நற்றிணை - 42. முல்லை
மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள் அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய பழ மழை பொழிந்த புது நீர் அவல நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால், |
5 |
'ஏகுமின்' என்ற இளையர் வல்லே இல் புக்கு அறியுநராக, மெல்லென மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ, சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ |
10 |
அவிழ் பூ முடியினள் கவைஇய மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே. |
பாகனே ! நீரின்மையாலே கோடையில் பல நாளாக வறட்சியுற்ற உயிர்கள் மகிழ்ச்சியோடு தத்தந் தொழிலை மேற்கொண்டு நிகழ்த்துமாறு; தொன்று தொட்டுப் பெய்யும் வழக்குப் போல மழை பெய்ததனாலாய புதிய நீர் நிரம்பிய பள்ளங்கடோறும் நாவினால் ஒலிக்கின்ற பலவாய கூட்டத்தையுடைய தவளைக ளொலித்தலானே; நாம் செல்லுகின்ற தேரிற் கட்டிய மணிகளின் ஒலியை ஒள்ளிய நுதலையுடைய நம் தலைவி கேட்டறிந்திலள்; ஆதலின் நீயிர் முன்னே சென்று கூறுமினென்றபடி அக்கட்டளையை ஏற்ற இளையோர் விரைந்து நமது மாளிகையிற் புகுந்து அறிவித்தனராக; உடனே மெல்ல அதுகாறுஞ் சீவிக்கை செய்யாத கூந்தலின் மாசு போகத் தூநீராடிச் சிலவாய மலரைக் கொண்டு பலவாய கூந்தலிலே முடிக்கின்ற அத்தறுவாயில் யான் உள்ளே புகுதலின்; என்னை நோக்கித் தன் மெய்துவள வந்து அவிழ்ந்து குலையு முடியினளாய் என்னை அணைத்துக் கொண்ட, மடம் மா அரிவை மகிழ்ந்து அயர் நிலை மறத்தற்கு அரிது மடப்பத்தையுடைய சிறந்த நம் அரிவை மகிழ்ந்து கொண்டாடுந் தன்மை யான் மறத்தற்கரியதுகாண்; அத்தகையாள் இன்றும் மகிழ்ந்தணைக்குமாறு விரைவிலே தேரைச் செலுத்துவாயாக !
வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - கீரத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 42. முல்லை, இலக்கியங்கள், நற்றிணை, மகிழ்ந்து, முல்லை, அரிவை, அயர், பலவாய, என்னை, யான், புகுதலின், கொண்டு, சங்க, எட்டுத்தொகை, மறத்தற்கு, நீர், மாசு, நிலை