நற்றிணை - 56. பாலை
குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய, கண் களி பெறூஉம் கவின் பெறு காலை, எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச் சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா, |
5 |
ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்கொல்லோ அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து, தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி, 'ஏதிலாட்டி இவள்' எனப் போயின்று கொல்லோ, நோய் தலைமணந்தே |
10 |
குறிதாக நிற்றலையுடைய குராமரத்தின் சிறிய அரும்புகள் முதிர்ந்த நறியமலரில் வண்டு விழுதலா னெழுந்த மணத்தைத் தென்றற் காற்றுப் புகுந்து கலந்துவீச; கண்கள் அவற்றைநோக்கி மகிழ்வடைகின்ற அழகமைந்த அத்தறுவாயில்; ஒளி பொருந்திய வளையை நெகிழ்வித்தோரைக் கருதித் துன்பமுறுதலின் அவர்பாற் சென்ற என் நெஞ்சமானது; ஆண்டு அவர் செய்யும் வினைக்குச் சூழ்ச்சி சொல்லும் துணையாயிருந்து முற்றுவித்து அவருடன் ஒருசேர வருதற்கு விருப்பமுற்று வருந்தியிருக்கின்றதோ ?; அன்றி அவர் அருள் செய்யாமையாலே; கலங்கி இங்கு வந்து அஃது என்னைப் பிரியுமுன்னிருந்த நலன் இழந்துவிட்டதனாலாகிய எனது பொன்னிறமான பசலையை நோக்கி; 'இவள் அயலிலாட்டியாகும் என்னை விடுத்தவளைக் காண்கிலேன்மன் !' என்றெண்ணி நோய்மிகக் கொண்டு என்னைத் தேடிச் சென்றொழிந்ததோ? அறிகிலேன்; ஆதலின், யான் எங்ஙனம் ஆற்றுகிற்பேன்;
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைவி சொல்லியது. - பெருவழுதி
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 56. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, நலன், நோக்கி, இவள், அவர், வந்து, சென்ற, எட்டுத்தொகை, சங்க, வண்டு, ஆதலின்