அர்த்தமுள்ள இந்துமதம் - இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கம
எந்த இளைஞனும் நிதானிக்க வேண்டிய இடம் இதுதான்; ஆனால், நிதானிக்கவே முடியாத நேரமும் இதுதான்.
பக்குவமற்ற ரத்த அணுக்களின் பரிணாம வளர்ச்சி, உற்சாகத்தையே மூலதனமாக்கி விடுகிறது.
உணர்ச்சியே பிரதானமாக அங்கம் வகிக்கிறது.
இது கற்பூரப் பருவம்.
ஆசைத்தீ உடனுக்குடன் பற்றி கொள்ளும் பருவம்.
நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் மிகவும் பயத்தோடும், பொறுப்போடும் கல்வி கற்றாலும், ரத்த வேகம் அவர்களையும் விடுவதில்லை.
இந்த நாளில், ஒரு இளைஞன் எந்தெந்த உணவுகளை விரும்புகிறானோ, அவற்றிலுள்ள தீமைகளை யார் சொன்னாலும் கேட்க மாட்டான்.
கடலை மாவில் செய்த பலகாரங்களையும், வாய்வுப் பதார்த்தங்களையும் விரும்பிச் சாப்பிடுவான்.
அவற்றின் எதிரொலி நாற்பது வயதுக்கு மேல்தான் அவன் காதுகளுக்குக் கேட்கும்!
இருபது வயதிலிருந்து முப்பது வயது வரை, நான் சேலத்தில் இருந்தபோது ஒவ்வொரு இரவிலும் குறைந்தது அரைக்கிலோ உருளைக்கிழங்கு சாப்பிடுவேன். அதற்கேற்ற உழைப்பு இல்லாததால், இப்போது எனக்கிருக்கும் ஒரே துயரம்- வாய்வு துயரம்.
இளம் பருவத்தில் நடப்பதும் ஓடி ஆடுவதுமாக இருக்கிற இளைஞன், உட்கார்ந்து வேலை செய்யத் தொடங்கியதும் உடல் துன்பம் ஆரம்பமாகும்.
இளம் வயதிலிருந்து, மரண காலம் வரையிலே ஒருவன் நடந்து கொண்டே திரிந்தால், பெரும்பாலான நோய்கள் போய்விடும்.
தினசரி கால் வலிக்க மலை ஏற வேண்டும் என்று தான், இந்துக்கள் கோயில்களை மலை மீது கட்டினார்கள்.
உடம்பு வியர்க்க மலை மீது ஏறி நூற்றியொரு பிரகாரம் சுற்றி, அதன் பிறகு குளிர்ந்திருக்கும் தண்ணீர்க் குளத்தில் விழுந்து குளித்தால் அது போன்ற சுகமும், ஆரோக்கியமும் வேறெதுவும் இல்லை.
பாகற்காய், நாவற்பழம் போன்றவற்றை அந்த வயதிலிருந்தே விரும்பி அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டு வந்தால், தகப்பனுக்கு சர்க்கரை வியாதி இருந்தாலும் மகனுக்கு வராது.
சந்நியாசிகளின் உணவு முறை எப்போதும் இப்படித்தான் இருக்கும்.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி அவர்களுக்கு இப்போது எழுபது வயதாகிறது. கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக அவர் சமயப்பிரச்சாரம் செய்து வருகிறார். ஒரு நாள் கூட அவர் உடல் நலிவு என்று ஓய்வெடுத்துக் கொண்டதில்லை.
இந்த ஆரோக்கியத்திற்குத் தெய்வ பக்தியும், உணவு முறையுமே காரணமாகும்.
ஆன்மாவிற்குச் சக்தி தரத் தெய்வ பக்தியும், உடலுக்கு வலுவு தர உணவும், ஒழுங்கும்.
அகால உணவை இளைஞன் அறவே ஒழிக்க வேண்டும்.
சந்தியா காலம், உச்சிவேளை, அர்த்த சாமம் என்ற கோயில் பூஜைக்குக்கூட குறிப்பிட்ட நேரங்கள் ஒதுக்கப்படுகின்றன.
உப்பு, உறைப்பு, புளிப்பு, இனிப்பு இவை நான்கும் குறைவாகவும், கசப்பும், துவர்ப்பும் அதிகமாகவும் சேர்த்துக் கொண்டே வந்தால், பிற்காலத்தில் உடம்பிலிருந்து அடிக்கடி ரத்தம் எடுக்க வேண்டி வராது.
காப்பி, தேநீர் அருந்துகின்ற இளைஞர்கள் காபியை உடனே நிறுத்தி விட்டுத் தேநீரை எவ்வளவு வேண்டுமானாலும் அருந்தலாம். அதில் ஐந்து வகை வைட்டமின் சத்துக்கள் இருப்பதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கம, இளைஞர்கள், புத்தகங்கள், வேண்டிய, இந்துமதம், அர்த்தமுள்ள, இளைஞன், கடைப்பிடிக்க, உணவு , பழக்கம, கொண்டே, மீது, வேண்டும், வந்தால், வராது, பக்தியும், தெய்வ, அவர், உணவு, காலம், துயரம், இதுதான், விடுகிறது, வயதுக்கு, சிறந்த, ரத்த, பருவம், இளம், இப்போது, வயதிலிருந்து, உடல்