடவடிக்கைகளினால் மீட்பதற்கு முயல்வதைப் பிரிட்டிஷ் தளபதி கைவிட்டுவிட்டார். இங்கிலாந்திலிருந்தும் இந்தியாவில் இருந்தும் மேற்கொண்டு உதவிக்குப் படைகள் வந்து சேரும் வரையில் மெதுவாகவே முன்னேறுவது என்று முடிவு செய்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 259, எங்கள், நாங்கள், புத்தகங்கள், துப்பாக்கிப், பிரயோக, பக்கம், வேலை, ஸ்பியன், இருந்தும், எங்களுக்கு, சேவை, சோதனை, சத்ய, அந்த, நீங்கள், படைகள், ஜெனரல், பிறகு, பெற்றது, சிறந்த, டாக்டர், செய்து, காப், பிரிட்டிஷ்