அர்த்தமுள்ள இந்துமதம் - விரும்பாதவனும் முடியாதவனும்
தன்னால் செய்ய முடிந்த ஒன்றைச் செய்ய விரும்பாதவன் சமுதாய விரோதி.
ஆனால், அதே காரியத்தைச் செய்ய விரும்பியும் முடியாதவன் அனுதாபத்திற்குரியவன்.
நாடிழந்த பாண்டவர்கள் துரியோதனனிடம் கேட்டது என்ன?
`குறைந்த பட்சம் சில ஊர்களாவது, சில வீடுகளாவது கொடுங்கள்’ என்பதுதான்.
செய்ய முடியாதா துரியோதனனால்?
முடியும்; ஆனால் விரும்பவில்லை.
அதன் விளைவே பாரத யுத்தம்.
அனுமானும் விபீஷணனும் உரைத்தபடி சீதையைத் திரும்பக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திருக்க முடியாதா, இராவணனால்?
முடியும்; ஆனால் விரும்பவில்லை.
அதன் விளைவே ராம-ராவண யுத்தம்.
`உன்னால் முடிந்ததைச் செய்’ என்று ஏன் பெரியவர்கள் உபதேசிக்கிறார்கள்?
“பெரிய விஷயத்தைச் செய்ய நினைத்தேன், முடியவில்லை” என்று வருந்திக் கொண்டிருக்காதே; “எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்” என்பது அதன் பொருளாகும்.
என் உடம்பு என் கையளவில் எட்டுச்சாண் உயரம் இருக்கிறதென்றால், எறும்பின் உடம்பு அதன் கையளவில் எட்டுச்சாண் தான்.
உணவைச் சமைத்ததும் யாராவது ஒரு அன்னக் காவடிக்கோ, பிச்சைக்காரனுக்கோ போட்டுவிட்டுச் சாப்பிடுவது என்ற பழக்கம் இந்துக்களுக்கு உண்டு.
பெட்டி நிறைய பணம் இருக்கிறது. பெட்டிச் சாவியும் செட்டியார் மடியில் இருக்கிறது. கொட்டிய கண்ணீரோடு திருமணமாகாமல் கோதையர் சிலர் கஷ்டப்படுகிறார்கள். இவர் கொஞ்சம் பெட்டியைத் திறந்தால் இறைவன் அவர்களுக்குச் சொர்க்க வாசலைத் திறப்பான். இவரால் முடியும்; ஆனால் விரும்பவில்லை.
இந்து தர்மத்தில் இவருக்குரிய தண்டனை என்ன?
வாழ்க்கையை ஓரளவுக்காவது அனுபவிக்க விரும்பியவர்களுக்கு அதனை மறுத்தாரல்லவா? அதனால் இவர் எதையும் அனுபவிக்க முடியாமல் போய்விடும்.
பல லட்சம் செலவு செய்து இவர் தம் பெண்ணுக்குக் கல்யாணம் செய்திருப்பார். அது மலடியாகப் போய்விடும். அல்லது வாழா வெட்டியாகப் போய்விடும்.
`அறஞ்செய விரும்பு’ என்றார் ஔவைப்பாட்டி.
`செய்’ என்று அவர் ஆணையிடவில்லை `விரும்பு’ என்றுதான் சொன்னார்.
காரணம், செய்ய முடியாதவரும் இருக்கலாம் அல்லவா!
அவன் விரும்பினால்கூட போதும்; அதுவே கருணையின் பரப்பளவாகும்.
யூதர்களை மன்னித்திருக்க முடியாதா, ஹிட்லரால்?
போரின் நாசத்தைத் தடுத்திருக்க முடியாதா ஹிட்லரால்?
முடிந்தும் அவன் விரும்பவில்லை. விளைவு …?
மற்றவர்களை அவன் எப்படி நடத்தினானோ? அப்படியே இறைவன் அவனை நடத்தினான்.
வண்டி மாட்டை நீ ஒரு அடி அடித்தால்கூட, அதற்குப் பதிலடி உனக்குக் கிடைக்கிறது.
வண்டி மாட்டுக்கு நீ வைக்கோல் போட்டால்கூட, அதற்குக் கைம்மாறாக ஒரு கவளச்சோறு உனக்குக் கிடைக்கிறது.
ஆகவே விரும்பு; முடிந்தால் செய்; முடியாவிட்டால் விரும்பு.
`விரும்பு’ என்ற உடனேயே தஞ்சாவூரைப் பார்த்து, இந்த நிலமெல்லாம் நம்முடைய நிலமாக இருக்கக்கூடாதா என்று விரும்பாதே!
அதன் பெயர் விருப்பமல்ல; ஆசை!
விரும்புவது என்ற வார்த்தையே நல்லதை விரும்புவதைத்தான் குறிக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - விரும்பாதவனும் முடியாதவனும், செய்ய, புத்தகங்கள், முடியாதா, விரும்பவில்லை, அவன், இவர், போய்விடும், விரும்பாதவனும், முடியும், இந்துமதம், அர்த்தமுள்ள, முடியாதவனும், `விரும்பு&, விரும்பு, ஹிட்லரால், கிடைக்கிறது, உனக்குக், வண்டி, அனுபவிக்க, உடம்பு, விளைவே, என்ன, சிறந்த, யுத்தம், செய்&, இருக்கிறது, எட்டுச்சாண், கையளவில், இறைவன்