நற்றிணை - 95. குறிஞ்சி
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க, ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று, அதவத் தீம் கனி அன்ன செம் முகத் துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க, கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து, |
5 |
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக் குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்; சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி; கொடிச்சி கையகத்ததுவே, பிறர் விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே. |
10 |
பக்கத்திலே குழலொலிப்பப் பலவாச்சியங்களு முழங்க ஆடுகின்ற கழைக்கூத்தி நடந்த முறுக்குண்ட புரியை யுடைய வலிய கயிற்றின் மீது; இனிய அத்திப் பழம் போன்ற சிவந்த முகத்தையும் பஞ்சுபோன்ற தலையையுமுடைய குரங்கினது வலிய குட்டி பற்றித் தூங்காநிற்ப; அதனைக் கண்ட குறச்சாதியாரின் இளமகார் பெரிய பாறையின்கணுள்ள மூங்கிலின்மேல் விசைத்து எழுந்து ஏறி நின்று தாளங் கொட்டாநிற்கும் அந்தக் குன்றின் இடத்துளதாகும்; கொழுவிய காவற்காடு சூழ்ந்த சீறூர்; என்னாற் காதலிக்கப்பட்ட நறுமணங் கமழுங் கூந்தலையுடைய கொடிச்சி அச் சீறூரின் கண் இருப்பவளாவாள்; அவளாலே பிணிப்புண்ட என்னெஞ்சமும் அக் கொடிச்சியின் கையகத்ததாயிராநின்றது; அவள் இரங்கி விடுத்தாலன்றி என்னெஞ்சம் பிறரால் விடுவித்தற்கும் இயலாதாகுங்காண்;
தலைமகன் பாங்கற்கு, 'இவ்விடத்து இத்தன்மைத்து' என உரைத்தது. - கோட்டம்பலவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 95. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, கொடிச்சி, நற்றிணை, சீறூர், வலிய, எழுந்து, நடந்த, எட்டுத்தொகை, சங்க, விசைத்து