அர்த்தமுள்ள இந்துமதம் - தாய் -ஒரு விளக்கம் !
இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என்பதைத் தவிர, வேறு பதில் சொல்ல எனக்குத் தோன்றவில்லை.
`எதிலும் விதிவிலக்கு உண்டு’ என்பதைத்தான் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
கோடானு கோடி இந்துக்களில் இப்படிப்பட்ட தாய்மார்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே இருப்பார்கள்.
அதற்காக, அந்தத் தாயின் மகனோ, கணவனோ, தாய்க் குலத்தையே வெறுக்கக் கூடாது.
வகை வகையான மலர்கள் பூத்துக் குலுங்கும் உலகில் ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு விதமான வாசம் உண்டு.
ஆனால் மலர் ஒன்று `மல நாற்றம்’ அடிப்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆனால் அபூர்வமான மலர்.
அது மலரும் செடியின் பெயர் `பீநாறிச் சங்கு’ என்பதாகும்.
அந்தச் செடியின் இலைகள்கூட மலநாற்றமே அடிக்கும்.
அந்த இலைகளை அரைத்துக் குடித்தால், உடம்பில் எவ்வளவு `சிரங்கு’ இருந்தாலும் உதிர்ந்துவிடும்.
அந்த மலரைத் தேடிப்பிடித்து வாங்கிப் பாருங்கள். அதைவிட அழகான மலர் உலகத்திலேயே கிடையாது.
ஆனால் அதை மூக்கிலே வைத்தால் மூன்று நாளைக்குச் சோறு செல்லாது.
அதுவும் இறைவனின் படைப்புத்தான்!
உலகத்திலுள்ள அபூர்வத் தன்மைகளை மனத்திற் கொண்டே, இந்துக்கள் பூர்வஜென்ம நம்பிக்கையை வளர்த்தார்கள்.
குணங்கெட்டவளைத் தாயாகப் பெற்றவர்கள், இந்தப் பூர்வஜென்ம நம்பிக்கையிலேயே அமைதியுற வேண்டும்.
அவர்கள் அவளை வணங்க வேண்டியதில்லை; அவளை விட்டு ஒதுங்கிவிட வேண்டும்.
முதுமையில் அவளே வந்து அவர்களை வணங்குவாள்.
விதிவிலக்குகளை வைத்துப் பொதுவான தத்துவங்களை யாரும் எடை போடக்கூடாது.
பொதுவில் `தாய்மை’ என்பது இந்துக்களால் சக்தி என்றழைக்கப்படுகிறது.
ரத்த பாசத்தை உடம்பு சிலிர்க்க வருணிப்பது இந்து
மதம்தான்.
பூமியைப் `பூ மாதா’ என்றும் பசுவைக் `கோ மாதா’ என்றும் வருணிப்பவர்கள் இந்துக்கள்தாம்.
பொறுமையில் `பூமா தேவி’ என்றும், அமைதியில் `பசு’ வென்றும் சொல்பவர்கள் இந்துக்கள்தான்.
ஆகவே, பொறுமையும் அமைதியும் நிறைந்தவள் தாய் என்பது இந்துக்கள் மரபு.
பொறுமை, அமைதி, ரத்த பாசம், தன் வயிற்றைப் பட்டினி போட்டு மகனுக்கு ஊட்டுதல் இவையே தாய்மை!
இந்துக்களிடையே ஒரு கதை உண்டு.
ஒரு தாய்; அவளுக்கு ஒரு மகன்; அந்த மகனோ தாசிலோலன்; ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான்.
`மனம் போனபடியே பொருள் போகும்’ என்றபடி பொருளையும் பறிகொடுத்தான்.
அவனிடம் பொருளில்லை என்பதை அறிந்த கணிகை அவனைத் துரத்தியடித்தாள்.
அவனோ மோக லாகிரி முற்றி, “உனக்கு எது வேண்டுமோ கொண்டு வருகிறேன்” என்று காலில் வீழ்ந்தான்.
அவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, “உன் தாயின் இருதயம் எனக்கு வேண்டும்” என்றாள்.
காம மயக்கத்தில் சிக்கிய அவன், தாயிடம் ஓடினான்.
“அம்மா! அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டும் என்கிறாள். அவளை என்னால் மறக்க முடியாதம்மா” என்றழுதான்.
தாய் கேட்டாள்:
“அதன்மூலம் அவள் திருப்தியடைந்து உன்னுடனேயே இருப்பாளோ மகனே?”
“இருப்பாள்!” என்றான் மகன்.
தன்னைக் கொன்று இருதயம் வெட்டி எடுத்துக் கொள்ளும்படி தாய் கூறினாள்.
அவன் தாயைக் கொன்றான்; இருதயத்தை எடுத்தான். வலது கையில் ஏந்தியவாறு கணிகை வீடு நோக்கி ஓடினான். வழியில் ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தான். கையிலிருந்த தாயின் இருதயம் நான்கு அடி தள்ளி விழுந்தது.
அடிபட்டு விழுந்த அவனைப் பார்த்து, அதே இருதயம் சொன்னது:
“ஐயோ! வலிக்கிறதா மகனே! நான் உயிரோடில்லையே உனக்கு மருத்துவம் செய்ய!”
மகன் “அம்மா!” என்றலறினான். அவன் ஆவி பிரிந்தது.
ஆம், அதன் பெயர்தான் தாய்மை!
ஓர் இடத்தில் நான் சொன்னேன், “இறைவன் உன் ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறான்” என்று.
ஆனால், ஓர் அன்னையோ உன் ஆத்மாவுக்கும் உடம்புக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறாள்.
கடைசியாக, தாயை மதிப்பவர்களுக்கு, பக்தி செலுத்துவோர்களுக்கு, எப்படி வாழ்வு வரும் என்பதைச் சாதாரண மனிதனுக்கும் புரியும்படி சொல்கிறேன்.
இன்று படவுலகில் இருபது வருஷங்களாக அசைக்க முடியாமல் இருந்துவரும் நட்சத்திரங்கள், அரசியலில் திடீரென்று, அதிர்ஷ்டம் வாய்ந்த குறைந்த கல்வியே உள்ள தலைவர்கள், அனைவரையும் எண்ணிப் பாருங்கள். அவர்கள் அனைவரும் தாயிடம் பக்தி செலுத்திய ஒரே காரணத்தினால் முன்னுக்கு வந்தவர்கள்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - தாய் -ஒரு விளக்கம் ! , தாய், புத்தகங்கள், இருதயம், மலர், அவளை, அந்த, என்றும், அவன், மகன், தாயின், வேண்டும், விளக்கம், அர்த்தமுள்ள, இந்துமதம், அவள், கணிகை, பறிகொடுத்தான், உனக்கு, தாயிடம், பொறுப்பேற்றுக், பக்தி, நான், மகனே, ஓடினான், அம்மா, தாய்மை, சிறந்த, இறைவனின், பாருங்கள், செடியின், ஒன்று, ஒவ்வொரு, உண்டு, இந்துக்கள், பூர்வஜென்ம, ரத்த, மாதா&, என்பது, உலகத்திலேயே, எப்படி, மகனோ