சத்ய சோதனை - பக்கம் 231
வீட்டிற்குள் அமைதியாக இருந்தது; ஆனால், வெளியிலோ வெள்ளையர், வீட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். இரவும் வந்து. ‘காந்தியை வெளியே அனுப்பு!’ என்று அந்த ஆவேசக்கூட்டம் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. நிலைமையை உடனே அறிந்துகொண்ட போலீஸ் சூப்ரிண்டெண்டென்டு, கூட்டம் கட்டுக் கடங்காது போய்விடாதபடி ஏற்கனவே வந்து சமாளித்துக் கொண்டிருந்தார். கூட்டத்தை அவர் விரட்டவில்லை. அவர்களிடம் தமாஷ் செய்தே சமாளித்து வந்தார். என்றாலும், நிலைமை அவரும் கவலைப் பட வேண்டியதாகவே இருந்தது. பின்வருமாறு எனக்குச் செய்தி அனுப்பினார்: “உங்கள் நண்பரின் வீட்டையும் சொத்துக்களையும் உங்கள் குடும்பத்தையும் நீங்கள் பாதுகாக்க விரும்பினால், என் யோசனைப்படி மாறுவேடத்துடன் நீங்கள் வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்துவிட வேண்டும்.”
இவ்விதம் ஒரே நாளிலேயே, ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரு நிலைமைகளை நான் சமாளிக்க வேண்டியதாயிற்று. உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று கற்பனையில் மாத்திரமே பயந்த ஸ்ரீ லாப்டன், என்னைப் பகிரங்கமாக வெளியில் வருமாறு யோசனை கூறினார். அந்த யோசனையை ஏற்று நடந்தேன். ஆபத்து முற்றும் உண்மையாகவே இருந்த சமயத்தில், மற்றொரு நண்பர் அதற்கு நேர்மாறான யோசனையைக் கூறினார். அதையும் ஏற்று நடந்தேன். என் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்பதனால் அப்படிச் செய்தேனா, அல்லது என் நண்பரின் உயிருக்கும் சொத்துக்கும் என் மனைவி மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிட வேண்டாம் என்பதற்காக அப்படிச் செய்தேனா என்பதை யார் கூற முடியும்? மேலே கூறியது போல், முதலில், கூட்டத்தை நான் தைரியமாக எதிர்த்து நின்றது, பின்னால் மாறுவேடத்துடன் நான் தப்பியது ஆகிய இரண்டிலும் நான் செய்தது சரிதான் என்று யாரால் நிச்சயமாகச் சொல்ல முடியும்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 231, புத்தகங்கள், நான், ஆபத்து, பக்கம், அங்கே, கூறினார், சோதனை, சத்ய, முடியும், மாறுவேடத்துடன், ஏற்று, நடந்தேன், நீங்கள், செய்தேனா, அப்படிச், உயிருக்கும், வெளியே, போலீஸ், அவர், நாங்கள், சிறந்த, ஸ்ரீ, இருந்த, கூட்டத்தை, அந்த, வந்து, நண்பரின்