நற்றிணை - 74. நெய்தல்
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார், நிறையப் பெய்த அம்பி, காழோர் சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும் சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை, |
5 |
'ஏதிலாளனும்' என்ப; போது அவிழ் புது மணற் கானல் புன்னை நுண் தாது, கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின் வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல் கண்டல் வேலிய ஊர், 'அவன் |
10 |
பெண்டு' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே! |
திருத்தமாகச் செய்யப்பட்டகதிரிட்டுமுறுக்கிய வலியகயிற்றாற் பின்னிய பெரியவலையை இடிபோல முழங்குகின்ற அலைகளையுடைய கடலிலிடும்பொருட்டு; நிறைய ஏற்றப்பட்ட தோணியைப் பரிக்கோற்காரர் பிணித்துச் செலுத்துகின்ற அடக்குதற்கு அரிய களிற்றியானையைப் போலப் பரதவர் செலுத்தாநிற்கும்; சிறிய மலரையுடைய ஞாழல் மரங்களையுடைய பெரிய கடற்கரைக்குத் தலைவனைக் குறித்து; அவன் நுமக்கு நட்புடையனல்லன் ஏதிலாளனுமாயினான் என்று பலருங் கூறாநிற்பர். போது அவிழ் புது மணல் கானல் புன்னை நுண் தாது அசை கொண்டல் வளி தூக்கு தொறும் அதற் கேற்ப மலர் விரிகின்ற புதிய மணற்பரப்பையுடைய சோலையிலுள்ள புன்னையின் நுண்ணிய மகரந்தப்பொடி ஓடுகின்ற கீழ்க்காற்று வந்து மோதுந்தோறும்; குருகின் வெளிய முதுகில் நெருங்கத் தூர்க்கா நிற்கும்; தௌ¤ந்த கடற்கரையிலுள்ள கண்டல் மரம் நிரம்பிய வேலியையுடைய இவ்வூரானது, அவன் பெண்டு என அறிந்தன்று ஆர்க்கும் பெயர்த்தல் அரிது அவனால் விரும்பப்படும் பரத்தையானவள் அச்சேர்ப்பனுக்கு மனைக்கிழத்தி யாயினன் என்று கூறாநின்றது. அங்ஙனம் உண்டாகிய வார்த்தையை பெயர்த்தொழித்தல் இனி யாவர்க்கும் அரியதொன்றாகும்; ஆதலிற் பாண ஈண்டு வாராதே கொள்!
தலைவி பாணற்கு வாயில்மறுத்தது. - உலோச்சனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 74. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், அவன், நற்றிணை, கொண்டல், தாது, குருகின், கண்டல், அறிந்தன்று, நுண், பெண்டு, கானல், சங்க, எட்டுத்தொகை, பரதவர், போது, புது, அவிழ், புன்னை