அர்த்தமுள்ள இந்துமதம் - துக்கம் தொடாதவனே யோகி
மனதில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீங்கினால், அது தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பி விடும். ஒழுங்கினாலும், கட்டுப்பாட்டினாலும் தான் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும்.
இந்தச் சரீரக் கூட்டிலிருந்து ஆத்மா பிரிந்து போவதற்கு முன்பு, சரியான கல்வியின் மூலமும் அப்பியாசத்தின் மூலமும் கட்டுப்பட்டு, ஒழுங்காக வாழ்ந்து அசுத்தங்களைப் போக்கிக் கொண்டு விட வேண்டும். அப்படி செய்து ஜயித்தால், கடைசியில் தேக வியோகமே பரமாத்மாவுடன் சேர்ந்து விடுகிற யோகமாகி விடும்.
யோகிக்கு அடையாளம் என்ன? பரமாத்மாவைச் சேர்ந்து விட்ட அவனது மனசு, வேறு எதையுமே சேர்த்துக் கொள்ள நினைக்காது.
மனசு அதற்கப்புறம் ஓடவே கூடாது. அப்படி ஆகிவிட்டால் தான், அதற்கப்புறம் இப்போது இந்த மனசினால் நமக்கு உண்டாகி இருக்கிற அத்தனை தொந்தரவுகளும் தொலைந்து போகும். அந்த நிலையைப் பெறுவதற்கு எதைச் சேர வேண்டும்? மனது எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதைத்தான் சேர வேண்டும்.
மனது, அதன் மூலத்தில் சேர்ந்து விட்டால் அங்கே அப்படியே கரைந்து போய்விடும்; அப்புறம் ஓடாது. அதுவே சகல தொந்தரவுகளிலிருந்தும் விடுபட்ட நிலை.
நதி இருக்கிறது. அதன் மூலம் உண்டான இடம் என்ன? சமுத்திரம். சமுத்திர ஜலம்தான் ஆவியாகப் போய், வேறொரு இடத்திலிருந்து நதியாக ரூபம் எடுக்கிறது. அந்த ஆறு ஓடாத ஓட்டமில்லை. இப்படி ஓடி ஓடிக் கடைசியில், தன் மூலமான சமுத்திரத்தில் வந்து விழுகிறது. அப்புறம்? அதற்குத் தனி ரூபம் உண்டா? ஓட்டம் உண்டா? ஒன்றும் இல்லை.
இப்படி நதிகளுக்கெல்லாம் மூலமாக இருந்து, முடிவில் அவற்றைத் தன்னிலே சேர்ந்துக் கொள்கிற சமுத்திரம் மாதிரி, தம் மக்களை எல்லாம் முடிவான சேர்க்கையில், யோகத்தில் தன்னோடு கரைத்துக் கொள்கிற ஒன்று இருக்கிறதா என்றால் இருக்கிறது; சமாதி நிலையில் ஞானிகள், யோகிகள் தங்கள் தனி மனசைக் கரைத்து விட்டு, வெளிப்பிரக்ஞையே இல்லாமல் இருக்கும் போது, அந்த வஸ்துவை விட்டு விட்ட மாதிரி நமக்குத் தோன்றினால் கூட உண்மையில் இது நீங்காத சேர்க்கைதான். உள்ளூர அந்தச் சேர்க்கையின் அனுபவமேதான்.
அவர் வெளிப் பிரக்ஞையோடு இருப்பது மாதிரி நமக்குத் தோன்றுகிற போது கூட, அதை அடைய வேண்டும் என்ற ஆசை எதுவுமே அவருக்கு இல்லை. ஏதாவது ஒன்று தனக்கு வேண்டுமென்று, கொஞ்சம் கொஞ்சம் ஒருவனுக்குத் தோன்றி விட்டால் கூட, அவன் யோகியில்லை. அவன் ஸ்வாமியைச் சேரவில்லை என்று அர்த்தம்.
யோகியின் அடையாளத்தை வேறு விதமாகவும் சொல்லலாம். அவனுடைய சித்தம் பரமாத்மாவிடமே நிலைத்து விட்டது என்றால், அதற்கப்புறம் எந்தப் பெரிய துக்கம் வந்தாலும் அது துளி கூட ஆடக் கூடாது. அசையக்கூடாது. அழக்கூடாது. இப்படியில்லாமல் சித்தம் கொஞ்சம் சலித்து விட்டால் கூட, அவன் பரமாத்மாவை அடையவில்லை என்றே அர்த்தம். யோகிக்கு அநேக துக்கம் வரும்; அதாவது ஊர் உலகத்துக் கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால், அவனுக்குத் துக்கம் லவலேசமும் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பது கூடச் சரியல்ல. அது உணர்ச்சியே இல்லாத நிலையல்லவா? யோகி ஒருத்தன்தான், பூரண பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் ஸ்தானந்தனாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதே இல்லாமல் சதா ஆனந்தமாக ஒருவன் உட்கார்ந்து கொண்டிருந்துவிட்டால் அது தான் யோகம்.
அவனுக்கு ஸ்வபாவமாகவே கருணை மாத்திரம் சுரந்து கொண்டிருக்கும், யாரிடத்திலும் கோபம் வெறுப்பு வராது. இன்னொரு பிராணிக்குத் தன்னால் இம்மியும் ஹிம்சை வரக்கூடாது என்கிற எண்ணம் மட்டுமே இருக்கும்.
வெளி உலகத்தின் பார்வைக்கு, அவன் என்னென்ன காரியம் செய்தாலும் அதிலெல்லாம் அவனுக்குத் `தான் செய்கிறோம்’ என்ற அகங்கார எண்ணமே இராது. சொந்தப்பற்றே இல்லாமல் பரம காருண்யம் மட்டுமே அவனுடைய காரியங்களில் இருக்கும். வெளியே பார்க்கிற காரியம் கடுமையாக இருந்தாலும் கூட, உள்ளுக்குள்ளே அதுவும் பரம காருண்யம் தவிர வேறாக இராது.
மகா யோகியான பரமேஸ்வரன் இப்படித்தான் சம்ஹாரம் செய்கிறார். நமக்கு அது கொடுமையாகத் தெரியலாம்.
ஒவ்வொரு ஜீவனும் எத்தனை பாப ஜீவனாயிருந்தாலும் சிறிது காலமாவது கர்ம கதியிலிருந்து விடுதலை அடைந்து தன்னிடம் லயித்திருப்பதற்கு அவர் சம்ஹாரம் செய்கிறார். தினமும் நமக்குத் தூக்கத்தைக் கொடுத்து, அந்த நேரத்தில் சுக துக்கங்களிலிருந்து நமக்கு விடுதலை தருகிற மாதிரி, இந்தச் சரீரம் விழுந்த பின்னும் கொஞ்ச காலம் சிரம பரிகாரம் தருகிறார்.
தினமும் தூங்கிவிட்டு மறுநாள் விழித்துக் கொண்டு பழையபடி நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி இச் சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின், இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள்கிறோம். இந்த அலைச்சல், புனரபி மரணம்- கூடாது.
இந்தச் சரீரம் போனால், இன்னொரு முறை சரீரம் வரக் கூடாது. அப்படிச் செய்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான்.
குழந்தையாக இருக்கிற காலத்தில் இருந்தே இவற்றில் எல்லாம் பழக்கம் வேண்டும். அப்படிப் பழகினால்தான். கோடானுகோடி ஜனங்களை இந்த மாதிரி படிப்படியாக உயர்த்துவதற்கு முயன்றால்தான் எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுதான் இத்தனை மனுஷ்ய சிருஷ்டிக்கும் பலன்.’
ஆகவே,
நிம்மதியற்ற மனிதனாக நீங்கள் இல்லாமல் ஒரு யோகியாக, ஞானியாக மாறுங்கள்.
கோடிக்கணக்கான மக்களைப் பழக்குவதற்குக் குருவாக மாறுங்கள்.
இந்திய சமுதாயத்தை ஆனந்த மயமான சமுதாயமாக்க ஒத்துழையுங்கள்.
உள்ளத்தில் உண்மை ஒளியைக் காண்பதற்கு உலகத்திற்கு வழிகாட்டுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - துக்கம் தொடாதவனே யோகி, வேண்டும், மாதிரி, துக்கம், அவன், யோகி, புத்தகங்கள், சரீரம், கூடாது, இல்லாமல், அந்த, எல்லாம், அப்படி, அதற்கப்புறம், இன்னொரு, விட்டால், சேர்ந்து, கொஞ்சம், நமக்கு, இருக்கும், இந்துமதம், இந்தச், நமக்குத், தான், தொடாதவனே , அர்த்தமுள்ள, பட்ட, அவனுக்குத், பிரக்ஞையோடு, போது, அவர், அர்த்தம், அவனுடைய, சித்தம், இராது, தினமும், விடுதலை, சிரம, பரிகாரம், மாறுங்கள், விழித்துக், செய்கிறார், சம்ஹாரம், கருணை, இருக்கிறவன், மட்டுமே, காரியம், காருண்யம், கட்டை, சமுத்திரம், செய்து, கொண்டு, கடைசியில், யோகிக்கு, விட்ட, என்ன, மூலமும், விடும், என்பதே, சிறந்த, ஒருவன், அதாவது, மனத்தின், மனசு, வேறு, இல்லை, உண்டா, கொள்கிற, ஒன்று, என்றால், இப்படி, ரூபம், இருக்கிற, கொள்ள, மனது, அப்புறம், இருக்கிறது, விட்டு